Tuesday, February 06, 2007

காவிரீ...! : கவிதை

நெடுங்காலம் எதிர்பார்த்திருந்த காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்து விட்டது. இதற்கு முந்தைய ஒரு இடைக்காலத் தீர்ப்பு வந்த நேரத்தில், அக்டோடர்-1, 2002 திண்ணை இதழில் நான் எழுதி வெளிவந்தது "காவிரீ!" என்ற இந்தக் கவிதை.

இந்தத் தருணத்தில், இந்தக் கவிதையின் விழைவுகள் உண்மையாக வேண்டும் என்ற ஆவலோடு, இங்கே மீள்பதிவு செய்கிறேன்.





காகம் முனிவரின் கமண்டலம் கவிழ்க்க
காட்டாற்று வெள்ளமாய் வந்தவள் நீ எனக்
கதையுண்டு.

காங்கிரஸ் அரசுகள் பல கவிழ்ந்தும்
கழக அரசுகள் பல கழிந்தும்
கழனிகளில் தமிழ் உழவர் முகங்கள்
கவலையில் கவிந்தும்
ஆணையத்தின் அறைகூவல்கள்
அரசுகளின் வன்செவியில் விழுந்தும்
நீதி மன்றங்கள் எம்
நிலை கண்டு நெகிழ்ந்தும்
காலத்தில் சரியளவு
கனமழை பொழிந்தும்
ஒவ்வோர் ஆண்டும் கர்நாடகம் தாண்டி நீ
கால் பாவ முடியவில்லை!

அலைகடல் நாயகனைத் தேடி
ஆசையுடன் பாய்ந்து வரும் உன்னை
அணை போட்டுத் தடுக்கின்றார்
அருகிருக்கும் மாநிலத்தார்.
அரசியல் குறுக்கீடோ ?
அளவுக்கு அதிகமாய்ப் பயிர் செய்ய
ஆசையோ ?
ஆற்றின் மேல் எமக்குத் தான்
அதிகாரம் எனும் நினைப்போ ?
அண்டை வீட்டாருடன் சண்டையிட
ஆவலோ ?
புரியவில்லை.





பொங்கிப் பெருகிப் புரண்டோடும்
பேராற்றை
சொங்கிச் சிறு மனங்கள்
சிறைப்படுத்துவதோ ?
'ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் ' என
ஊர்க்குளத்துத் தண்ணீரை
உலகம் முழுமைக்கும் சொந்தமாக்கிய
வள்ளுவன் வாய்மொழி
வையகம் மறப்பதோ ?

நீருக்குப் போரிடும் சாக்கில்
நெடுங்கால பந்தத்தை
நெருப்பிட்டுக் கொளுத்துவதோ ?
நாடுகள் பல கூடி நைல் நதி நீரை
நயமாய்ப் பங்கிடும்
நன்னடத்தை கண்டும்
நம் நடத்தை மாறாதிருப்பதோ ?

கன்னடரே, தமிழரே!
கண்மூடித்தனம் ஒழிப்போம்.
அமைதியாய்ச் சிந்தித்து
அறிவார்ந்த முடிவெடுப்போம்.
'இருதரப்பும் வெற்றி! ' என்று
இறுமாப்புடன் உரைப்போம்.
நெல்மணியும் கரும்பும் நிறையும்
காவிரியின் கரைகளில்
நல்லுறவும் நட்பும்
செழித்தோங்கி வளரச் செய்வோம்.

Monday, February 05, 2007

"அம்மா என்றால் அன்பு" : காலில் விழுந்த கருணாநிதி

அகில உலகையும் தன் அன்பால் அரவணைக்கும் அன்னை மாதா அமிர்தானந்தமயின் தமிழக விஜயம் பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

நாகப் பட்டினத்தில், ஒரு தனி அமர்வில் தமிழ்க முதல்வர் கருணாநிதி அம்மாவின் காலில் விழுந்து வணங்கினார் என்று செய்தி வந்திருக்கிறது. அவரது துணைவியார் ராசாத்தி அம்மாளும் உடன் இருந்தார். அப்போது அங்கு இருந்த போலீஸ் தலைகள் இதைக் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்துள்ளன.





கலைஞர் கருணாந்தி பூர்வஜன்மத்தில் செய்த புண்ணியமோ என்னவோ, அன்னையின் அடிகளில் வீழும் பாக்கியம் அவருக்குக் கிடைத்து விட்டது.

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்! நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய்! என்ன பேறு பெற்றேன்
தாயே! மலைமகளே! செங்கண் மால் திருத் தங்கச்சியே!

என்ற அபிராமி அந்தாதி நினைவுக்கு வருகிறது. "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற கொள்கை முழக்கத்தில் ஊறிய கருணாநிதி, ஏழைகள் அம்மாவின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாகப் பேசியுள்ளார். அம்மா பராசக்தி! வாழவைக்கும் உன் புன்னகையின் சக்தி தான் என்னே!

செய்தி: அம்மாவின் சிரிப்பில் கவர்ச்சி: கருணாநிதி

நாகை மாவட்டத்தில் சுனாமி பாதித்த மீனவர்களுக்காக, அமிர்தானந்தமயி மடம் சார்பில், 9 கோடி ரூபாய் செலவில் 450 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இந்த வீடுகளை அரசிடம் ஒப்படைக்கும் விழா நாகையில் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதியிடம் மாதா அமிர்தானந்தமயி தங்கநிற அடையாள சாவியை வழங்கி,முறைப்படி வீடுகளை ஒப்படைத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர், கேராளத்தின் கடலோர கிராமத்தில் பிறந்த அம்மா நல்ல தொண்டுகளை செய்து வருகிறார் என்று பாராட்டினார். மேலும் 500 வீடுகளைக் கட்டித்தர மடம் தயாராக உள்ளது என மனு அளிக்கப்பட்டது. அதில், மடம் தயாராக உள்ளது என்பதற்குப் பதிலாக தாயாராக உள்ளது என இருந்ததை முதலமைச்சர் கண்டுபிடித்துவிட்டார். அதை அவர் குறிப்பிட்டு, கடிதத்தில் இருப்பதைப்போல அவர் தாயாராக இருந்து கேரள மக்களைப்போல தமிழக மக்களையும் காப்பாற்றவேண்டும் என்று கூறியது சுவாரஸ்யமாக இருந்தது.

மேலும், அவருக்க்கே உரித்தான பாணியிலும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுகிறார். இதைப் பார்ப்பதில் எனக்கு மகிச்சி. அவருடைய சிரிப்பில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஏழைகளுக்கு அந்தக் கவர்ச்சி பிடித்திருக்கிறது என்றார் கருணாநிதி.

அகிலம் முழுவதற்கும் தன் அன்புச் சிறகுகளின் நிழலில் ஆறுதல் தரும் அம்மாவின் அன்புக் கரங்கள் பற்றி "Darshan - The Embrace" என்று ஒரு ஆவணப் படத்தை டச்சு இயக்குனர் ஒருவர் எடுத்துள்ளார். (இந்த அருமையான படம் இந்தியாவில் பெரிய அளவில் திரையிடப் பட்டதாகத் தெரியவில்லை - யாருக்காவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்). இந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமடைந்த பிரெஞ்சு பிஷப் ஒருவர் "அம்மாவைக் காண என் மனம் துடிக்கிறது. மேற்குலகில் ஆன்மிகம் என்றால் என்ன என்பதையே நாம் மறந்து விட்டோம். அம்மா தன் அன்பால் அதனை நினைவூட்டுகிறார்" என்கிறார். ஈரானைச் சேர்ந்த ஷயீதா அம்மா ஆசி வழங்கியதும், நெகிழ்ந்து கண்ணீர் விடுகிறார். உலகெங்கும் பக்தர்கள் மணிக்கணக்கில் தவங்கிடந்து நின்று அம்மாவை தரிசிக்கின்றனர்.





அன்னை பராசக்தியின் இந்தத் திருஅவதாரம் கடையர்களையும் தன் கடைக் கண் பார்வையால் கடைத்தேற்றுகிறது. அம்மாவின் அளப்பரிய கருணை உலகத்தில் மறைந்து வரும் மானுடப் பண்புகளுக்கு மறுவாழ்வளிக்கிறது.

உள்ளம் உருகாதோ - பொய் ஆணவ
ஊனம் ஒழியாதோ
கள்ளம் தவிராதோ - அம்மா, பக்திக்
கண்ணீர் பெருகாதோ
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ
விள்ளற்கரியவளே - அனைத்திலும்
மேவியிருப்பவளே

- மகாகவி பாரதி

Friday, February 02, 2007

வீர ரசம் பொங்கும் ஜடாயு நடனம்: இந்தோனேசியாவிலிருந்து

ராமாயணம் பற்றி யூ-ட்யூபில் தேடிக் கொண்டிருக்கையில் கிடைத்தது இந்த இந்தோனேசியாவின் பாரம்பரிய நடனம் (பாலி / ஜாவா பகுதிகளைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்).




எட்டே நிமிடங்களில் ராமகாதையின் ஜடாயு படலத்தை உணர்ச்சி மயமாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஜடாயு நுழைந்தவுடன் ஆடும் தாண்டவம் அருமை. தோள்களைக் குலுக்கிக் கொண்டு முகத்தில் கொடூரத்தை வெளிப்படுத்தும் ராவணன்.. சீதையாக வரும் பெண்ணின் முகத்தில் தான் என்ன அழகு, என்ன ஒரு grace! அதுவும் ஜடாயு சிறகொடிந்து விழுந்ததும் அவளது முக பாவங்கள்! யுத்தக் காட்சியில் வீர ரசம் கொப்பளிக்கிறது. ராம லட்சுமணர்கள் ஜடாயுவைக் கண்டதும் ஆற்றாமை பொங்க அவன் சொல்லும் செய்திகளில் ஆழ்ந்த அபிநயங்கள். கடைசியாக ராம-லட்சுமணர்கள் வீழ்ந்த கழுகரசனுக்கு அஞ்சலி செய்து வணங்கும் காட்சி பரவசமூட்டுகிறது.

"கைவழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல" என்ற பரத இலக்கணத்தைப் போலவே மிகவும் நுணுக்கமான ஹஸ்த முத்திரைகள் இந்த நடனத்திலும் உள்ளன. நடனம் முழுவதும் discrete பகுதிகளாக இல்லாமல் காட்சிகள் அலை அலையாக தொடர்ந்து வருகின்றன..

ராமாயண பாத்திரங்களின் ஒப்பனைகள் அற்புதம். ராம-லட்சுமணர்கள் அம்பறாத் துணியைச் சேர்த்துக் கட்டியிருக்கும் கம்பீரம்! ஜடாயுவின் சிறகு ஒப்பனையின் கலை நயம் வெகு நேர்த்தி.

இனிமையான பின்னணி இசை இந்திய செவ்வியல் இசையின் சாயலுடன் ஜலதரங்க ஒலியை நினைவூட்டுகிறது. பாடல்கள் மேற்கத்திய ஓபரா போன்று பாடப் பட்டாலும், வார்த்தைகள் மற்றும் பாடல் வரிகளில் சில சம்ஸ்கிருத ஒலிகள் தெளிவாகத் தெரிகின்றன. (ஜாவா, பாலித் தீவின் மொழிகளில் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது).

ராமாயண காவியம் இன்றும் இஸ்லாமிய நாடு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்தோனேசியாவில் அழியாமல் உயிர்த்துடிப்புடன் இருப்பது பெரிய விஷயம். இந்த நாடகங்களில் நடிப்பதையும், பார்ப்பதையும் அங்குள்ள கலை, கலாசாரத்தில் ஆர்வமுள்ள மக்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள். இந்த கலாசார பொக்கிஷம் வரும் காலங்களிலும் பாதுகாக்கப் படும் என்றே நம்புவோம்.

Thursday, February 01, 2007

டாடாவின் இரும்புக் கரங்கள்: இந்தியாவின் பெருமிதம்

"என்ன சொல்லுகிறீர்கள்? டாடாக்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் தரத்திற்கு இரும்பு எஃகு தயாரிக்கப் போகிறார்களா? அப்படி நடந்தால், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு இரும்புத் துண்டையும் சாப்பிடுவேன் என்று பந்தயம் வைக்கிறேன்" என்று 1907ஆம் ஆண்டு சவால் விட்டார் அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ரயில்வே துறைத் தலைவர் சர் ஃபிரடெரிக் அப்காட். டாடா வணிகக் குழுமத்தைத் தொடங்கிய பாரதத் தாயின் தவப் புதல்வர் ஜாம்ஷ்ட்ஜி டாடா இந்த எள்ளல்களைக் கண்டு அயரவில்லை. இதற்கு முன் 1899ஆம் ஆண்டிலேயே ஒரு பத்திரிகையில் எழுதினார்: “நமது இளைஞர்கள் ஐரோப்பாவின் தலைசிறந்த நிறுவனங்களுக்குச் சமமாக அவர்கள் களத்திலேயே நிற்க வல்லவர்கள் என்று நிரூபித்து வருவகிறார்கள்; அது மட்டுமல்ல, இந்த நிறுவனங்களை வீழ்த்தவும் நம்மால் முடியும்”.





காலச் சக்கரம் சுழல்கிறது, கனவு மெய்ப்படுகிறது. 2006 : இந்தியாவில் பிறந்த லட்சுமி நிவாஸ் மித்தல் தலைமையில் இயங்கும் மித்தல் ஸ்டீல் ஐரோப்பாவின் பிரம்மாண்டமான இரும்புத் தொழில் கம்பெனியான அர்செலர் நிறுவனத்தை பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையில் வாங்கி கையகப் படுத்தியது. 2007 தொடக்கம்: இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நார்வே உள்ளிட்ட நாடுகளில் இரும்பாலைகள் கொண்ட “கோரஸ்” என்ற ஐரோப்பாவின் மிகப் பெரிய இரும்புத் தொழில் நிறுவனத்தை டாடா குழுமம் சி.எஸ்.என். என்ற வேறொரு பன்னாட்டு நிறுவனத்தை ஏலத்தில் தோற்கடித்து வாங்கியுள்ளது பற்றிய செய்தியை எல்லாரும் படித்திருப்பீர்கள். இதற்காக டாடா நிறுவனம் தரும் விலை ரூ. 53,000 கோடி மட்டுமல்ல, முதலீட்டாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் தங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் முழுவதையுமே துணிந்து பணயம் வைத்துள்ளது. சாகசத்தை விழையும் தீரர்களின் வரிசையில் டாடா குழுமத் தலைவர் ரதன் டாடா இணைந்திருக்கிறார். தன்னையும் விடப் பெரிய அளவு உள்ள வணிக நிறுவனத்தை வாங்கும் துணிச்சல், அதை நன்கு நிர்வகித்து நடத்தி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இவற்றால் உந்தப் பட்ட டாடா ஸ்டீல் நிறுவனம் புதிய இந்தியாவின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.

ஒரு பெரிய சஸ்பென்ஸ் திரைப்பட முடிவு போல பெரும் திகிலுடன் வணிக ஊடகங்களால் பேசப் பட்ட இந்த ஏலத்தின் கடைசிச் சுற்று நேற்று முடிவடைந்தவுடன் டாடா நிறுவன முக்கியஸ்தர்களின் முகத்தில் ஒளிர்ந்த அந்தப் பரவசம். தலைமையகம் பாம்பே ஹவுசிலும், ஜாம்ஷெட்பூர் டாடா நகரிலும், தொழிலாளர்கள் மற்றும் யூனியன்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்! முதலாளித்துவம், வர்க்கப் போராட்டம், புடலங்காய் எல்லாம் காற்றில் கரைய டாடா நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் ஒருவருக்கொர்வர் தழுவிக் கொண்டு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். “டாடா கோரஸ் ஜிந்தாபாத்” என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.

இதன் மூலம் உலகின் முதல் 5 இரும்புத் தொழில் நிறுவனங்களின் பட்டியலில் டாடா-கோரஸ் இடம் பிடிக்கிறது; இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமம் என்கிற கிரீடத்தை ரிலையன்சிடமிருந்து டாடா தட்டிப் பரிக்கிறது. பிர்லா, ரிலையன்ஸ் தலைவர்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த வரலாற்று சாதனையைப் பற்றிப் பெருமையுடன் பேசினர். அசூயையோ, பொறாமையோ அல்ல, ஒரு சக இந்தியக் கம்பெனியின் சிகரம் தொடுதலை வாழ்த்தும் பாங்கு அதில் தென்பட்டது.

“இரும்பினால் ஆன தசைகள், எஃகு நரம்புகள், அதனுள் இடியை உண்டாக்கும் இதயம் ; இவையே எதிர்கால இந்தியாவிற்குத் தேவை” என்றார் சுவாமி விவேகானந்தர். டாடா ஸ்டீல் நிறுவனம் மற்றும் டாடா குழுமம் எடுத்திருக்கும் இந்தப் பெரும் முயற்சிகள் ஒவ்வொரு இந்தியனையும் தோள் தட்ட வைக்கின்றன என்றால் மிகையில்லை.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!