Showing posts with label திராவிட. Show all posts
Showing posts with label திராவிட. Show all posts

Friday, May 09, 2008

திராவிட திருக்குறள் பார்வைகள் இன்னொரு எதிர்வினை

சென்ற திண்ணை இதழில் மு.இளங்கோவன் இப்படி ஒரு எதிர்வினையை எழுதியிருக்கிறார்.

முதலில் ஒரு சில்லறை விஷயம். என் பெயரை நான் எழுதுவது போலன்றி “சடாயு” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பெயரைப் பல வகைகளில் எல்லா மொழிகளிலும் எழுதமுடியும் தான். ஆனால் ஒருவரைப் பெயர் சொல்லி அழைக்கையில் அப்பெயருடையவர் எழுதுவது போலவே எழுதுவது என்பது அடிப்படை நாகரீகம், பண்பு, இணைய ஒழுக்கம் (netiquette). இதிலும் கொள்கை, புண்ணாக்கு எல்லாம் கலப்பது, எனது பெயரை இப்படித் திரிப்பது என்பது அநாகரீகம்.

(“தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை” என்று தானே கம்பன் சொல்லியிருக்கிறான்? ஆமாம். ஆனால் கம்பன் சொன்னது போலவே எல்லாப் பெயர்களையும், எல்லாக் காலத்திலும், எல்லாரும் எழுதிக் கொண்டிருக்கிறோமா? தொல்காப்பியர் சொன்ன பெயர்ச்சொல் விதிகளின் படி தான் இப்போது எல்லாரும் பெயர் வைத்துக் கொள்கிறார்களா?)

மேலும் சொல்கிறார்:
// “அவரின் இணையப்பக்கத்தில் உள்ளஅவர்தம் கொள்கை முழக்கங்களையும் காணும்போது அவர் யார் என்பதையும், அவர் உள்ளத்துள் உறைந்துள்ள எண்ணங்கள் என்ன என்பதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது”//

அடேயப்பா! ஒருவரது ஒரே ஒரு வலைப்பதிவைப் பார்த்தே இவ்வளவு தூரம் உளவறியக் கூடிய ஜித்தர்கள் எல்லாம் இருக்கிறார்களா? ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

// “கட்டுரையைப்பற்றி எழுதியுள்ளதைவிட கிறித்தவ மதம்,திராவிட இயக்கம் பற்றித் தாக்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும்” //

இது அபாண்டம். என்னுடைய கட்டுரையில் நான் தொட்டுக் காட்டிய மூன்று விஷயங்கள் சுருக்கமாக -

1. தமிழ்ப் பழம்பெருமை, நவீனத்துவம், கடவுள்மறுப்பு ஆகிய முரண்களை சமாளிக்கத் தெரியாத திராவிட இயக்கம் கால்டுவெல்லின் “ஆரிய திராவிட இனவாதத்தை” வைத்து ஒரு சட்டகம் உருவாக்கியது.
2. இந்தச் சட்டகத்தைக் கொண்டு திருக்குறளுக்கு கண்மூடித்தனமாக உரைகண்டது, அடிப்படை தர்க்க ஓட்டைகள், சொல் பயன்பாடு போன்றவற்றைக் கூட கண்டுகொள்ளாதது
3. இத்தகைய செயல்கள் மத்திய கால நிறுவன கிறிஸ்தவத்தின் DeHellenization முயற்சிகளின் மோசமான காப்பி போன்று இருந்தது
இதை இப்படிப் புளியைப் போட்டு விளக்கிய பின்னும், முத்திரை குத்துதல் மூலமே ஒரு வாதத்தை எதிர்கொள்ள நினைப்பவர்கள் பற்றி ஒன்றும் பேசுவதற்கில்லை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, திராவிட இயக்கத்தின் பொதுவான “சட்டக” அணுகுமுறை குறித்து நான் கூறியிருந்தவற்றை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் இந்த எதிர்வினையும் எழுதப் பட்டுள்ளது.

இப்படி எழுதிச் செல்கிறார்.
// “தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்தி ஏமாற்றி வாழ்ந்தவர்கள் ஆரியர்கள்” //
// தமிழ் இலக்கியங்களையும்,தமிழர்தம் கலைகளையும் சமற்கிருதமயமாக்கிக் கொண்டு தமிழ்மூலத்தை அழித்தவர்கள் //
// பின்னர் வளவன், வழுதி,பாண்டியன், சேரன் என்ற பெயர்கள் மாறிஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்,விஜயாலயன் வந்தன. தமிழ் நீச பாஷையானது.மக்கள் அடிமையாக்கப்பட்டனர். //

அடடா, என்ன அரிய கண்டுபிடிப்பு! அந்த “அடிமையாக்கப் பட்ட” தமிழினத்தில் தான் உலகெங்கும் தமிழ்ப் பெருமையை நிலைநாட்டிய ராஜராஜனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும் தோன்றினரா? இன்றும் தமிழனின் சிற்பக் கலையைப் பறைசாற்றும் மாமல்லபுரமும், தஞ்சைப் பெருங்கோயிலும், திருவரங்கமும் தோன்றினவா?





இந்த “நீசபாஷையாக்கப் பட்ட” தமிழில் தான், தமிழின் அதிஉன்னத காவியங்களான கம்பராமாயணமும், பெரியபுராணமும், சிந்தாமணியும் படைக்கப் பட்டனவா? தமிழர் சமயத்தின் ஆணிவேர்களான சைவத் திருமுறைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் எழுந்தனவா? வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனும், சங்கத் தமிழ்மாலை முப்பதும் செப்பிய ஆண்டாளும், தமிழ்விரகன், தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட சைவப் பெருந்தகையும் உருவானார்களா?

இந்த அடிப்படையான, எளிமையான கேள்விகளைக் கூட சிந்தித்துப் பார்க்காமல், அது எப்படி தன்னை ஒரு சட்டகத்தில் அறைந்து கொண்டு ஒரு “முனைவர்” எழுதுகிறார்? சொல்லப் போனால் இந்தக் கேள்விகளை என் முதல் பதிவிலேயே எழுப்பியாகி விட்டது.

// முகத்தை மறைத்துக்கொண்டு எழுதும் சடாயுவுக்கும் அவர் போன்றவர்களுக்கும், ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் //

தொடக்கத்தில் ஜடாயுவின் ஜாதகமே தெரியும் என்ற ரீதியில் எழுதினார். இப்போது “முகத்தை மறைத்துக் கொண்டு”. என்னதான் சொல்லவரீங்க? “அவர் போன்றவர்கள்” என்பது யார்? திண்ணை என்பது சுயபுத்தியுள்ளவர்கள் படிக்கும் இணைய இதழ், திராவிய இயக்கப் பொதுக்கூட்ட மேடையல்ல என்று நினைவுபடுத்த விரும்புகிறேன்.

என்னை சில புத்தகங்கள் படிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். திண்ணை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான வரலாற்று அறிஞர் எஸ்.இராமச்சந்திரனின் “தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்” என்ற இந்த ஒரு கட்டுரையைப் படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு

பின்குறிப்பு:

இதே கடிதத்தில் சம்பந்தமே இல்லாமல் வேத திருமணச் சடங்கில் வரும் ஒரு மந்திரத்தைப் பற்றிய “சட்டக” அபத்தக் கருத்து ஒன்றை அப்படியே போகிற போக்கில் உமிழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.

// இவர்கள் திருமணம் செய்யும் பெண்ணை தூய்மை(புனிதம்)பெறும்பொருட்டு முதலில் சோமனும்,அடுத்த நாள் கந்தருவனும்அதற்கடுத்த நாள் உத்திரனும்,நான்காம் நாள் அக்கினியும் நுகர்ச்சிசெய்தபிறகு இவளை மணம்செய்தவன் புணரவேண்டும் என்ற மந்தரங்கள் அருவருப்பு ஊட்டும் தந்திர வித்தைதானே //

இதில் “இவர்கள்” என்பது யார்? பாரத நாடு முழுதும் ஏராளமான சமூகங்கள் வேதத் திருமணச் சடங்கில் நம்பிக்கை வைத்து அதன்படி மணம் புரிகின்றனர். அவர்கள் அத்தனை பேரையும் அவதூறு செய்திருக்கிறார். இதற்கும் எடுத்துக் கொண்ட பொருளுக்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தமில்லையென்றாலும், தெரிந்துகொள்ள விழைபவர்களுக்காக இது பற்றிய எனது பழைய பதிவு ஒன்றை பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

பிற்சேர்க்கை: ஒரு மணப்பெண்ணும், தேவதைகளும், திராவிட பகுத்தறிவும்

Thursday, May 08, 2008

ஒரு மணப்பெண்ணும், தேவதைகளும், திராவிட பகுத்தறிவும்

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வெறியர்கள் இந்து சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக வசைபாடுவது தெரிந்த விஷயம் தான். சில சமயங்களில் பித்தம் தலைக்கேறி ஏதாவது ஒரு வேதமந்திரத்தையோ அல்லது வேத இலக்கியத்தில் உள்ள படிமத்தையோ எடுத்துக் கொண்டு, அதற்குப் “பொருள் கூறி” அது உலகத்திலேயே அருவருப்பான விஷயம் என்றெல்லாம் பிரசாரம் செய்வார்கள்.

உதாரணமாக, பாணிக்ரஹணம் எனப்படும் கைத்தலம் பற்றும் சடங்கின் போது மணப்பெண்ணை நோக்கிச் சொல்லப் படும் ஒரு மந்திரம்:

सोम: प्रथम: विविदे गन्धर्वो विविद उत्तर: ॥
तृतीयो अग्निस्ते पति: तुरीयास्ते मनुष्यजः ॥

ஸோம: ப்ரதம: விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்னிஸ்தே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜ:
(ரிக்வேதம் 10.85.40)


“முதலில் சோமனும், இரண்டாவதாகக் கந்தர்வனும், மூன்றாவதாக அக்னியும் உன்னை சுவீகரித்தனர். பெருமைக்குரிய தேவர்களால் சுவீகரிக்கப் பட்ட உன்னை, இறுதியாக மனிதனாகிய நான் வரிக்கிறேன்”

பார்ப்பனர்களின் இந்த மந்திரம் பெண்மையை இழிவு செய்கிறது, இழிவான பெண்ணை தூய்மைப் படுத்துவது என்பது தான் இதன் பொருள் என்று ஒரு அவதூறு. “மூன்று பேர் மணந்த பென்ணை நாலாவதாக மணக்கிறேன் என்று சொல்கிறான், எந்த மானமுள்ள ஆண்மகனாவது இப்படிச் செய்வானா?” என்பது “கற்பு என்பதே ஒரு பொய்க் கற்பிதம்” என்று பேசுவதாகச் சொல்லிக் கொண்ட இந்த இயக்கத்தின் இன்னொரு அவதூறு.

முதலில் இந்த மந்திரத்தின் தாத்பர்யம் என்ன? பிறந்தது முதல் தேவர்களின் ஆசிர்வாதத்தாலும், அனுக்ரஹத்தாலும் வளர்ந்த பெண்ணை, அவர்கள் ஆசியுடன் மனிதன், அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்றுக் கொள்வது என்பது.

எல்லா வேதமந்திரங்களையும் போல, இதிலும் “தேவர்கள்” என்பவர்கள் ஆசாமிகள் அல்லர். அகமும், புறமும் உள்ள தெய்வ சக்தியின் குறியீடுகள். “சோமன்” என்பது எல்லா உயிர்களிலும் அடங்கியிருக்கும் பரம்பொருளின் ஸ்வரூபமான ஆனந்தம் என்ற தத்துவத்தைக் குறிப்பது, கந்தர்வன் என்பது மனத்தில் காமம் என்ற விதையை ஊன்றும் இச்சா தத்துவம். அக்னி என்பது தெய்வீக சக்தி ஓங்கி வளர்ந்து தன் உன்னத நிலையை எய்துவதன் குறியீடு. இந்த தெய்வ சக்தியே இகம்,பரம் என்ற இரண்டு விதமான சுகங்களையும் நோக்கி மனிதனை இட்டுச் செல்கிறது.

இதை ஒரு அழகிய கவிதையாகக் கண்டு அனுபவிக்கவும் இடமிருக்கிறது,

“சிறுமியாக இருக்கையில் முதலில் நீ நிலவைக் கண்டு மையல் கொண்டாய்
பின்னர் மேகங்களில் வழிந்தோடும் இசையில் மனம் பறிகொடுத்தாய்
பின்னர் ஆசைத் தீ உன்னைப் பற்றியது.
ஓ பெண்ணே
நான்காவதாக மனிதனாகிய நான் உன்னை வரிக்கிறேன்.
ஏற்றுக் கொள்.”

சோமன், நிலவு, மனம், ஆனந்தம் இவை அனைத்தும் வேதப் படிமத்தில் தொடர்புடையவை. கந்தர்வர்கள், இசை, கலைகள், மேகங்கள் இவையும்.

தத்துவமும், கவித்துவமும் ததும்பும் அழகிய மொழியில் சொல்லப் பட்ட இந்த மந்திரத்தில் அருவருப்பைக் காணும் திராவிட பகுத்தறிவு ஒருவிதமான மனப்பிறழ்வு நிலை என்று தான் கூற வேண்டும்.

பெண் இழிவானவள் என்று கூறவந்தால் தேவர்கள் அவளைத் தள்ளினார்கள் என்றல்லவா இருக்கவேண்டும்? ஆனால் இங்கே ஸ்வீகரித்தார்கள் என்று வருகிறது. மேலும் இந்த ஒற்றை மந்திரத்தை வைத்து ஒன்றும் சொல்ல முடியாது. திருமணச் சடங்கில் உள்ள எல்லா மந்திரங்களும் பெண்ணை மிக உயர்வாகக் கூறுகின்றன.


“பெண்ணே, அர்யமாவும் பகனும் உன்னை ஆசிர்வதிக்கட்டும், என் குலம் விளங்க வரும் வரப்பிரசாதம் நீ”

“வேதத்தை அறிந்த பகன் முதலியோர், இல்லறம் என்ற புனிதமான விரதத்தை ஏற்றனர். உன் கரம் பிடித்த நானும், அந்த வம்சத்தைச் சேர்ந்தவனானேன்.”

“ஏழு அடிகள் என்னுடன் நடந்துவந்த நீ என் உயிர்த் தோழியாகி விட்டாய். நீ ரிக், நான் சாமம். நீ பூமி, நான் ஆகாயம். நீ சொல், நான் பொருள். நீ ஆத்மா, நான் மனம். இனிய சொற்களை உடையவளே, என்னைப் பின் தொடர்ந்து வந்த நீ என் வம்சத்தை விருத்திசெய்வாய்”

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சில வருடங்கள் முன்பு, சேலத்தில் அதிகமாக வசிக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தத்தின் போது ஒரு சடங்கு. சமூகப் பெரியவர் நடுவில் வந்து அமர்ந்தார். மணமகன், மணமகள் வீட்டார் இருபுறமும். சடங்கு ஆரம்பித்தது. மணமகனின் தந்தை மகளின் தந்தையிடம் ஒரு ரூபாய் கொடுத்தார், அதை அவர் மகளின் தாயிடம் கொடுத்தார், பெரியவர் சொன்னர் “இது மகளைப் பெற்று வளர்த்ததற்காக”. அடுத்தது இன்னொரு ரூபாய், “இது பாலூட்டியதுக்காக”. அப்புறம் ஒரு ரூபாய் “இது சீராட்டியதற்காக”. இப்படி ஒரு பதின்மூன்று ரூபாய் வரை போயிற்று. இந்தப் பரிமாற்றம் முடிந்ததும் பத்திரிகை வாசிக்கப் பட்டது. பக்கத்தில் இருந்த பெரிசு ஒருவர் “அந்தக் காலத்தில பதிமூணு பணம் அப்படின்னு குடுப்பாங்க, பெரிய தொகை அது.. மகளைப் பெத்துத் தந்ததுக்கான கடனைத் தீர்க்கணும் இல்லையா” என்று பேசிக் கொண்டிருந்தார்.

கிறிஸ்தவ திருமண நிச்சயதார்த்தங்களில், மணப்பெண் கையில் அணியும் மோதிரம் எதைக் குறிக்கிறது? அவள் முதலில் கர்த்தருக்கு மணமுடிக்கப் பட்டு பின்பு மனிதனுக்கு மனைவியாக வருகிறாள் என்று சொல்லுவார்கள். கிறிஸ்தவ கன்யாஸ்தீரிகள் தங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் சடங்கின் போது ஏசுவின் மணமகள்கள் (Brides of Jesus) ஆவதாகவே கூறுவார்கள்.

இது போன்ற பல சடங்குகள் தமிழ்நாட்டின் பல சமூகங்களின் திருமணங்களில் உள்ளன. இதில் எல்லாம் எந்த அருவருப்பும் தென்படவில்லையா? ஆரிய, வந்தேறி குணங்கள் எதுவும் தென்படவில்லையா? பகுத்தறிவுப் பகலவனுக்கே வெளிச்சம்.

(இணையத்தில் பதிப்பிக்கப் படாத எனது பழைய கட்டுரை ஒன்றின் மீள்பதிவு இது)

Friday, April 25, 2008

திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து

கிறிஸ்தவ இறையியலில் Dehellenization என்று ஒரு கருதுகோள் உண்டு. “ஹெலன் இல்லாமல் ஆக்குவது” என்ற பொருள் தொனிக்கும் இந்தப் பதத்தின் உண்மைப் பொருள் “கிரேக்கத் தாக்க நீக்கம்” என்பதாகும் (நன்றி: அருணகிரி) 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க சர்ச்சின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து பிராட்டஸ்டண்ட் இயக்கம் எழுந்தபோது இந்தக் கருத்தியல் உருவானது. கிறிஸ்தவ மதக் கொள்கை, அதன் சின்னங்கள், சமய இலக்கியம் இவற்றில் இழையோடிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட கிரேக்க தத்துவ ஞானம், கிரேக்க புராண, உருவவழிபாட்டு “பாகன்” மத தாக்கங்கள் இவற்றைத் திட்டமிட்டு நீக்கி, கிறிஸ்தவத்தை “சுத்திகரிக்க” வேண்டும் என்ற எண்ணத்துடன் பைபிள் முழுவதும் இந்தப் பார்வையில் வாசிக்கப்பட்டு அதன் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் “பண்டிதர்கள்” உருவானார்கள். ஆனால், மதிப்பீடுகள் மாறிவரும் நவீன காலகட்டங்களில் கிரேக்க தத்துவ தரிசனத்துடன் பைபிளும், கிறிஸ்தவமும் தொடர்புடையது என்று நிறுவுவதும் ஒருவகையில் சாதகமான நிலைப்பாடு தான் என்றும் கருதப் பட்டது. இன்றும் வாத்திகன் மற்றும் ஏனைய கிறிஸ்தவ வட்டாரங்களில் இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பான குரல்கள் எழுந்துவருகின்றன. சர்ச்சையைக் கிளப்பிய தனது சமீபத்திய 2006ம் ஆண்டு உரையிலும் போப் இதுபற்றிக் குறிப்பிட்டார் (இந்த உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

முனைவர் மு.இளங்கோவன் என்பவர் திண்ணையில் சென்ற இரு வாரங்களாக எழுதி வந்த “திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள்” கட்டுரையைப் படிக்கும்போது இந்தச் சொல் என் நினைவில் தோன்றி மறைந்தது. பழந்தமிழ் இலக்கியங்கள், கலை மற்றும் கலாசார விஷயத்தில் DeHinduization (இந்துத்தன்மை நீக்கம்) என்கிற “சுத்திகரிப்பு” வேலையைத் தானே முதலில் தமிழகத்திற்கு வருகை புரிந்த கிறிஸ்தவ மிஷநரிகளும், பின்னர் அவர்களால் போஷிக்கப் பட்டு வரும் திராவிட இயக்கமும் செய்து வந்திருக்கின்றன?

ஆனால் இரண்டிற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. சர்ச் கிரேக்கத் தாக்கநீக்க வேலையை ஆரம்பித்த காலகட்டத்திற்கு ஒரு பன்னிரண்டு நூற்றாண்டுகள் முன்பே கிரேக்க மதமும், தத்துவமும், கலாசாரமும் கிறிஸ்தவத்தின் வன்முறைப் பரவலால் வேரறுக்கப் பட்டுவிட்டன. அதை வெளிப்படையாகக் கடைப் பிடிப்போர் யாருமில்லை. அவற்றின் ஒளியை தரிசிக்க விரும்பிய ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால ஆரம்ப சிந்தனையாளர்கள் கூட சர்ச் அதிகார அமைப்பால் வேட்டையாடப் பட்டனர். பின்னர் கிரேக்கத் தத்துவம் போற்றுதலுக்கு உரியதாக மாறிவந்ததும், சர்ச் அதன் ஒளியில் தானும் குளிர்காயத் தொடங்கியது.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த “சுத்திகரிப்பு” தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் இந்துமதம் இன்று போலவே உயிர்த்துடிப்புடன் வாழ்ந்து வந்தது. இந்திய தேசிய எழுச்சியின் நாயகர்களான விவேகானந்தர், திலகர், லாஜபத்ராய், அரவிந்தர், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்கள் இந்து கலாசார அடித்தளத்தின் மீதே தேசிய எழுச்சிக்கான கருத்தியல்களைக் கட்டமைத்தனர். தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட பாரத நாட்டின் அனைத்து சமுதாய வாழ்க்கை முறைகளிலும் இழையோடிக் கொண்டிருந்ததும் இந்தக் கலாசாரத்தின் கூறுகள் தாம் என்றும் அவர்கள் நாடெங்கும் எடுத்துரைத்தனர்.

ஆனால், இந்த தேசிய நீரோட்டத்திற்கு மாறாக “தமிழ்ப் பழம்பெருமை”, “நாத்திகம்/பகுத்தறிவு” என்ற இரண்டு தொடர்பேயில்லாத சண்டிக் குதிரைகள் மீது சவாரி செய்ய விரும்பியது திராவிட இயக்கம். ஒரு மிகப்பெரிய நகைமுரணாக, “நவீன” சித்தாங்களின் அடிப்படையில் எழுந்ததாகத் தன்னை சொல்லிக் கொண்ட இந்த இயக்கம் வெறித்தனமான மரபு வழிபாட்டு, இனப்பெருமைக் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது, அவற்றை வளர்த்தெடுத்தது. பண்டைக் கலாசாரத்தின் கூறுகளை முழுமையாக மறுக்கும் “தூய” பகுத்தறிவுவாதம் தமிழ்மண்ணில் சுத்தமாக எடுபடாது என்பதை இந்தப் பகுத்தறிவுப் பகலவன்கள் அறிந்தே இருந்தனர்.

ஆனால் கோயில்களும், சிற்பங்களும், பேரிலக்கியங்களும், பாரம்பரிய இசை, நடனக் கலைகளும், சைவ, வைணவ சமயங்களும் இல்லாமல் “தமிழ்ப் பழம்பெருமை” என்று ஒன்று இருக்கவே முடியாதே, என்ன செய்வது? இந்த ஓட்டையை இட்டு நிரப்பத் தோதாகக் கிடைத்தது கால்டுவெல் பாதிரியார் உருவாக்கிய போலியான ஆரிய-திராவிட இனவாதக் கொள்கை. அதிலிருந்து முளைத்தவையே பிராமண வெறுப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, வட இந்திய வெறுப்பு, சம்ஸ்கிருதக் காழ்ப்புணர்ச்சி எல்லாம்.

இந்தச் சட்டகம் இறுதி வடிவம் அடைந்ததும், தங்கள் கையில் கிடைத்த பழந்தமிழ் இலக்கியங்களையும், கலாசாரப் பிரதிகளையும் இந்தப் பார்வையில் திரித்து, உருமாற்றி, சிதைத்து புதுப்புது விளக்கங்கள் அளிப்பது திராவிட இயக்க குடிசைத்தொழில் போன்று ஆகியது. ஒப்பீட்டளவில் “கிரேக்கத்தாக்க நீக்கம்” செய்த பாதிரிகளுக்கு இருந்த ஆழ்ந்த புலமையில் சிறிதளவும் தேராத “புலவர்”களும், பாவலர்களும், நாவலர்களும், தமிழ்க் காவலர்களும், அரசியல் ஏவலர்களும் கூட இதில் புகுந்து விளையாடினர். “சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்க” ஒருவர் அறைகூவுவார். இன்னொருவர் வானளவாவ உயர்ந்த கோபுரங்களையும், அணிமாடக் கோயில்களையும் கட்டிய தமிழனின் சிற்பக் கலை உன்னதத்தைப் பற்றி அடுக்குமொழியில், துடுக்கு நடையில் உரையாற்றுவார்!

இந்தக் கட்டுரை தரும் திராவிட இயக்க திருக்குறள் உரைப் பட்டியலில் வ.சுப.மாணிக்கம் போன்று ஒரு சில உண்மையான அறிஞர்களின் உரைகள் தவிர்த்து, பெரும்பாலான உரைகளை இன்று படித்துப் பார்க்கும், ஓரளவு இலக்கியப் பிரக்ஞையும், கொஞ்சம் மரபிலக்கியப் பயிற்சியும் உள்ள எந்தத் தமிழ் வாசகனும் அவை எவ்வளவு போலித்தனமாகவும், அறிவுசார் நேர்மை இன்றியும், குருட்டாம்போக்கிலும் எழுதப்பட்டுள்ளன என்பதை உணரக் கூடும்.



பரிமேலழகர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியாராக இருந்தவர் என்பது மரபு

திருக்குறள் தமிழிலக்கியத்தின் ஒரு சிகரம் என்றால், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப் படும் ஈடு இணையற்ற உரையாசிரியர் பரிமேலழகர் அதற்குச் செய்த உரையை தமிழிலக்கியத்தின் சிகர தீபம் என்பதே சரியாக இருக்கும். எல்லா பழம் நூல்களையும் போல, காலம் கடந்து நிற்கும் இவ்வுரையும் சிற்சில இடங்களில் தன் காலத்தைப் பிரதிபலிப்பதாகவே இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே (திருக்குறளும் இதற்கு விதிவிலக்கல்ல). ஆனால் பரிமேலழகரின் உரையில் “ஆரிய சதிவேலை”யைத் தோண்டித் துருவிக் கண்டுபிடித்துப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கும் இந்த உரையாளர்களுக்கு, அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்தால், அதே “ஆரிய சதிவேலை”யைத் திருக்குறளின் உருவாக்கத்திற்கே கூட மிக எளிதாகப் பொருத்திவிடலாம் என்ற அடிப்படைத் தர்க்கம் கூட புரியாமல் இருந்தது ஆச்சரியம் தான்! (திருக்குறளில் வேதநெறி பற்றிய பல குறிப்புகளை இந்தத் திண்ணைக் கட்டுரையில் காணலாம்)


திருவள்ளுவ நாயனார், திருமயிலை

இத்தகைய தர்க்க ஓட்டைகளை அடைப்பதற்கு, திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு இவர்கள் பொருள் கொள்ளும் விதம், உலக மொழியாராய்ச்சிகளின் ஓட்டைச் சித்தாந்தங்கள் (crack pot theories) எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும்! ‘அமிழ்தம்’ என்பதன் பொருள் பாற்கடல் அமிர்தம் அல்ல, அது அம்மா ஊட்டும் “அம்ம”மாம். ஆனால் சங்கநூல் புறநானூற்றில் “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்..” என்று வருகிறது, சிலப்பதிகாரம் “அலையிடைப் பிறவா அமிழ்தே” என்கிறதே என்று ஒரு சாதாரண ஆள் கூடக் கேட்கலாம். ஆனால் அதற்கெல்லாம் திராவிட அகராதியில் பதில் கிடையாது. இதை இப்படியே நீட்டி “கருமம்” என்பதற்கு “கரு மம்மம்” அதாவது கரிய சோறு (வெள்ளைச் சோறு ஆரிய உணவு!) என்றும் தனித்தமிழ்ப் பொருள் தரலாம். திருக்குறளின் “வேள்வி”யும் “வேட்ட”லும், திராவிட உரைகளில் வேட்டைக் காரனில் இருந்து வேட்டி வரை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். சரி, புறநானூற்றின் “இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி” யாகம் தானே செய்தான் என்றால் அதற்கும் அதிர்ச்சிகரமான பல திராவிட உரைவிளக்கங்கள் வரலாம்! தேவர்களாக இருந்த “புத்தேளி”ரை திராவிடர்கள் “புதிய தேள்”களாகக் கூட ஆக்கி விடுவார்கள்! இந்த உரைகள் எழுதப்பட்ட காலத்தில், உலகத்திலேயே அதிக அளவு மொழிக் கோமாளிகள் தமிழ்நாட்டில் தான் இருந்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியும். இவர்களின் தலைவரை மொழிஞாயிறு என்றும் அழைத்து தமிழக அரசு கௌரவப் படுத்தியது. இன்றும் மெரீனா கடற்கரையில் அமாவாசை தினங்களில் நடு இரவில் சில பிசாசுகள் வந்து இதுபோன்ற தனித்தமிழ்ச் சொல்லாராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பதாகக் கேள்வி.

“செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென” என்னும் மணிமேகலையையும் “ஊரவர் கவ்வை எருவாக, அன்னைசொல் நீர்மடுத்து” என்ற திருவாய்மொழியும் போன்று, திருக்குறளின் சொற்களையும், பொருள்களையும் அதற்குப் பின்வந்த பல நூல்கள் பல இடங்களில் நேரடியாகவே எடுத்தாண்டுள்ளன. அதனால் திருக்குறளில் புழங்கும் இத்தகைய பழம்சொற்கள் ஏதோ உறைந்து கிடந்ததாக எண்ணி, அவற்றுக்குப் “புதுமைப்” பொருள் கூற முயன்ற செயல், இத்தகைய உரையாளர்களின் இலக்கிய, மொழியியல் அறியாமையையே காட்டுகிறது. கி.வா. ஜகன்னாதன் பதிப்பாசிரியாராக இருந்து கொணர்ந்த “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” ஒவ்வொரு குறளுக்கும், இத்தகைய மேற்கோள்களைத் தேடித் திரட்டித் தொகுத்திருக்கின்றது (இந்த நூல் பற்றிய எனது திண்ணைப் பதிவு)

மொத்தத்தில், திராவிட இயக்கம் நிகழ்த்த முயன்ற இந்தக் கலாசார அழிப்பு வேலையில் தமிழரின் உன்னத அறிவுக் கருவூலமான திருக்குறளும் தப்பவில்லை என்பதையே ஒரு இரங்கற்பா போன்று அந்தக் கட்டுரை சொல்லிச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது.