Wednesday, August 16, 2006

ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் : பாகம் 2

இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்ட தமிழோவியம் இதழுக்கு நன்றி.
------------------------------------------------------------------------------------------
அறிவியல் பார்வையில் மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் : பாகம் 2

ஜ்யோதிஷம் என்னும் அறிவுத் துறையின் வரலாறு மற்றும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் பற்றி சென்ற பாகத்தில் பார்த்தோம். நான்கு யோகங்கள், புராணங்கள், சைவ-வைணவ சமயங்கள் முதலியவற்றின் பார்வையில் இன்றைய ஜோதிடம் பற்றிப் பார்க்கலாம்.

யோகங்கள் :

கர்ம யோகத்தின் சாரம் பலன் சாரா செய்கை என்பது. முழு மனதுடனும், சிரத்தையுடனும், வெற்றி-தோல்வி லாப-நஷ்டம் போன்ற “இருமை”களையும் பலன்களையும் எண்ணிப் பார்க்காமல், எல்லாச் செயல்களையும் அர்ப்பணிப்பு உணர்வோடு ‘யக்ஞம்’ போன்று செய்யவேண்டும் என்பதே இந்த யோகத்தின் கோட்பாடு. ஆனால் ஜோதிடத்தில் அதிகம் புழங்கும் வார்த்தையே “பலன்” தான்! எனவே ஜோதிடம் கர்ம யோகத்திற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறது. ‘கர்மம்’ என்பதை செயல் என்று கொள்ளாமல் வைதீக நோக்கில் யாகம், ஹோமம் என்று கொண்டாலும், ஜோதிடத்தின் அறிவுரைப் படி சில கிரக தோஷங்களை முறியடிப்பதற்காக இவற்றைச் செய்தால் அது காம்ய கர்மம் (பலன் விரும்பிச் செய்யப்பட்டது) தானே தவிர கர்ம யோகமல்ல.

ஞான யோகத்தின் சாரம் வேதாந்த விசாரம். “நான் யார்?” என்ற கேள்வியில் தொடங்கி ஜீவன், பிரம்மம், மாயை, எல்லாத் தளைகளிலிருந்து விடுபடுதல் போன்ற தத்துவ சிந்தனைகள். பௌதீக ஆகாசத்தில் ஒளிரும் சூரியனை சிதாகாசத்தில் ஒளிரும் ஆன்மாவுடன் ஒன்றிணைத்துத் தான் ஞான யோகம் பார்க்கிறது, ஜோதிடம் பார்ப்பது போல கிரக, ராசி மண்டலத்தின் தலைவனாக மட்டும் அல்ல. “ஓ சூரியதேவனே, உனது கிரணங்களின் உண்மையான பொருளையும் மகிமையையும் உணர்ந்து கொண்டேன். உன்னுள்ளிருக்கும் உண்மையை நான் காண்கிறேன்; உன்னுள் இருப்பதே என்னுள்ளும் இருக்கிறது; நானே அது“ (ஈசாவாஸ்ய உபநிஷதம், 16). காயத்ரி மந்திரமும் “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று சூரிய தேவனிடம் ஞானத்தையே வேண்டுகிறது. ஆனால் சுத்த ஞான ஸ்வரூபனும், மௌன குருபரனும் ஆகிய ஆலமர் செல்வன் தட்சிணாமூர்த்தியை வியாழ கிரகத்தின் தேவதை என்று வர்ணித்து, ஞானம் கீனத்தையெல்லாம் கடாசிவிட்டு குரு பெயர்ச்சி பலன்களுக்காக (பயங்களுக்காகவும்) தட்சிணாமூர்த்தி சன்னதியில் தொழ வேண்டும் என்ற “தத்துவத்தை” பாமர மக்களிடையே உருவாக்கியிருப்பது ஜோதிடத்தின் சாதனை.

ராஜ யோகம் மனக் கட்டுப்பாடு, அஷ்டாங்க யோகம், சாதனைகள், நாடிகள், சக்கரங்கள், குண்டலினி என்று போகிறது. சுவாமி விவேகானந்தர் கூறியது போல ஒவ்வொரு மனிதனுள்ளும் உறங்கிக் கிடக்கும் ஆன்ம சக்தியை எழுப்புவதற்காக, படிப்படியாக ஒழுக்க நெறிகள் (யம, நியமம்), ஆசனங்கள், பிராணாயாமம், புலனடக்கம், தியானம் போன்ற சாதனைகளில் ஈடுபடுவதே ராஜ யோகம். யோகிகள் ஜோதிட நம்பிக்கைகளை சாதனைகளுக்கெல்லாம் மிகக் கீழ் நிலையில் உள்ள பய உணர்வுகளின் வெளிப்பாடுகளாகத் தான் கண்டார்கள்.

பக்தி யோகம் தான் பெரும்பாலான மக்களின் அன்றாட சமய வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. எல்லா உயிர்களிலும் இயல்பாக இருப்பது அன்பு. இந்த அன்பு என்ற உணர்வு விசாலமாகி தெய்வத்தன்மை பெறும்போது அது பக்தி யோகமாகப் பரிணமிக்கிறது. “ஸா த்வஸ்மின் பரம ப்ரேம ரூபா” (பக்தி என்பது அளப்பரிய அன்பே உருவானது) என்பது நாரத பக்தி சூத்திரத்தின் முதல் அடி. அன்பு கலந்த பக்தி என்பது தனக்குத் தானே சாட்சியே அன்றி (ஸ்வயம் ப்ரமாணாத்), அதற்கு வேறு எந்த வெளிச் சாட்சிகளும் தேவையில்லை என்றும் நாரத முனி கூறுகிறார். “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி”யும், “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இருதிரியா”க்கியும் “கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம்” தான் பக்தி. திருவாசகத்திலோ திருவாய்மொழியிலோ உள்ள சில பாசுரங்களையாவது உணர்வோடு சொல்லி லயித்து வழிபட்டவர்களுக்கு இது புரியும். ஜோதிடர்கள் சொல்லியோ இல்லை தானாக ஜோதிடம் பார்த்து அதன் காரணமாகவோ கோயில்களுக்குச் சென்றும், பூஜைகள் செய்தும், பஜனைகள் பாடியும் பக்தி செய்வதில் பக்தியின் இந்த லட்சணங்களில் ஏதாவது ஒன்றாவது இருக்கிறதா? நவக்கிரக சன்னிதியில் போய்த் தொழும்போது எந்த மாதிரி பாவனைகள் வரும்? “அத்தா உனக்காளாய் இனி அல்லேன்” என்று ஈசனிடமும், “உன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்று கண்ணனிடமும் பக்தர்கள் வேண்டியது போல, சுக்கிரனிடமும், புதனிடமும், சனியிடமும் வேண்ட முடியுமா? கிரக, நட்சத்திர தொல்லைகளும், பயங்களும் தான் மனதில் நிழலாடும்.

புராணங்கள்:

வக்கிரக புராணம் என்ற பெயரில் வழங்கும் சில கதைகளை ஜோதிட வெறியர்கள் ஏதோவொரு கால கட்டத்தில் எழுதியிருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. எல்லா தேவதைகளும், அவதாரங்களும் கிரக சஞ்சாரங்களால் பீடிக்கப் பட்டார்கள் என்பதாக இந்தக் கதைகள் இருக்கும்.. காலாதீதமான பரம்பொருளான சிவபெருமான் சனி என்கிற ஒரு குட்டி கிரகத்தின் சேட்டையால் கஷ்டப் பட்டதாக எண்ணுவதே நாத்திகம் அல்லவா? சிவ துரோகம் அல்லவா? உண்மையான சிவ பக்தன் இப்படி கனவிலும் நினைப்பானா? ராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் வரும் சம்பவங்களெல்லாம் கிரக, நட்சத்திர சமாசாரங்களினால் நடந்தது என்று சொன்னால் அது அவதார தத்துவத்தையே அவமதிப்பதாகும். இந்த அவதாரங்கள் பட்ட மானுட கஷ்டங்களெல்லாம் தெய்வ லீலை, அலகிலா விளையாட்டு. மறைமுகமாக விளையாடுவது என்பது தெய்வத்திற்குப் பிரியமான ஒன்று - “பரோக்ஷ ப்ரியா: இவ ஹி தேவா:” என்று வேதம் கூறுகிறது. தனக்காகப் போரிட்டு மடிந்த எல்லா வானரங்களையும் உயிர்பெறச் செய்த ராமன், தன் தந்தை தசரதனும், ஜடாயுவும் இறந்த போது கதறி அழுதானே? அதை எப்படிப் புரிந்து கொள்வது? தெய்வ லீலை என்பது தவிர வேறு எந்த மாதிரியும் ஆன்மீக நோக்கில் அதைப் புரிந்து கொள்ள முடியாது !

சமய மரபுகள்:

பிரதோஷத்தன்று சிவ வழிபாடு, ஏகாதசி விரதம், கிருத்திகை, ஷஷ்டியில் முருக வழிபாடு போன்று சமய மரபில் தொன்று தொட்டு வழங்கி வரும் விரதங்களும், பண்டிகை நாட்களும் முன்பே கூறிய படி காலக் கணக்கு என்ற வகையில் அடங்கும். சமுதாய அளவில், அடியார்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளில் சென்று கூட்டாக வழிபடுவதற்குச் செய்யப் பட்ட நல்ல ஏற்பாடு என்பதாகவே இவை உருவாகியிருக்க வேண்டும். இன்றைய ஜோதிடர்கள் இவற்றுக்கு ஜோதிட அடிப்படையில் விளக்கம் அளிக்கவும் சாத்தியக் கூறு இருக்கிறதே அன்றி, இவை ஜோதிடத்தை மனதில் கொண்டு உருவானவை என்று சொல்ல முடியாது. உதாரணமாக, தேவி மகாத்மியம் கடைசி காண்டத்தில் “மழைக் காலத்தில் நடக்கும் சிறப்புப் பூஜை” (ஷரத்காலே மஹாபூஜா) என்று குறிப்பிடப் படுவதே இன்று நாம் கொண்டாடும் அற்புதமான நவராத்திரித் திருநாளாக வளர்ந்திருக்கும்.

திருஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தில் சிவனருள் இருந்தால் கிரக, நட்சத்திரங்கள் மட்டுமல்ல, நோய்கள், விலங்குகள் போன்ற மற்ற இயற்கை உபாதைகளும் துன்புறுத்தாது என்ற கருத்தே உள்ளது. “நாள் என் செயும் வினை தான் என் செயும் எமை நாடி வந்த கோள் என் செயும்” என்று அருணகிரி முழங்குகிறார். கிரகங்களின் பலன் எம்மாத்திரம்? ராமனுடைய கருணையின் பலனே பலன் (க்ரஹ பலமேமி? ராமானுக்ரஹ பலமே பலமு) என்கிறார் தியாகராஜர். எல்லா கிரகங்களின் பலமும் நீயே தாமரைக் கண்ணா (ஸகலக்ரஹ பல நீனே ஸரஸிஜாக்ஷா) என்று புரந்தரதாசர் பாடுகிறார். இவற்றையெல்லாம் படிக்கும்போது ஜோதிடத்தை நம்பி தெய்வத்தை நம்பாமல் இருந்த போலி பக்தர்களுக்காகவே இந்த அடியார்கள் இப்படிப் பாடியிருப்பார்கள் என்று தோன்றுகிறது!
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில்
இடர்ப்படோம் நடலையில்லோம்”
என்றும்
“பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்

நலியும் நரகும் நைந்த நமனுக்கினங்கியாதொன்றுமில்லை”

என்றும் பாடிய அச்சமற்ற ஆன்மீக உணர்வே சைவ, வைணவ சமயக் கோட்பாடுகளில் வெளிப்படுகிறது.

இயற்கை வழிபாடு என்ற அளவில் இன்றைய ஜோதிடம் சார்ந்த சமாசாரங்களைச் சொல்ல முடியுமா? பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்தது தெய்வம் என்னும்போது கிரகங்களும் நட்சத்திரங்களும் அதில் அடக்கம் தான், அதனால் அவற்றை வணங்குவது பொருத்தமே என்ற கருத்து வருகிறது. அது சரிதான், ஆனால் எந்த வகையான உணர்வுடன் வணங்குகிறோம் என்பது முக்கியம். கங்கையையும், காவிரியையும் நாம் போற்றி வழிபடுவது பய உணர்வினால் அல்ல. தெய்வத்தின் கருணையே இப்படி ஆறாக ஓடுகிறது என்ற ஆன்மீக உணர்வினாலும், இது என் நாட்டின் நதி என்ற மண்ணின் மணம் சார்ந்த தேசபக்தி உணர்வினாலும் தான்.
“அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம்
போன்றது”

என்று காவிரி நதியை சேக்கிழார் வர்ணிக்கிறார். பொங்கல் வைப்பது, அரச மரம் மற்றும் ஸ்தல விருட்சங்கள் வளர்ப்பது, துளசி மாடத்தில் துளசிச் செடி வைத்து வணங்குவது எல்லாம் இந்த வகையில் அடங்கும் – இவை மூட நம்பிக்கைகள் என்று நாத்திகர்கள் சொல்லலாம், ஆனால் நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகப் பார்வை பற்றி ! மேலும், இந்த வழிபாட்டு முறைகள் எல்லாம் சுற்றுச் சூழலைப் பேணி வளர்க்கவும் வணங்கவும் வேண்டும் என்ற நல்ல, ஆக்கபூர்வமான சிந்தனையை சமயத்தின் துணை கொண்டு உருவாக்கி வந்திருக்கின்றன. ஆனால் ஜோதிடமோ எதிர்காலம் பற்றிய பயம், குறுக்கு வழிகளில் விருப்பம், உழைப்பையும் தெய்வத்தையும் நம்புவதை விட்டு விதியை நம்புதல், அறியாமை போன்றவற்றையே வளர்த்து வந்திருக்கிறது.

திருமணம்:

திருமணத்தில் ஜாதகம் பார்ப்பது பற்றிக் குறிப்பாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. மற்ற எல்லா விஷயங்களிலும் அவ்வளவாக ஜோதிடத்தை நாடாதவர்களும், இந்த விஷயத்தில் அதில் சரணடைகிறார்கள். நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் ஜாதகம் பார்த்து நடந்த கல்யாணம் என்று ஏதாவது ஒன்று உண்டா? சீதை ராமனையும், தமயந்தி நளனையும், திரௌபதி பாண்டவர்களையும் கைப்பிடித்தது சுயம்வரத்தில். ருக்மிணி கிருஷ்ணன், சுபத்திரை அர்ஜுனன் திருமணங்கள் மாப்பிள்ளை பெண்ணத் தூக்கி வந்து நடத்தியவை! முருகன் வள்ளியைக் காட்டில் தேடிச் சென்று மணந்தான். துஷ்யந்தன் சகுந்தலையைக் காட்டில் கண்டு காதல் கொண்டு காந்தர்வ விவாகம் புரிந்தான். சிவன் பார்வதி, முருகன் தெய்வானை, கண்ணகி கோவலன் திருமணங்கள் பெற்றோர்கள் சம்மத்துடன் ஊர் கூடி நடந்தது (ஜாதகம் பார்த்ததாக காவியங்களிலும், புராணங்களிலும் குறிப்பு இல்லை). பெரியவர்கள் பார்த்து நடத்தும் இத்தகைய விவாக முறைக்கு “பிரம்ம விவாகம்” என்று பெயர். இதில் ஒருவருக்கொருவர் குணத்திலும், அழகிலும் பொருத்தமுடைய இருவர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மணம் புரிய வேண்டும் என்று தான் வரையறை இருக்கிறதே தவிர, ஜாதகம் பார்க்க வேண்டும் என்று இருப்பதாகத் தெரியவில்லை! ஜோதிடம் கிளப்பி விட்ட பய உணர்வின் காரணமாகவும், இவ்வளவு முக்கியமான திருமண பந்தத்தை கிரகங்களின் பாதிப்பு சிறு அளவில் இருந்தாலும் கெடுத்து விடக் கூடாதே என்ற கவலையின் காரணமாகவும் இந்தப் பழக்கம் உருவாகி, இன்று பல திருமண உறவுத் தீர்மானங்களில் முதல் முக்கிய விஷயமாக ஆகும் அளவுக்கு பூதாகாரமாக வளர்ந்திருக்கலாம்.

மொத்தத்தில், எந்த சமய கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஜோதிட நம்பிக்கைகளுக்கான ஆன்மீக அடித்தளம் இல்லை என்றாகிறது. மரபுசார்ந்த காலக் கணக்கு என்ற அளவில் பஞ்சாங்கம், தமிழ் மாதங்கள், விரதங்கள், பண்டிகைகள் முதலிய அம்சங்களைக் கடைப்பிடிக்கலாம், கடைப்பிடிக்க வேண்டும். வானியல் இன்று Astronomy, Astrophysics என்று தனி அறிவியல் துறையாகவே ஆகி விட்டது. இதற்கு மேல் ஜோதிடத்தில் எஞ்சி இருப்பவை குருட்டு நம்பிக்கைகள் தான் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

இந்தக் கட்டுரை ஜோதிட நம்பிக்கையுள்ள சில சமய, ஆன்மீக அன்பர்களைக் குழப்புவது போல் தோன்றலாம். குழப்பத்திலிருந்து தான் தெளிவு பிறக்கும். மகா யோகியாகவும், மகா பக்தராகவும் திகழ்ந்த மகாகவி பாரதியின் இந்த புதிய ஆத்திச்சூடி உபதேசங்கள் மனத்தை இன்னும் தெளிவாக்கும்.

அச்சம் தவிர்
சோதிடந்தனை இகழ்
ஞாயிறு போற்று
தொன்மைக்கஞ்சேல்
தவத்தினை நிதம் புரி
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்
பீழைக்கிடம் கொடேல்
லீலையிவ்வுலகு
விதையினைத் தெரிந்திடு
வானநூற் பயிற்சி கொள்
வேதம் புதுமை செய்

2 comments:

Muse (# 01429798200730556938) said...

சிவன் பார்வதி, முருகன் தெய்வானை, கண்ணகி கோவலன் திருமணங்கள் பெற்றோர்கள் சம்மத்துடன் ஊர் கூடி நடந்தது (ஜாதகம் பார்த்ததாக காவியங்களிலும், புராணங்களிலும் குறிப்பு இல்லை).


ஆச்சரியமளிக்கும் தகவல்.

ஆனால், சுபமுகூர்தத்தில் அந்த திருமணங்கள் நடந்தன என்பதுமாதிரி படிக்கிறோமே.

ஏன், ஐந்தாம் வேதமான மஹாபாரதத்திலும்கூட செயல்களை ஆரம்பிக்க நல்ல நேரங்களை ஸஹாதேவன் குறித்துக்கொடுத்த நிகழுவுகளைக் காண்கிறோம்.

ராவணன் அஸுர பிறவி எடுத்ததற்குக் காரணமே ஸந்தி நேரத்தில் அவனுடைய பெற்றோர்கள் இணைந்ததுதான் என்றிருக்கிறது.

அதுவுமன்றி, ஜோஸியம் என்பதுகூட வேதங்களின் ஒரு பகுதியாகிவிட்டதே. அது எவ்வாறு?

புத்தரின் வாழ்க்கை முதல், விவேகானந்தவர் வாழ்க்கை உள்ளீடாக அவர்களது ஜாதகங்கள் அவர்களின் உயர்வை குறிப்பதாக அமைந்துள்ளதே. இதுவும் எதனால்?

நான் ஒன்றும் ஜோஸியத்தின் அதி தீவிர விஸிறி இல்லை. பெரும்பாலான மக்கள்போல 50 - 50 கேஸு. உங்களின் பதில்கள் தெளிவை தரும் என்பதால்தான் கேட்கிறேன். மூன்றாம் பாகம் எதிர்பார்க்கலாமா?

ஜடாயு said...

திருமணத்தில் ஜாதகம் பார்க்கவில்லை, ஆனால் நல்ல நேரம் பார்த்தார்களே என்று கேட்கிறீர்கள், நல்ல கேள்வி.

சிலப்பதிகாரம்

இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர்,
........

வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.

ம்.. ஜோஸியத்தின் சில கூறுகள் இதில் வருகின்றன. பெருநாள் என்பது நல்ல நாள் என்று கொள்ளலாமோ?

வேத அங்கமாக உள்ள ஜ்யோதிஷம் எப்பேற்பட்டது என்று பாகம்-1லேயே சொல்லியிருந்தேன். இன்று உள்ள Astoronomy, Astorphysics துறைகளின் ஆதிகால முன்னோடி என்று வரலாற்றுச் சிறப்புக்காக அது பற்றிப் பேசலாம், ஆனால் நடைமுறையில் இன்றைய வானியல் வேதகால அறிவைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டது.

இதிகாசங்களில் இப்போதைய ஜோதிட நம்பிக்கைகள் பற்றி சில விஷயங்கள் இருக்கலாம். ஆனால் நடக்கும் எல்லா விஷயங்களும் நாள்-கோள்களால் தான் நடக்கின்றன (ராவனன் பிறப்பு பற்றி இங்கு நீங்கள் சொன்னது போல) என்ற கருத்து கண்டிப்பாக இல்லை. தேடிப் பார்த்தால் புத்தர், விவேகானந்தர் ஜாதகம் போலவே உள்ள 40-50 ஜாதகங்கள் இன்றும் கிடைக்கலாம் (going just the law of probability here), ஆனால் இவர்கள் யாரும் அப்படி மாமனிதர்கள் ஆகவில்லையே?? இதற்கும் ஜோதிடத்தில் ஏதாவது விளக்கம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள் :))