Wednesday, February 28, 2007

பெண்ணடிமையை மனுநீதி வலியுறுத்துகிறதா?

சரியான பார்வையில் மனு ஸ்மிருதி : மலர் மன்னன்

ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி என்கிற எண்ணம் நம்மில் பலரிடையே நிச்சயமாகிவிட்டிருக்கிறது. விருப்பு வெறுப்பின்றி, முன்கூட்டியே ஓர் அபிப்பிராயத்துடன் அணுகாமல் ஆராய்ந்து பார்த்தால்தான் மனு நீதி என்கிற மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் விதிமுறைகள் எத்தகையன என்னும் முடிவுக்கு வரமுடியும்.

முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ஸ்ருதி என்கிற செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள். நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. கண்ணபிரான் அருளியதாக அறியப்படும் பகவத் கீதையையுங்கூட ஸ்ருதி என்று கூற வியலாதுதான். ஆனால் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு வாய்மொழியாக அது உபதேசிக்கப்பட்டமையால் அதையும் ஸ்ருதியெனக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுவோர் உண்டு. ஸ்மிருதி எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள். வேத காலத்திற்குப் பின் வெகு காலங் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன. மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கொள்பவைதாம் தர்ம சாஸ்திரங்கள். அவ்வாறு மாற்றங்கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டுபிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று தர்ம சாஸ்தரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன. ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆக, ஹிந்து சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு, ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சந்தான். மனு நீதி எனப்படும் மனு ஸ்மிருதியானது ஹிந்து சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல. மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது. ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு சமுதயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை, தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது, மனு ஸ்மிருதி. விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது.


மனு ஸ்மிருதி எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை. எந்தக் கால கட்டத்தில் அது ஹிந்து சமூகத்தால் வார்த்தை பிசகாமல் அனுசரிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஸ்ருதிகளான வேதங்கள் தோன்றி நீண்ட நெடுங்காலம் கழிந்த பிறகுதான் ஸ்மிருதிகளுள் ஒன்றான மனு ஸ்மிருதி தோன்றியது. மனு ஸ்மிருதிக்குப் புராண அந்தஸ்தை அளிப்பதற்காக அதனை இயற்றியவர் மனு என்கிற ஆதி புருஷன் என்று கற்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்ப காலம் என்றும், ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு ஆதியானவர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தற்சமயம் நடப்பது ஏழாவது மன்வந்தரம். இதன் ஆதிபுருஷர் வைவஸ்த மனு என்கிறது, புராணம். இந்த மனு எழுதி வைத்ததுதான் மனு ஸ்மிருதி என்று எவரும் கூறினால் அதை ஏற்பது எளிதல்ல.

வரலாற்றுக் கண்ணோட்டப்படிப் பார்த்தால் சுங்க வம்சத்துப் பேரரசர் புஷ்யமித்திரர் காலத்தில்தான் மனு ஸ்மிருதி என்கிற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டது என்று ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது. ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆக, புராதன வேத காலத்து ஹிந்து சமுதாயம் இந்த மனு ஸ்மிருதியை அனுசரித்திருக்க வாய்ப்பில்லை. மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் கி. மு. முதல் நூற்றாண்டு என ஒரு கருத்து நிலவுகிறது.

மனு ஸ்மிருதியைப் பற்றிய பிரதான கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின. இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன. மேலும் மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியர்களால், அவர்களின் கண்ணோட்டத்திற்கும் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கும் பயிற்சிக்கும் ஏற்பவே இருக்கும் என யூகிப்பதில் தவறிருக்காது.

மனு ஸ்மிருதியில் மொத்தம் 2031 செய்யுள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ஒழுக்க விதியை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த 2031 விதிமுறைகளும் எந்தக் கால கட்டத்திலேனும் ஹிந்து சமூகத்தால் பாரத தேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.
மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டிப் பேசப்படுகின்ற விதிமுறைகள் பலவும் அவரவர் கன்ணோட்டப்படியான விளக்கவுரைகளேயன்றி நேரடியான மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலை சிறந்த சமூக சீர்திருத்தத் துறவியும், ஆரிய சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி மனு ஸ்மிருதிக்கு ஒரு விளக்கம் தந்துள்ளார். மனு ஸ்மிருதியின் செய்யுள்களிலேயே பல ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போதைய வாய்ப்புகளுக்கு இணங்க மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன என்பதுதான். ஒன்றோடொன்று முரண்படும் விதிமுறைகளைக் கண்டறிந்து இன்றைய காலகட்டத்திற்கு எந்த விதிமுறைகள் பொருந்துகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, மனு ஸ்மிருதியின் இரண்டாம் சருக்கத்தின் தொண்ணூற்றேழாவது செய்யுள் கீழான குணவியல்புகள் உள்ள வர்கள் வேதமெய்ப்பொருளை அறியவியலாது என்று கூறுகிறது. பிறவியின் அடிப்படையில் பேசப்படாமல் குண நலன்களையே வலியுறுத்துவதாக இது இருப்பதால் இதனை ஏற்பதுதான் முறையாக இருக்கும்.
ஆண், பெண் என்கிற பேதமின்றி எல்லாக் குழந்தைகளையும் ஐந்து அல்லது எட்டாவது வயதிலாவது கட்டாயக் கல்வி பெறச் செய்வது பெற்றொருக்கு மட்டுமின்றி அரசுக்கும் நிர்வாக சபைகளுக்கும் கடமை யென்று ஏழாவது சருக்கத்தின் 152 வது செய்யுள் விதிக்கிறது. குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றே இச்செய்யுள் எச்சரிக்கிறது. எனவே பெண்களுக்குக் கல்வி அவசியமில்லை என விதிமுறை ஏதும் இருக்குமானால் முரண்பாடான அந்த விதியைத் தூக்கி யெறிந்துவிடலாம்.


திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, தனது ஒன்பதாவது சருக்கத்தின் தொண்ணூறாவது செய்யுளில் ஒரு பெண்ணுக்கு உரிய பருவத்தில் தன் தகுதிக்கு ஏற்ற கணவனைத் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை மனு ஸ்மிருதி உறுதிசெய்கிறது. எனவே பாலிய விவாகத்தை அது வலியுறுத்துவதாகக் கருதத் தேவையில்லை.

திருமணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தம், குண வியல்புகளுக்கியைந்த கருத்தொற்றுமை, உடல் ஆரோக்கியம் ஆகியவைதான் என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அவரவர் வகுப்பில் மணம் செய்துகொள்வது அவசியம் என்று கூறுகையில் இவற்றைத்தான் மனு ஸ்மிருதி வலியுறுத்துகின்றதேயல்லாமல் பிறவியின் மூலம் வருகின்ற வகுப்பைக் குறிப்பிடவில்லை.

பெண்களை மிக உயர்வாகப் போற்றும் பல செய்யுள்களை மனுஸ்மிருதியில் காணலாம். மூன்றாவது சருக்கத்தின் அறுபத்திரண்டாவது செய்யுள் மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கிறது. மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று மனு ஸ்மிருதி எச்சரிக்கிறது. பெண்களை தந்தைமாரும் சகோதர்களும், ஏன் கணவனுங்கூட வணங்கக் கடமைப் பட்டிருப்பதாக அது கூறுகிறது. பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது. பெண்கள் மதிக்கப் படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மனு ஸ்மிருதி அறிவுறுத்துகிறது. பெண்கள் துன்புறும் நிலை இருக்கின்ற குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது என்று அது சொல்கிறது. பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தனை நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்கிறது, மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் ஐம்பத்தைந்திலிருந்து, ஐம்பத்தொன்பது வரையிலான செய்யுள்கள் பெண்கள் நல னையே பிரதானமாக வலியுறுத்துகின்றன.

தகப்பன் பெயர் இல்லையேல் தாயின் பெயரால் பிள்ளைகள் அறியப்படட்டும் என்று சொல்கிற நடைமுறை வேத கால சமுதயத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் ஆண்களோடு சரி சமானமாக அமர்ந்து தத்துவ விசாரங்களிலும் தர்க்கங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகள் உண்டு. எனவே பெண்ணடிமை முறையும், பெண்களை அறிவார்ந் த சபைகளிலிருந்து விலக்கி வைக்கும் போக்கும் இடையில்தான் நுழைந்திருக்கக்கூடும் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குச் சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனு ஸ்மிருதியில் அதற்கு ஏற்ற இடைச் செருகல்கள் உள்நோக்கத்துடன் நுழைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.
மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள அறுபத்தைந்தாவது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந் தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிரு ந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்.


மேலும், பிராமணன் ஒரு குற்றம் இழைத்தால் அதற்கு மிக அதிக பட்ச மாகவும், அதே குற்ற்றத்தை இழைத்த சத்திரியனுக்கு அதைவிடச் சிறிது குறைவாகவும் வைசியனுக்கு அந்தக் குற்றத்திற்கு மேலும் குறைவாகவும் சூத்திரனுக்கு மிக மிகக் குறைவாகவும் தண்டனை விதிக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி நிர்ணயிக்கிறது. காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது. பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் ஆதலால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டணை விதிப்பதே பொருத்தம் என்கிறது, மனு ஸ்மிருதி.

மனு ஸ்மிருதியைப் பற்றிய விரிவான பிரஸ்தாபம் காலனி யாதிக்க காலத்தில்தான் தலையெடுத்தது. குறிப்பாக ஹிந்து சமூகத்தைக் குறை கூறி, மேற்கத்திய நாகரிகமும் சம்பிரதாயங்களும்தாம் மேன்மையானவை என்று மனதில் பதிய வைப்பதற்குத்தான் அத்தகைய பிரஸ்தாபம் பயன்படுத்தப் பட்டது. ஆங்கிலக் கல்வியின் வழியாகத் தம் தாயகத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் காணப் பழகியவர்களுக்கு காலனியாதிக்கக் கல்வியாளர்கள் மனு ஸ்மிருதி பற்றி வெளியிட்ட கருத்துகள்தாம் வேத வாக்காகவும் அமைந்துவிட்டன. அந்த அடிச்சுவட்டில் தொடர்ந்து நடப்பவர்களிடையே மனு ஸ்மிருதியைப் பற்றி ஒருதலைப்பட்சமான கருத்து நிலவுவது இயற்கைதான்.


பின் குறிப்பு:

திண்ணை இதழில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் எழுதிய கட்டுரை இது. அவர் அனுமதியுடன், அதை இங்கே மீள் பதிப்பிக்கிறேன்.

பெண்கள் பற்றி பொதுவாக மனு மிக உயர்வாகவே கூறிச் செல்கிறார், அவர் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தவில்லை என்று சுதந்திரமான வாசிப்பில் நானும் புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால், இது பற்றிய திரு. மலர்மன்னன் கருத்துடன் உடன் படுகிறேன்.

पुराणमित्यॆव न साधु सर्वं, सन्त: परीक्ष्यान्यतरात् भजन्ते ।
तातस्य कूपोयमिति ब्रुवाण:, क्षारम् जलं कापुरुषा: पिबन्ति ॥

இந்த சம்ஸ்கிருத சுலோகம் கூறுகிறது -

தொன்மையானது என்பதாலேயே எல்லா விஷயமும் நல்லது ஆகி விடாது
சான்றோர்கள் நன்கு சோதித்துப் பார்த்தபின்பே ஒரு விஷயத்தைப் போற்றுவார்கள்
முட்டாள்கள் தான் தன் தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக
அதில் வரும் உப்புத்தண்ணீரையும் குடித்துக் கொண்டிருப்பார்கள்!

அதனால், வர்ணாசிரமம் பற்றிய மனுஸ்மிருதியின் கருத்துக்கள் பலவும் எனக்கு ஏற்புடையவை அல்ல. சுவாமி விவேகானந்தரையும், டாக்டர் அம்பேத்கரையும், ஸ்ரீநாராயண குருவையும் முன்னோடிகளாகக் கொண்டு, சாதிப் பாகுபாடுகளையும், சாதீயத்தையும் வேரோடு ஒழிக்கப் பாடுபடும் இந்துத்துவ நிலைப்பாடே என்னுடையது.

ஆனால் மனுஸ்மிருதி என்பது முழுக்க ஒரு தீய நூல் போன்றும் மனு ஒரு அரக்கன் போன்றும் கூறும் சித்தரிப்புக்களே தொடர்கின்றன. இதுவும் தவறு என்று நான் கருதுகிறேன். திருக்குறளில் கூடக் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் உள்ளன. அதற்காக அந்த நூலையே தூக்கிப் போட்டு விடுவதில்லை நாம், அதில் வரும் நல்லவற்றை எடுத்துக் கொள்கிறோம் அல்லவா? அது போன்று தான் மனுஸ்மிருதியும் மதிப்பிடப் படவேண்டும்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

17 comments:

Anonymous said...

//பிராமணன் ஒரு குற்றம் இழைத்தால் அதற்கு மிக அதிக பட்ச மாகவும், அதே குற்ற்றத்தை இழைத்த சத்திரியனுக்கு அதைவிடச் சிறிது குறைவாகவும் வைசியனுக்கு அந்தக் குற்றத்திற்கு மேலும் குறைவாகவும் சூத்திரனுக்கு மிக மிகக் குறைவாகவும் தண்டனை விதிக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி நிர்ணயிக்கிறது. காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது. பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் ஆதலால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டணை விதிப்பதே பொருத்தம் என்கிறது, மனு ஸ்மிருதி.

//

பாப்பார பசங்க மட்டும்தான் நாட்டிலேயே பெரிய புலுத்திசாலின்னு சொல்ல வறாய்ங்கே???

Anonymous said...

சூத்திரன் வேதத்தை கேட்டுவிட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்து என்று மனு சுமிருதி சொல்லுவது தெரியாதா எங்கலுக்கு

Anonymous said...

தனக்கு பலபேர் கடிதம் எழுதி மேலும் பல விதயங்களை எழுதச் சொல்லுகிறார்கள் என்பதால் எழுதுவதாகச் சொல்லுகிறாரே, அவர்தானே இந்த மலர்மன்னன்?

இவர்மட்டும் ப்ளாக் ஒன்றை ஆரம்பித்தால் அவருக்குவரும் பின்னூட்டங்களிலிருந்து இவர் சொல்லுவதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

கற்பக விநாயகம் அசுரன் என்கின்ற வடிவத்தில் ஆட்சி செய்யும் இடம் இது. இங்கே வர தைரியம் வேண்டும்.

thiru said...

ஜடாயு,

திரு.அ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய மனுசாத்திரம் ஓர் அறிமுகம் கட்டுரையில் திரு.மலர்மன்னன் அவர்களுக்கு பதில் இருக்கிறது. இதையும் படியுங்கள்!

ஜடாயு said...

திருவின் பதிவில் போட்ட பின்னூட்டத்தை இங்கும் இடுகிறேன்.

--------

திரு,

மனுஸ்மிருதியின் மொழிபெயர்ப்புகள் பலரும் அறிந்தவை தான். ஆனால் கடைசி பத்தியில் இந்துத்துவ நிலைப்பாடு பற்றிக் கூறுவது தவறு.

இது பற்றி ஆர்.எஸ்.எஸ்-இன் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. ரமேஷ் பதங்கே அவர்கள் (தலித் உரிமைகளுக்காக மிகப் பெரிய அளவில் போராடியவர் இவர்) ஒரு நூலை எழுதியிருக்கிறார் - "சங்கமும், மனுவும், நானும்" (மராத்தியில் "சங், மனு ஆணி மீ"). இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இணையத்திலேயே உள்ளது -
http://hvk.org/specialrepo/mms/index.html

புராண கால மனுவை ஆதிபுருஷர் என்பதாக எல்லா இந்துக்களும் போற்றுகின்றனர். விஷ்ணுவின் மச்சாவதாரத்தில் பிரளயத்தில் இருந்து தப்பிய உலகம் மறுபடியும் உயிர்க்கும் தொன்மத்துடன் தொடர்புடையவர் இவர். மனிதன், மானிடன், மனுஷ்யன் என்ற பெயர்கள் எல்லாமே மனு என்பதில் இருந்து வருகின்றன. ('ஆத்மி' என்ற மனிதனைக் குறிக்கும் அரபிச் சொல் ஆதாமில் இருந்து வருவது போல) இமாசலப் பிரதேசத்தில் கோயில் கட்டப் பட்டது இந்த மனுவிற்குத் தான்.

இந்தக் கட்டுரையே குறிப்பிடுவது போல ஸ்மிருதியைச் செய்தவர் பெயரும், இந்தப் புராண புருஷரின் பெயரும் கலந்தது ஒருவிதான குழப்படி தான். மோசடி என்று சொல்லலாமா? அதை வரலாற்று ஆய்வாளர்கள் தான் சொல்ல வேண்டும்.

மற்றபடி, தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கூட மனு பற்றிய குறிப்பு உள்ளது (திருவள்ளுவ மாலை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம்...). வள்ளலார் "மனுமுறை கண்ட வாசகம்" என்ற பெயரில் தர்மசிந்தனைகளை விளக்கும் ஒரு நூலையே எழுதியிருக்கிறார். இங்கும் இரு மனுக்களும் ஒன்று என்பது போன்ற புரிதலே கிடைக்கிறது.

இந்த குழப்படியை எல்லாம் விட்டு மனுஸ்மிருதியை ஒரு நூல் என்று மட்டும் எடுத்துக் கொண்டால் அதில் காலத்துக்கு ஒவ்வாத இத்தகைய கருத்துக்களோடு பல நல்ல அறக் கருத்துக்களை விளக்கும் சுலோகங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நோக்கில் தான் நான் மனுஸ்மிருதியைப் பார்க்கிறேனே அன்றி புனித நூல் என்பதாக அல்ல.

ஜடாயு said...

திரு பதிவில் போட்ட இன்னொரு பின்னூட்டம்:
----

மனுஸ்மிருதி பற்றிய இந்துத்துவ நிலைப்பாடு பற்றி இன்னும் -

சங்கத்தின் மூன்றாவது தலைவர் பாலாசாகேப் தேவரஸ் கருத்து -
http://www.hvk.org/specialarts/sehc/sehc.html

தாத்தாவின் கிணற்றில் வரும் உப்புத்தண்ணீர் பற்றி நான் குறிப்பிட்ட சுலோகம் இங்கே படித்தது தான் :))

மு. மயூரன் said...

மநு நூலில் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையற்றவற்றை தள்ளிவிடலாம் என்ற உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

Anonymous said...

சிவசுப்ரமணியன் தந்திரமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப்பற்றிய முழுத்தகவலும் தராமல் ஆங்காங்கே இருந்து எதிர்மறையான கருத்துக்களை மட்டும் தந்து மொத்த நூலுக்கும் ஒரு கீழ்த்தர ப்ராண்ட் கொடுத்துள்ளார். இவர் சார்ந்துள்ள குழுக்களின் தொழிலே வெறும் முத்திரை குத்துவதுதான். இந்தத் தொழிலும் பயமுறுத்தலாலும் அடாவடியாலும் பெற்றது.

ஒரு சட்டப் புத்தகத்தின் மதிப்புத்தான், மனு ஸ்ம்ருதிக்கு. மதிப்பிற்குரிய மலர்மன்னன் அவர்கள் தெளிவாகக் கூறியிருப்பதுபோல அந்தந்த காலத்திற்கு ஏற்ப இது பலரால் பல சமயங்களில் மாற்றப்பட்டுவந்து இருக்கின்றது. இருந்தபோதிலும், மனு ஸ்ம்ருதி என்றும் முற்றிலுமாக பின்பற்றப்பட்ட ஒரு நீதி நூல் இல்லை. காரணம் இது நீதி நூல்களில் பின்பற்றமுடியாத உயர்நிலையுடையது என்கின்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதுதான்.

அதுவுமன்றி, ஒவ்வொரு யுகத்திற்கும் பின்பற்றத்தகுந்ததாக ஒரு குறிப்பிட்ட ஸ்ம்ருதி அறியப்படுகின்றது. இப்போது நடப்பது கலி யுகம் - இந்த யுகத்தில் பின்பற்றப்படவேண்டிய ஸ்ம்ருதியாக அறியப்பெற்றிருப்பது பராசர ஸ்ம்ருதி. ஹிந்து சட்டமாக இந்திய அரசியல் சட்டம் பின்பற்றுவதும், பின்பற்ற பண்டிதர்களால் பரிந்துரைக்கப்பெற்றதுமாய் இருப்பது இதுதான். கலிகால ஆரம்பத்திலிருந்து பின்பற்றப்படுவது இந்த ஸ்ம்ருதியே. (கலி யுகம் எப்போது ஆரம்பித்தது என்பதற்கான கணக்கை கூகிளில் தட்டிப் பெற்றுக்கொள்ளலாம்.) ஏறத்தாழ பலகோடி ஆண்டுகள் கணக்கில் வரும். (இல்லை, பல லட்சம் என்று நீங்கள் புத்திசாலித்தனமாய் தவறு கண்டுபிடித்தாலும் வியப்பதற்கில்லை.) ஆக மொத்தம் மனு ஸ்ம்ருதி பின்பற்றப்பட்ட ஒரு நூல் இல்லை. ஆனால், அவ்வபோது கன்ஸல்ட் செய்யப்பட்ட ஒரு நூல்.

அப்படியானல், அது எப்போது பின்பற்றப்பட்டதாக அறியப்படுகின்றது? ஸத்ய யுகத்திற்கானதாகவே அது அறியப்பெறுகின்றது.

த்ரேதா யுகத்திற்கு யாக்ஞ்யவல்கிய ஸ்ம்ருதி; த்வாபர யுகத்திற்கு ஸங்க மற்றும் லிகித ஸ்ம்ருதி.

தற்போது நடக்கும் கலிகாலத்திற்கு ஏற்றதான ஸ்ம்ருதியாக அறியப்படும் பராசர ஸ்ம்ருதியும்கூட தேவைப்பட்டால் புறக்கணிக்கத்தகுந்ததே. முக்கியமாக ஜாதி அடிப்படையில் மக்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்த பிறப்பினடிப்படியில் உயர்வர்ணத்தாராகத் தம்மை கருதிக்கொள்ளும் ஓஸி, ஓபிஸி, பிஸிக்களின் அராஜகத்திற்கு இதுவழிகோலுமாயின் இந்த பராசர ஸ்ம்ருதி மட்டுமல்ல எந்த ஸ்ம்ருதியையுமே மாற்றிக்கொண்டுவிடலாம்.

மாற்றப்படவே கூடாது என்று கூறுவதற்கு இது என்ன குரானா, ஹதீஸா, பைபிளா, மாவோவின் சிவப்புப்புத்தகமா, இல்லை ஈவேரா திகவிற்கு செய்துவிட்டுப்போயிருக்கிற விதிமுறைகளா?

அந்தவகையில் போதிசத்வர் அம்பேத்கார் இதை எரிக்கவேண்டும் என்று கூறியிருந்தாலும் அதை ஹிந்துத்துவம் உளமாற வரவேற்கிறது. தேவைப்பட்டால் நடைமுறைப்படுத்தவும் தயங்காது.

மாற்றப்படவேண்டும் என்பதில் ஹிந்துத்துவாவிற்கு எந்த சந்தேகமும் இல்லை. ஸ்ருதிக்கு எதிரானவை அழியவேண்டும் என்பதில் ஹிந்துத்துவாவிற்கு வேறு கருத்தில்லை. ஸ்ருதி என்பதற்கு மற்றொருபெயர் மனித வளம்.

பேய்கள் அரசாண்டபோது பிணம்தின்ற சாத்திரங்கள் ஹிந்துத்துவத்தின் கைகளில் குளிர்காயும் நெருப்பிற்கு விறகாகிக்கொண்டுதான் இருக்கிறது. பேய்களுக்குத்தான் இதைவிட்டுவிட மனமில்லை. பாவத்தைத் தொடர்ந்து செய்ய பழியை பேய்களும் பிசாசுகளும் அவற்றின் எதிரிகளின்மேல் போட்டுவருகின்றன.

இந்த இரண்டு சக்திகளையும் ஹிந்துத்துவம் அழித்துக்கொண்டேதானிருக்கிறது. அது மனு ஸ்ம்ருதி என்கின்ற பார்ப்பன ராவணனாக இருந்தாலும் ராமனாய் வதம் செய்யும்.

செத்த பாம்பை பொய்மை நூல்களாலும், கட்டுரைகளாலும் கட்டி பொம்மலாட்டம் நடத்துவதும் வேடிக்கை என்கின்ற அளவில் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

பின்பற்றப்படத்தகுதியில்லாத விஷயங்களை விலக்கிவைத்தபின்னும் பிற்போக்கு இடதுசாரிகளின் பொம்மலாட்டப் பிழைப்பும் நடந்துகொண்டுதானிருக்கிறது. பிழைத்துப்போங்கள் !

Anonymous said...

This is what the great nietzsche said about Manudharma.He calls it a far superior book compared to bible and says that it is an insult to compare such a greatbook with bible.

http://www.geocities.com/thenietzschechannel/anti.htm

Ultimately, it is a matter of the end to which one lies. That "holy" ends are lacking in Christianity is my objection to its means. Only bad ends: poisoning, slander, negation of life, contempt for the body, the degradation and self-violation of man through the concept of sin—consequently its means too are bad.— It is with an opposite feeling that I read the law of Manu, an incomparably spiritual and superior work: even to mention it in the same breath with the Bible would be a sin against the spirit. One guesses immediately: there is a real philosophy behind it, in it, not merely an ill-smelling Judaine of rabbinism and superstition—it offers even the most spoiled psychologist something to chew on.

Not to forget the main point, the basic difference from every kind of Bible: here the noble classes, the philosophers and the warriors, stand above the mass; noble values everywhere, a feeling of perfection, an affirmation of life, a triumphant delight in oneself and in life—the sun shines on the whole book.— All the things on which Christianity vents its unfathomable meanness—procreation, for example, woman, marriage—are here treated seriously, with respect, with love and trust.

Really, how can one put a book in the hands of children and women which contains that vile dictum: "to avoid fornication, let every man have his own wife, and let every woman have her own husband: it is better to marry than to burn"? [I Corinthians vii, 2, 9.] And how can one be a Christian as long as the notion of the immaculata conceptio christianizes, that is, dirties, the origin of man? ... I know no other book in which so many tender and gracious things are said to woman as in the law of Manu; those old graybeards and saints have a way of being courteous to women which has perhaps never been surpassed. "The mouth of a woman"—it is written in one place—"the bosom of a girl, the prayer of a child, the smoke of the sacrifice, are always pure."

Another passage: "There is nothing purer than the light of the sun, the shadow of a cow, the air, water, fire, and the breath of a girl." A final passage—perhaps also a holy lie—: "All apertures of the body above the navel are pure, all below are impure. Only in the girl is the whole body pure."

[For these three quotes from the "Laws of Manu," Nietzsche used the "translation" by Louis Jacolliot in Les Législateurs Religieux, p. 225ff. Jacolliot's work has been discredited. The text from the "Laws of Manu" reads:


The mouth of a woman is always pure, likewise a bird when he causes a fruit to fall; a calf is pure on the flowing of the milk, and a dog when he catches a deer.


Flies, drops of water, a shadow, a cow, a horse, the rays of the sun, dust, earth, the wind, and fire one must know to be pure to the touch.


All those cavities (of the body) which lie above the navel are pure, (but) those which are below the navel are impure, as well as excretions that fall from the body.

See: Annemarie Etter, "Nietzsche und das Gesetzbuch des Manu," Nietzsche-Studien 16 (1987): 340-52 (PDF in German).]

ஜடாயு said...

மயூரன், உங்கள் சரியான கருத்துக்கு நன்றி.

பச்சைத் தமிழன், ஸ்மிருதிகள் பற்றிய பல விஷயங்களை எடுத்துரைத்ததற்கு நன்றி.

// தற்போது நடக்கும் கலிகாலத்திற்கு ஏற்றதான ஸ்ம்ருதியாக அறியப்படும் பராசர ஸ்ம்ருதியும்கூட தேவைப்பட்டால் புறக்கணிக்கத்தகுந்ததே. //

சரியான, முற்போக்கான சிந்தனை.

// பின்பற்றப்படத்தகுதியில்லாத விஷயங்களை விலக்கிவைத்தபின்னும் பிற்போக்கு இடதுசாரிகளின் பொம்மலாட்டப் பிழைப்பும் நடந்துகொண்டுதானிருக்கிறது. //

ஆம். வேண்டுமென்றே இந்துத்துவம் ஒரு பிற்போக்கு தத்துவம் என்று நிறுவ அவர்கள் படாதபாடு பட்டுத் தலைகீழாக நிற்கிறார்கள் என்பதும் புரிகிறது!

Ramaswamy, Its a good feeling to see folks reading Tamil blogs quoting nietzsche! Its a very fine quote. But I view it more as his opinion on the beauty cum spirituality of Hindu/Pagan culture rather than Manusmriti as a book at face value. He would have probably said the same thing abt. Thirukural or plays of Kalidasa had he happened to read them, as all these ancient books have similar sacred thoughts!

Plus, it also shows that inspite of some aberrations related to Varna theory, Manusmriti also has noble expressions of aspects of Hindu Dharma.

Anonymous said...

ஜடாயு,

உங்களது பதிவிலிட்ட அதே பின்னூட்டத்தை திரு என்பவரது மனு ஸ்ம்ருதி சம்பந்தமான கட்டுரையிலும் இட்டேன்.

காலத்திற்கு ஒவ்வாத ஸ்ம்ருதி தேவையில்லை என்ற ஹிந்துத்துவ வாதத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் நீங்கள் அப்பின்னூட்டத்தை வெளியிட்டீர்கள். உங்களது சொல்லும், செயலும் ஒன்றாயுள்ளது.

திரு வெளியிடுவதாயில்லை. பகலில் "சீ சீ தள்ளிப்போ, மேலே படாதே, நான் சுத்தமாக்கும், உன்னைவிட உயர்ந்தவனாக்கும்" என்று சொல்லிவிட்டு இரவில் "காசு கூடத்தரேன், கொஞ்சம் கிட்ட வாயேன்" என்று சொல்லுவதுபோலத்தான் இந்தச் செயலும் இருக்கிறது.

ஒவ்வாத கருத்துக்கள் வேண்டாம் என்றால் அதை சொல்லும் பின்னூட்டத்தை அனுமதிக்கலாம். ஆனால், வேறு யார்மேலோ பழியை போட்டுவிட்டு, அந்தப் புத்தகத்திலுள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் இச்செயல் நேர்மையில்லா உயர்சாதிவெறி கோழைத்தனத்தின் முதல்தர உதாரணம்.

எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற நடிகரது படத்தில் ஒரு பாட்டு உண்டு:

"திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்"

இரட்டைவேடம் போடும் இந்த போலி சீர்திருத்தவாதிகள் திருந்தாமலிருப்பது மனித குலத்தின் அவமானங்களில் ஒன்று.

மனிதன் said...

திரு ஜடாயு,
சிந்தனையை தூண்டிய கட்டுரை.மலர்மன்னனின் கட்டுரையை பதிந்ததிற்கும் நன்றி.

சிவசு-வின்( திரு ) கட்டுரையையும் படித்தேன்.
பச்சை தமிழனின் பராசர ஸ்மிருதி
தகவலையும் படித்தேன்.

இன்றைய காலகட்டத்தில் மனு ஸ்மிருதியை பற்றிய அறிதல் பெரும்பான்மையான மக்களிடம் இல்லை என்பதுதான்
உண்மை.

நான் மனு ஸ்மிருதி பற்றி அறிந்தவையெல்லாம், மனுதான் ஜாதிக்கொரு நீதியை கற்பித்தார்
என்பதுதான்.இது கூட திக வினரின்
மேடைப்பேச்சு மூலமாகவும், அவர்களின் உண்மை ஏட்டின் மூலமாகவும் அறிந்ததுதான். அதற்கு முன் மனு என்ற பெயரை நான் மருந்துக்கு கூட அறிந்திலேன்.

மற்றபடி மனு ஸ்மிருதியில் அரசியல்நீதி
மற்றும் வேறு பல நீதிகளும் சொல்லப்பட்டுள்ளது என்பது எனக்கு புதுமையான தகவல்.

மனு ஸ்ம்ருதியை மிக உயர்வானது என்று யாரும் தூக்கி பிடிப்பதாக தெரியவில்லை.சூழ்நிலை இப்படியாக இருக்கும்பொழுது அதைப்பற்றி தாழ்த்தி வசைபாடவும் ஏதும் அவசியம் வந்துவிட்டதாகவும் நான் கருதவில்லை.
திரு-வின் பதிவு வெறுப்புணர்சியைத் தூண்ட இடப்பட்ட பதிவாகவே கருதுகிறேன்.

மனுநீதியின் திரிக்கப்படாத மொழிபெயர்ப்பு ஏதும் உண்டா?.யாராவது இதை நேரடியாக சஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்களா?. இது புத்தக வடிவில் தமிழில் கிடைக்கிறதா போன்ற விவரங்களை நேரம் கிடைத்தால் வெளியிடுங்கள்.

அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று படித்து தெரிந்துகொள்கிறேன்.
அதில் கொண்டாட ஒன்றும் இல்லை என்றால் பாக்கேட் நாவல்களை படித்துவிட்டு ஒரு மூலையில் வீசிவிட்டு மற்ந்துவிடுவது போல மறக்கவேண்டியதுதான் மாறாக உபயோகமாக எதுவும் தேறினால்
( தாத்தா வெட்டிய உப்புநீர் கிணறு பாடல் போல உருப்படியானது)
அன்னப்பட்ஷியாக இருந்து, பிரித்து எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.
அன்புடன்,
ராமச்சந்திரன்.

Osai Chella said...

kuusaaama poi solreengkale niingka muttalaa illai veriyanaa? vaikiren appu pathil pathivu muulam. topic ANIMAL SEX in VEDAS!

Thamizhan said...

டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாண சபையிலே ஒரு தீர்மானங் கொண்டு வந்தார்.பெண்கள் கோவில்களிலே பொட்டுக் கட்டி விடப்படுவதை ஒழிக்கும் தீர்மானம்.அப்போது பெரும்பேச்சாளரான சத்தியமூர்த்தி அவர்கள் "நான் இந்த நாட்டின் சட்டத்தை மீறினாலும் மீறுவேனே தவிர சாஷ்திர ச்ம்பிரதாயங்களை மீறமாட்டேன்"என்று பேசி எதிர்த்தார்.அப்போது அம்மையார் சொன்னார்கள்"மிகவும் நல்லது.இதுவரை எங்கள் பெண்கள்தான் பொட்டுக்கட்டி விடப்பட்டனர்.அதை வேண்டாம் என்கிறோம்.இனிமேல் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களின் பெண்கள் செல்லட்டும்.எங்களுக்கு ஆட்சேபணை இல்லை"என்றார்.
அத் 1 சுலோ31
பிரம்மா,உலக வளர்ச்சியின் பொருட்டுத் தன்னுடைய முகம்,தோள்,தொடை,கால் ஆகியவ்ற்றினின்றும் பிராம்மணன்,ச்த்திரியன்,வைசியன்,சூத்திரன் ஆகியவர்களை முறையே உண்டு பண்ணினார்.
அத்1சுலொ100
பிராமணன் முதற் பிறவி.அத்தகதியினால் பிராம்மணன் பிரம்மாவின் படைப்புலகில் காணப்படும் அனைத்துச் செல்வங்களையும் தனதாக்கிக் கொள்ளத் தக்க உரிமை படைத்தவனாகிறான்
அட்1சுலொ101
பிராம்மணன் மற்ற மூவரிடமிருந்தும் பெறுகிற உணவு,உடை பொருள் மற்றெதுவானாலும்,அவன் தன்னுடையதைத்தான் அவர்களிடமிருந்து பெறுகிறான்.ஏனெனில் அம்மூவரும் பிராம்மணனின் உடைமையை வைத்துத்தான் வாழ்ந்து வருபவர்களாவார்கள்.
அத்2சுலோ31
பிராம்மணனுக்கு மங்களம்,ச்த்தியனுக்கு பலம்,வைசியனுக்கு செல்வம்,சூத்திரனுக்கு அவன் அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களையே சூட்ட வேண்டும்.
(அதனால்தான் சர்மன்,வர்மன்,பூபதி என்றும் தாசன்,கேசவன்,அமாவாசை பெயர்களும்)
அத்2சுலோ91
மற்றவர்கட்கு உழைப்பதற்கென்றே சூத்திரன் படைக்கப்பட்டுள்ளான்.மற்ற மூன்று வருணத்தார்க்கும் பொறாமையின்றிப் பணிவிடை செய்வதைச் சூத்திரனுக்கு முக்கிய அறமாகப் பிரம்மா ஏற்படுத்தியுள்ளார்.
அத்1சுலொ99
பிராம்மணன் சாத்திர நூலைப் படிக்கலாம்;அவன் மற்ற வருணத்தார்க்குச் சொல்லித் தரக்கூடாது.
அத்8சுலோ270
பிராம்மணர்களின் பெயர் கூறி இகழ்ச்சியாய்த் திட்டுகிற சூத்திரன் வாயில் பத்தங்குல நீலமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க.
அத்8சுலோ279
பிராம்மணனைச் சூத்திரன் கையாலேனும் கருவியாலேனும் தாக்கினால் எந்தெந்த இடத்தில் அடித்தானோ அடித்தவனின் அந்தந்த உறுப்பை அறுத்திடுக.
அத்9சுலோ265
பிராம்மணன் மீது காறியுமிழ்பவனின் உதடுகளை அறுத்திடுக;மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு;மலத்தை வீசினால் ஆசன்ப் பகுதியை அறுத்துவிடு
அத்8சுலோ380
பிராம்மணன் எப்பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல்,காயமின்றி,அவன் பொறுளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டியது.
அத்8சுலோ381
பிரம்மஹத்தியை விட(பார்ப்பானைக் கொல்வது)அதிகமான பாவம் உலகத்திற் கிடையாது.ஆதலால் பிராமம்மணனைக் கொல்ல வேண்டும் என்று அரசன் மந்த்தினாலும் நினைக்கக் கூடாது.
ஆனால் ச்சுத்திரன் நிலை என்ன?
அத்9 சுலோ248
பிராம்மணனுடைய பொருளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்துத் துன்புறுத்துகின்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக.

இதெல்லாம் கதைகள் என்று பல மன்னர்களும் மடையர்களும் சொல்வார்கள்.அதனால் தான் சோழ மன்னர்கள் பல மங்கல்ங்கள்(நல்ல நஞ்சை நில கிராமங்கள்).ச்துர்வேதி மங்கல்ங்கள்,பார்ப்பனர்களுக்காகவே கல்வி மானியங்கள் நன்கொடை செய்தனர்.
இதெல்லாம் வெறும் பேச்சு என்று சொல்லும் வீணர்களுக்காகத்தான் வடமொழி அறிந்த சுந்தரனார் சொன்னார்
"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவர நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொரு நீதி"
பாரதியார் சொல்கிறார்
"சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,சாத்திரம் சொல்லிடு மாயின்
அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்".
இது இன்று இல்லை என்று சொல்லும் அறிவுக் கொளுந்துகளே உங்களுக்காகவேத்தான் உச்ச நீதி மன்றம் காஞ்சி சுப்பிரமணிக்குத் தனிநீதித் தர அனைத்து விதத்திலும் கடுமையாக உழைக்கிறது.
பின்னூட்டம் மிக நீண்டு விட்டதற்கு வருந்துகிறேன்.பெண்ணடிமை பற்றி நீங்களே படியுங்கள்.
பார்ப்பனர்களின் ஏமாற்றிற்கும் சில தமிழர்கள் என்ற படித்தாகச் சொல்லிக் கொள்ளும் அறிவில்லா ஜீவிகளுக்கும்
சேர்ந்துதான் மனுநீதியை பாபா சாகேப் அம்பேத்கர் கொளுத்தினார்,திருவள்ளுவர் முதல் பெரியார் வரை திட்டித் தீர்த்தார்கள்.
ஆம் இன்று நீங்கள் பொட்டுக் கட்டி வாழ நினைத்தாலும் உங்களுக்கும்,உங்கள் பெண்களுக்கும் சேர்த்துத்தான் பெண்ணுரிமைக்காகப் போராடிப் "பெரியாரா"க்கப் பட்டார்.
மூடி மறைக்காதீர்கள்,உடைகளை மாற்றியதப் போல் உள்ளங்களை மாற்றிக் கொண்டு மனிதர்களாகுங்கள்.
உங்களை வரவேற்போம்,மனிதர்களாக்.

ஜடாயு said...

Thamizhan அவர்களே, முதலில் இந்தப் பதிவை நீங்கள் படித்தீர்களா என்றே எனக்கு சந்தேகம் வருகிறது! மனுஸ்மிருதியில் உள்ளதெல்லாம் சரி என்று இங்கு யாரும் வாதம் செய்யவே இல்லை. நீரே கற்பனை செய்து கொண்டு ஏதேதோ சொல்ல ஆரம்பித்து விட்டீர்.

இந்தப் புத்தகத்தின் பல பிரதிகளில் காணப்படும் இவ்விதமான தண்டனைகளையும், சட்டங்களையும் இந்தியாவில் எந்த மன்னனும், மக்கள் குழுவும் முழுமையாக நடைமுறைப் படுத்தியதற்கான சான்றுகள் இல்லை என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களே தன் நூலில் கூறியிருக்கிறார். சோழ மன்னர்கள் வேதியருக்கு மட்டும் அல்ல, படைவீரர், கலைஞர்கள், மருத்துவர் உள்ளிட்ட எல்லா சாதியாருக்கும் நிலங்கள், கிராமங்கள் வழங்கியதற்கும் சான்றுகள் உள்ளன.

இருப்பினும், சாதீய வெறிக்கான ஒரு குறியீடாக இந்நூலைப் பார்ப்பதாகக் கூறித் தான் அம்பேத்கர் இந்த நூலை எரித்தார். ஏனென்றால் இத்தகைய ஸ்மிருதிகள் மிக மரியாதையுடன் யாராலும் பார்க்கப் படவில்லை என்பது அவருக்குத் தெரியும். வேடரான முனிவர் வால்மீகியின் ராமாயணத்திற்கும், மீனவரான முனிவர் வியாசரின் மகாபாரதத்திற்கும் இருக்கும் உயரிய இடத்தில் நூறில் ஒரு பங்கு கூட மனுஸ்மிருதிக்கு இல்லை என்பது அவர் அறிந்தது. இந்து மரபில் வந்திருக்கும் ஆயிரக் கணக்கான புத்தகங்களில் சாதி வெறியைப் பற்றி ஓவராகப் பேசிய புத்தகம் என்று இதைக் கண்டு அவர் எரித்தார். அவரது செயல் ஒரு போர்முறை என்ற அளவில் சரியானது என்றே நான் கருதுகிறேன்.

இருப்பினும் ஒரு பழைய நூல் (புனித நூல் அல்ல) என்ற அளவில் மனுஸ்மிருதியை மதிப்பிட்டு அதிலும் சில நல்ல அறக் கருத்துக்களை விளக்கும் பாடல்கள் உள்ளன என்பதே நான் கூறவந்தது.

இந்து சாத்திரங்கள் எல்லாமே இப்படித் தான் கூறுகின்றன என்று நீங்கள் வாதிட்டால் அது உங்கள் அறியாமையையே காட்டுவதாக இருக்கும்.

ஜடாயு said...

இங்கு பதிக்கப் பட்ட கட்டுரையின் தொடர்ச்சியாக "ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா?" என்ற இன்னொரு கட்டுரையையும் திரு. மலர்மன்னன் எழுதியிருக்கிறார்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20703011&format=html

இந்தக் கட்டுரையில் பாடபேதங்கள் எப்படி ஸ்மிருதி நூலின் பல பதிப்புகளில் பல திரிபுகளை அடைந்திருக்கலாம் என்பது பற்றியும், நடைமுறையில் பஞ்சாயத்துக்களும், உள்ளூர் அமைப்புகளுமே சட்டம், நீதி முறைகளை உருவாக்கின, மனுஸ்மிருதி போன்ற ஒற்றை நூல் அல்ல என்பது பற்றியும் மிக அழகாக விளக்கியிருக்கின்றார்.

இந்தப் பதிவைப் படிப்பர்கள் அந்தக் கட்டுரையையும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

SIVAKUMAR said...

ஆரியர்கள் அட்லாண்டிஸ் கண்டத்தில் வந்திறங்கிய வேற்றுகிரகவாசிகள்! திராவிடர்களே லெமூரிய கண்டத்தில் தோன்றிய இம்மண்ணின் மைந்தர்கள்(இவர்களே ஆப்பிரிக்கா பழங்குடியினர், தென்னிந்தியர்கள், தென்னமெரிக்க பழங்குடியினர், அமெரிக்க செவ்விந்தியர்கள், ஆஸ்திரேலிய பழங்குடியினர்கள்)இப்படிபட்ட மக்களை மூளைசலவை செய்யவே ஆரியக்கதைகள்! ஆனால் ராமனும், கிருஷ்ணனும் நிச்சயம் வேற்றுகிரகவாசிகளாகத்தான் இருக்கமுடியும்: கவனிக்க: அவர்களின் பிறப்பு, நிறங்கள், பயன்படுத்திய பறக்கும் வாகனங்கள்! ஆரிய புராணங்கள் அவர்களை ஹீரோ ஆக்கிவிட்டனர்!