Showing posts with label சோனியா. Show all posts
Showing posts with label சோனியா. Show all posts

Wednesday, July 25, 2007

இந்தியப் பெண்மைக்குப் பெருமையும், சிறுமையும் இன்று ஒரே நாளில்..?

இந்திய நாட்டின் கோடானுகோடி"சாதாரண" பெண்களை மறந்து விடுங்கள். அவர்களைப் பற்றியெல்லாம் யார் பேசுவார்கள்? நாம் பேசிக் கொண்டிருப்பது தங்கள் தலைமயிரை 'பாப்' கட் செய்து கொண்ட புதுமைப் பெண்களைப் பற்றி ( ஒரு இந்தி சேனலில் எந்த மாதிரி பெண்கள் இந்தியப் பாராளுமன்றத்திற்குப் போகிறார்கள் என்ற விவாதத்தில் ஒரு நாரீமணி உதிர்த்த பதம் இது - 'baal katiwali mahila')

பிரதீபா பாட்டீல் இன்று பாரத நாட்டின் முதல் "மேடம் பிரசிடென்ட்" ஆகி விட்டதைக் குறித்து செய்தி ஊடகங்கள் அல்லோல கல்லோலப் படுத்திக் கொண்டிருக்கின்றன - இந்தியப் பெண்மை பெருமிதம் அடைந்து விட்டதாக... தன்மீது சுமத்தப்பட்ட ஊழல், கொலை மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு இன்று வரை நேர்மையான பதில் அளிக்க முடியாத, தன் முக்காடிட்ட முகத்தை எப்போதும் முக்கால்வாசி மட்டுமே அறியத் தரும் ஒரு அரசியல் அடிமைப் பெண் இந்த உயர்பதவிக்கு வந்திருப்பது 'பாப் கட்' பெண் முதல் பர்தா போடும் பெண் வரை எல்லாரையுமே பெருமைப் படுத்தி விட்டது தான் ! நம்புவோம்.

சிறுமை என்று சொல்ல வந்தது வேறு விஷயம். உறுதிக்கும், செயல்திறமைக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷி என்று சொல்லத் தக்க ஒரு பெண். ஏற்கனவே பல கடினமான, சவாலான பொறுப்புக்களை வகித்து அவை ஒவ்வொன்றிற்கும் பெருமை சேர்த்த ஒரு பெண். அதே துறையில் முறைப்படி அவருக்கு வந்திருக்க வேண்டிய ஒரு உயர் பதவி மறுக்கப் பட்டிருக்கிறது இன்று. தில்லி காவல்துறை ஆணையர் ஆவதற்கு முழுத் தகுதி படைத்த கிரண் பேடி ஓரங்கட்டப் பட்டு ஒய்.எஸ். தாலிவால் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்த அநியாயத்தை எதிர்த்து வெளிப்படையாகவே வெகுண்டு எழுந்துள்ளார் கிரண் பேடி.

காரணம் என்ன தெரியுமா?

யாரைப் பெருமைப் படுத்த வேண்டும், யாரைச் சிறுமைப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை இருக்கிறதே, அது மட்டும் எந்த இந்தியப் பெண்ணிடமும் இல்லை, ஜன்பத் 10ஆவது எண் வீட்டில் வசிக்கும் ஒரு இத்தாலியப் பெண்ணிடம் தான் அது உள்ளது.

அவருக்குப் பிடிக்காதவர்கள், அவரை முறைத்துக் கொண்டவர்கள் கனவுகாணும் விஞ்ஞானியாகட்டும், காக்கிச் சட்டை கண்ணியர்களாகட்டும் - கடாசப் படுவார்கள்.

அவரது பெண் அடிமைகள் ஜனாதிபதி ஆவார்கள், ஆண் அடிமைகள் பிரதமர்களாகவும், அமைச்சர்களாவும் சேவகம் புரிவார்கள் ! உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இருக்கும் ஒரே இந்தியநாட்டு வாசி இந்தப் பெட்டை தான் என்றால் சும்மாவா? (டென்ஷன் ஆகிடாதீங்க, இவ்வளவு பெரிய அடிமைகளை அடக்கி ஆள்பவர் எவ்வளவு பெரிய "ஆண்டை" யாக இருக்கணும்! அதைத் தான் பெண்பாலில் எழுதியிருக்கிறேன்).

ஆக மொத்தத்தில் பெண்மை பெரிய பெருமை பெற்றுவிட்டது என்று தோள் தட்டி, மண்டையில் அடித்துக் கொள்வோம்!