கீதை இந்துமதநூலா, தத்துவநூலா?: எதிர்வினை
கீதைவெளி என்ற தனது சமீபத்திய பதிவு ஒன்றில் "கீதை எக்காலத்திலும் ஒரு மத நூலாகக் கருதப் படக் கூடாது. தத்துவ நூலாகவே கருதப் பட வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்து ஜெயமோகன் எழுதியிருந்தார்.
இது பற்றி கற்றறிந்த நண்பர்கள் சிலர் விவாதிக்க நேர்ந்தது. அவர்கள் முன்வைக்கும் சில முக்கிய கேள்விகளையும், விஷயங்களையும் இங்கு பதிவு செய்கிறேன். இதனை ஒரு கடிதமாக ஜெயமோகனுக்கும் அனுப்பியிருக்கிறேன்.
ஹரி கிருஷ்ணன்:
// ஜெ.மோ: புத்தகத்தின் மீது மரியாதை உள்ள கீழைநாட்டினன்தான் நானும்" என்று கூறும் நடராஜ குரு, "அதன் முதல்வரியைப் படி" என்கிறார். நித்யா படிக்கிறார். "கீதை இந்துமதத்தின் புனித நூல்" என்று முதல்வரி. நடராஜகுரு "பிரஸ்தானத் திரயம் என்றால் என்ன தெரியுமா?" என்று நித்யாவிடம் கேட்கிறார். நித்யா, "உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை" என்கிறார். "இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று தத்துவ நூல்களில் ஒன்று என்று. அது மத நூல் என்று இவர் கூறுகிறார். மதநூலா தத்துவநூலா, எது சரி?" //
தெளிவான குழப்பம்.
பிரஸ்தான திரயம் என்றால் என்ன தெரியுமா என்று கேள்வி. உபநிடதம், பிரம்ம சூத்திரம், கீதை என்று பதில். 'உபநிடதம், பிரம்ம சூத்திரம், கீதை ஆகிய மூன்றும் பிரஸ்தான திரயம்' என்பது ஒரு விடை. அந்த விடை 'பிரஸ்தான திரயம்' என்றால் என்ன என்பதற்கான முழுமையான விடையாகாது. திரயம் என்றால் மூன்று. பிரஸ்தானம் என்ற சொல்லுக்கு என்ற பொருள் என்கின்ற டெஃபனிஷன் (அவர் பார்வையின்படி) சொல்லப்படவில்லை. இதைச் சொன்னால்தான் வாதத்தின் அடுத்த நிலைக்கே போகமுடியும். பிரஸ்தானம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? அதைச் சொல்ல வேண்டாமா?
பிரம்ம சூத்திரத்துக்கு எழுதிய முன்னுரையில் டிஎம்பி மகாதேவன் இவ்வாறு சொல்கிறார். "The three basic texts of Vedanta are te Upanisads, the Bhagavad-gita and the Brahma-sutra. Together they are referred to as prasthana-traya, triple canon of Vedanta".
இந்த அடிப்படையில் பார்த்தால், கீதை ஒரு மதநூல் ஆகாது என்றால், வேதாந்தத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை; வேதாந்தத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்றால் வேததத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. பேஷ்!
(ஜடாயு: இதே canon என்ற சொல்லை மூலநூல் என்பதைக் குறிக்க முதலில் பயன்படுத்தும் ஜெ.மோ, பின்னர் கீதை "பிரஸ்தானத்ரயங்களில்" ஒன்று, ஆனால் canon அல்ல என்கிறார்.)
// ஜெ.மோ: "டாக்டர் ராதாகிருஷ்ணன் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றால் உரிய காரணம் இருக்கும்" என்கிறார் நித்யா. பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு நித்யாவுக்கு கிடைக்கிறது. சென்னை விவேகானந்தா கல்லூரியில் அவர் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றும் காலகட்டம் அது. அக்கேள்வியை ராதாகிருஷ்ணனிடமே கேட்கிறார். அவரால் பதில் கூறமுடியவில்லை. பதிப்பாளர் அவசரப்படுத்தியதனால் எழுதிய நூல் அது என்று கூறி நழுவுகிறார். நடராஜ குருவிடம் இதைக் கூறிய போது நடராஜகுரு "கவனமில்லாது எழுதப்படும் நூல்கள் ஆபத்தானவை" என்கிறார். //
உட்டாலக்கடி. எழுப்பப்பட்ட கேள்வி முன்னுரையில் ஒரு வரியைப் பற்றியது. ராதாகிருஷ்ணன் சொன்ன பதிலோ அந்த ஒருவரியைப் பற்றியது. அளிக்கப்படும் தீர்ப்போ, ராதாகிருஷ்ணன் எழுதிய முழு உரையுமே அவசரத்திலும் கவனமில்லாமலும் எழுதப்பட்டது' என்பது போன்ற ஒரு தோற்றம். டாக்டர் ராதாகிருஷ்ணனுடைய உரை காரிலிருந்து வெளியே வீசப்படவேண்டிய ஒன்று. ஏனென்றால் அது கீதையை இந்து மதத்தின் புனித நூல் என்று முன்னுரையில் ஓரிடத்தில் குறிக்கிறது. ஆகவே நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்? கீதை ஒரு மதநூல் அல்ல என்றுதானே?
பிறகு, ஜெயமோகன் எழுதியிருக்கும் இந்த வரிக்கு என்ன பொருள்?
// ஜெ.மோ: மாறாக 'என்னைப்பற்றி விவாதிப்பாயாக' என்று அறைகூவும் மதநூலாக நிற்கிறது கீதை. இந்து மன அமைப்பும் சரி, இந்திய சட்டமும் சரி, அதை ஆதரிக்கின்றன. //
இப்ப இந்தக் கட்டுரையைக் காரிலிருந்து வெளியே எறியவேண்டுமானால் எறிந்துவிடலாம். கம்ப்யூடரிலிருந்து வெளியே எறிய முடியவில்லை. எப்படி அதைச் செய்வது என்று ஜெமோ சொல்லட்டும்.
மதநூலுக்கும் தத்துவ நூலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? தத்துவம் என்ற சொல்லுக்கு என்ன வரையறை? Philosophy, philosophical போன்ற எல்லாச் சொற்களுக்கும் தத்துவம் என்ற சொல் இணையாகுமா? தத்-துவம் (நீ அது) என்று சொல்லும்போதே அதற்குள் இந்து மதம் வந்துவிடுகிறதே, அதன்பிறகு, தத்துவநூல் என்று அதைச் சொன்னால் 'அது இந்து மதத்தின் புனிதநூல்' என்ற ஒரே வரியில் தரநிர்ணயம் செய்யப்பட்டு வெளியில் வீசப்பட்ட உரையின் கதிக்கு இதுவும் ஆளாகாதா?
அது ஒருபக்கம். தத்துவம் என்ற சொல்லைப் பொதுவான ஒன்றாகவே வைத்துக் கொள்வோம். திருக்குறள் தத்துவநூல் என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. பல குறட்பாக்களுக்கு மதம் சாராமல் விளக்கம் தரமுடியாது என்றபோதிலும். விதுரநீதி, அர்த்த சாஸ்திரம், Art of War எல்லாமும் தத்துவங்களை, மதம் கடந்த தத்துவங்களை, எடுத்துச் சொல்கின்றன என்று சொன்னால்கூட புரிந்துகொள்ள முடிகிறது. கீதையோ 'எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண்புகு' என்று சொன்ன நூல். அப்படியானால், கடவுளுக்கும், கடவுளைச் சரண்புகுவதற்கும் மதத்துக்கும்--மிகக் குறிப்பாக இந்து மதத்துக்கும்--சம்பந்தமில்லை என்று சொல்லலாம்.
// ஜெ.மோ: தினம் காலை ஒரு சுலோகம் படித்து கும்பிடும் பக்தர்கள் தவிர வேறு எவரும் கீதையைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கும் போதே இந்த பிரம்மாண்டமான விவாதப்பரப்பில் ஒரு குரலாக ஆகிவிடுகிறார்கள். //
இதுவும் எனக்குப் புரியவில்லை. பகவத் கீதையை யாராவது வழிபடுகிறீர்களா? அன்றாடமோ அல்லது வாரம் ஒருமுறையோ அதிலிருந்து பாராயணம் செய்து, தூப தீபம் காட்டி, கீதையை யாராவது கும்பிடுகிறீர்களா? அது என்ன குரு கிரந்த ஸாஹிபா? 'கீதையின்மேல் ஒரு வழிபாட்டு உணர்வு இருக்கக் கூடாது' என்றும், 'கீதையை அன்றாடம் வழிபடும் மக்கள்'என்றும் கட்டுரையில் வேறு இடங்களில் சொல்கிறார். என்னிடம் கீதைக்கு ஆறு வேறுவேறு உரைகள் இருக்கின்றன. நான் அவற்றைப் படிக்கத்தான் பயன்படுத்துகிறேன். வழிபடுவதில்லை. எனக்கு அனுபவமில்லாத காரணத்தால் கேட்கிறேன். உங்களில் எத்தனை பேர் கீதைக்கு ஊதுவத்தி ஏற்றிவைத்து, கற்பூரம் காட்டி கன்னத்தில் போட்டுக்கொண்டு விழுந்து விழுந்து நமஸ்கரிக்கிறீர்கள்?
(ஜடாயு: கீதை மட்டுமல்ல, எல்லா நூல்களையும் கலைமகளின் வடிவமாகக் கருதி சரஸ்வதி பூஜையன்று வழிபடும் மரபு உள்ளது. இந்தக் கலாசாரத்தைப் பற்றி இங்கு ஜெ.மோ குறிப்பிடவில்லை, அதனை அவர் ஏளனம் செய்யவும் மாட்டார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாவில் சரஸ்வதி உறைவது என்ற படிமம் பற்றி ஒரு ரிக்ஷாக் காரனுக்கு இருந்த புரிதல் கூட ஈவேராவுக்கு இல்லை என்று இன்னொரு கட்டுரையில் எழுதியிருந்தார்)
சேதுபதி:
சாரே, என் குழப்பமும் இதுதான்.. ஏன் தத்துவத்தையும், மதத்தையும் மிகத் தெளிவாக, தனியாகப் பிரித்து வைத்துவிட முடியுமா? 'புல்லாகிப் பூடாகி புழுவாகி,மரமாகி' என்று மாணிக்கவாசகர் உருகுவது மதம் என்றால் அப்படிப்பட்ட மதமும், பக்தி உணர்வும், ஒரு தத்துவ விசாரம் இல்லாமல் தனியாக எங்கோகாற்றிலிருந்து வருமா? எந்த வித விசாரமும் இல்லாமல் கடவுளே கதி என்றுகாலில் விழுந்து கிடப்பதற்கும் சரணாகதித் தத்துவம் என்கிறார்களே? இப்படிப்பட்ட அமைப்பு சார்ந்த சாய்வை எதிர்த்துதானே எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்ற **தத்துவம்** ஒன்று கிளம்பி ஊரெல்லாம் வெறுமை பரப்பிச் சென்றது?
சரி, கீதையை மதநூல் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு தத்துவம் என்றுமட்டுமே வைத்துக் கொள்வோம். அப்படி கீதை மதநூல் இல்லை என்று டிக்ளேர்செய்தபின் என்ன செய்ய வேண்டும்? முதலில் அதை பக்தி நூல் ஷெல்ஃபில் இருந்து தத்துவ நூல் ஷெல்ஃபில் வைத்துவிட வேண்டுமா? என்னிடமிருக்கும் ஷெல்ஃபில் ரமணரும், சார்த்தரும் அருகருகே இருக்கிறார்கள். இனிமேல்தான் பிரிக்க வேண்டும் :-)
இப்படி வகைப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று எனக்கு இன்றுவரை
புரியவில்லை.
1) கீதை மத நூல் இல்லை என்று டிக்ளேர் செய்துவிட்டால் எல்லா மதத்துக்குக்காரர்களும் அதைப் படிப்பார்கள் என்ற நல் எண்ணமா?
2) கீதை போன்ற **தத்துவங்கள்** தேவைப்படும் மதம் சாராத எழுத்தாளர்கள்ஒளிந்து ஒளிந்து கீதை படிப்பதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதாலா?
3) இல்லை இப்போது டிக்ளேர் செய்துவிட்டால் இன்னும் ஐம்பது வருடங்களில்மொத்தமாக கீதை உருவானதே பைபிளிலிருந்துதான் என்று சொல்லிவிடலாம் என்பதாலா?
யாருக்காவது பிரிந்தால் விளக்குங்கள்.
பி.கு: அடுத்து ஜெமோ எது இந்து மதத்தோடு தொடர்பில்லை என்று சரியாகக் கண்டுபிடித்து 65656 என்ற நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களுக்கு 'பதஞ்சலி யோக சூத்திரத்தில் நாட்டார் வழிபாடுகளின் கூறுகள்' என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
ஆனந்தர்:
ஜெயமோகன் கம்யூனிஸ்ட்டுகள் பல காலமாகச் சொல்லிவருவதைத்தான் சொல்லுகிறார்.ஹிந்து தத்துவம் என்ற ஒன்று கிடையாது. ஹிந்து மதம் என்கிற பார்ப்பனீய கருத்துமுதல்வாதம் மட்டுமே உண்டு. (ஆனால், அதே கம்யூனிஸ்ட்டுகள் பௌத்த தத்துவம் என்று பேசுவார்கள்.)
ஹிந்து மதத்தின், ஏன், கீழை நாட்டு பாகன் மதங்களின் சிறப்பே அவை அனைத்தும் தத்துவத்தின் பிண்ணணியில் இருந்து எழுந்தவை என்பதுதான். இந்து, பௌத்த, சமண, டாவோ, ஷிண்டோ, கன்ஃபூஷிய என்று அனைத்து மதங்களுமே தத்துவத்திலிருந்து எழுந்தவை. இதுதான் ஆபிரகாமிய மதங்களுக்கும் (இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம்), ஏனைய அறநெறிகளுக்கும் உள்ள வித்தியாசம். இது மிகவும் அடிப்படையான விஷயம். ஆனால், ஜெயமோகன் ஏன் இந்த அடிப்படையான உண்மையை அறியாதவர் போல் எழுதவேண்டும்?
ஏனென்றால், இந்த தத்துவத்தின் தொடர்பை எடுத்துவிட்டால் இருப்பது வெறும் புராணங்களும், சடங்குகளும் மட்டுமே, ஆபிரகாமிய மதங்கள் போல. அப்படிப்பட்ட குறுகிய கட்டமைப்பாக ஹிந்து மதத்தை மாற்றுவதில், மற்ற ஆபிரகாமியர்களுக்கு பல லாபங்கள் உள்ளன. தத்துவத்தின் ஆதாரம் இல்லாவிட்டால் ஹிந்து மதத்தை எளிதாக அழித்துவிடலாம். மேலும், தத்துவங்கள் இல்லாத ஹிந்து மதத்திற்கும், கிருத்துவ இஸ்லாமிய மதங்களுக்கும் வேறுபாடு இல்லை என்றும் நிறுவுவதை இது எளிதாக்கலாம்.
எனவே, ஹிந்துக்கள் மதம் மாறுவதால் எதையும் இழந்துவிட்டதாக உணரப்போவதில்லை. இது மதம் மாறுபவர்களுக்கு மிக அவசியத் தேவை. இந்த தேவையை பூர்த்தி செய்ய ஜெயமொக்கன் துணைபோகிறாரோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை .
புத்திசாலித்கனமாக, கம்யூனிஸ்ட்டுகள் செய்கின்ற அதே காரியத்தை செய்கிற ஜெயமோகன், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்க்கத் தேவையான காரணிகளையும் ஆதரித்துவிடுகிறார். இதுதான் ஜெயமோகன ஜாலம். மீனுக்குத் தலையை காட்டு, பாம்புக்கு வாலை காட்டு என்கிற புத்திசாலித்தனம்.
கீதையை விமர்சிப்பவர்கள் மற்ற மத நூல்களை ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்வியின் மூலம் அவர் கீதையை மதிக்கும் ஹிந்துக்கள் முக்கியமாக ஹிந்து தத்துவவாதிகளின் தேவையை பூர்த்தி செய்துவிடுகிறார். அவர்களது கண்கள் அவர் கண்காட்டி வித்தையினால் மறைக்கப்படும் மற்ற திருகுத்தாளங்களில் இருந்து மறைக்கப்படுகின்றன.
ஹிந்து தத்துவக் குழந்தைக்கு லாலிபாப் வாங்க காசு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டு, ஆபிரகாமிய காதலியின் கால்பிடிக்க ஜெயமோகன் போடுகிற வெற்றிகரமான ஜெயமொக்கைதான் ஹிந்து மதத்திற்கு தத்துவங்களோடு தொடர்பற்றவை என்கிற கருத்துக்களும்.
ஜடாயு:
// ஜெ.மோ: கீதை மூலநூல் என்றால் கீதையை முழுமையாக எதிர்க்கும் ஒர் இந்து ஞானமரபை எங்கே கொண்டு சேர்ப்பது? பல்வேறு ஆதிசைவ மதங்களுக்கும் சாக்தேய மதப்பிரிவுகளுக்கும் கீதை ஏற்புடைய நூல் அல்ல. //
// ஜெ.மோ: இன்று கீதையைப் பற்றிய ஒரு விளக்கமாவது எழுதாத ஒரு இந்து அறிஞர் இல்லை என்று கூறுமளவுக்கு கீதை விளக்கங்கள் கிடைக்கின்றன. //
இந்த இரண்டு இடங்களிலும் சொல்லவருவது முரணாக உள்ளதே! இல்லாத கற்பனை இந்து ஞானமரபைப் பற்றிக் கூட ஜெ.மோ கவலைப் படுகிறார் போலிருக்கிறது!
நிற்க. கீதையை எந்த இந்து மரபும் தத்துவ அளவில் முழுமையாக எதிர்க்காது, எதிர்க்கவும் முடியாது. "உபநிஷதங்கள் பசுக்கள், அவற்றின் பாலைக் கறந்து தருபவன் கோபாலன்" என்று கீதைப் பாயிரம் கூறுகிறது. அதனால், உபநிஷதங்களின் சாரமான கீதையை *முழுமையாக* மறுக்கும் மரபு, சுருதியாகிய வேதத்தையே கருத்தளவில் மறுத்ததாகும். சுருதியை மறுப்பது இந்து மரபே அல்ல.
முரண்பாடுகள் பெரும்பாலும் சமய சம்பிரதாயங்கள் தொட்டே இருக்கும். கிருஷ்ணனை விஷ்ணு அவதாரம் என்னாமல் வேதாந்தத்தை எடுத்துரைத்த ஜகத்குருக்களில் ஒருவன் என்று கொண்டால் அந்த முரணும் கிடையாது.
சைவ தத்துவங்கள் பெரும்பாலும் கீதையுடன் இயைந்தே உள்ளன. ஜெயமோகன் குறிப்பிடும் அதே சுவாமி சித்பவானந்தர் தமது புகழ்பெற்ற திருவாசக உரையில் ஏராளமான கீதை சுலோகங்களை இயைபுக்காக மேற்கோள் காட்டுகிறார். திருமந்திரத்தையும், தாயுமானவர் பாடல்களையும் எடுத்துக் கொண்டால் அவை கூறும் எல்லா யோகசாதனை முறைகளும் அடிப்படையில் கீதை கூறுபவையே.
சாக்தம் சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொண்ட ஒரு சமயமரபு. அது எவ்விதம் கீதையுடன் முரண்படும்? ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள "அண்ணா" அவர்கள் எழுதிய அழகிய கீதை உரையில் பல இடங்களில் தேவாரம், திருமுறைகள், சக்தி தந்திரங்களில் இருந்தும் மேற்கோள்கள் உள்ளன. தட்சிணாசாரம் என்றும் சாக்த மரபில் தோய்ந்த தேவி உபாசகர் அண்ணா. அவர் லலிதா சகஸ்ர நாமத்திற்கு எழுதிய உரையிலும் பல இடங்களில் கீதை மேற்கோள்கள் உள்ளன.
சேஷாசலம்:
என் கேள்வி எளிமையானது. ஏன் அது ஒரு மத நூலாகவும் அதே நேரத்தில் தத்துவ நூலாகவும் இருத்தல் கூடாது? மத நூல் என்று அறிவித்தால் அதில் தேடல் போய் விடும், பக்தி நிலைத்து விடும் எதிர்ப்பு அதிகரிக்கும் என்கிறார். ஏன் பக்தியுடன் தத்துவச் சாரத்தை அறியக் கூடாது??நம்மாழ்வாரை அப்படி அணுகுவதில்லையா? இதே லாஜிக்கின் படி நம்மாழ்வாரின் பாசுரத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை, பக்திக்கும் சம்பந்தம் இல்லை .. இப்படியே போனால், ஜெயமோகனிடமிருந்து பின்வரும் பொன்மொழிகளை எதிர்பார்க்கலாம்.
1. கோவில் கட்டிடக் கலை, சிற்பக் கலைக்கும் இந்துமதத்திற்கும் தொடர்பு கிடையாது
2. குல தெய்வங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
3. இயற்கை வழிபாட்டிற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பு கூடாது
4. கோவில் பூஜைகளுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
5. விபூதி, நாமம் ஆகியவற்றுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
6. கோவில் பிரசாதத்திற்கும் கோவிலுக்கும் சம்பந்தம் கிடையாது
7. கோவிலுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
8. கணவனுக்கும் மனைவிக்கும் சம்பந்தம் கிடையாது
9. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் தொடர்பே கிடையாது
10. மழைக்கும் நீருக்கும் சம்பந்தம் கிடையாது

