Thursday, April 16, 2009

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் - 2


முந்தைய பகுதி

சமயம்:

அக்காலகட்டத்தில் வேத நெறியையும், சைவ சமயத்தையும் பின்பற்றும் மக்களுக்குப் பலவிதமான இடையூறுகள் ஏற்பட்டன என்பதைக் கூறும் பல இலக்கியச் செய்திகள் உள்ளன.

களப்பிரர் காலத் தொடக்கத்தில் எழுந்த திருக்குறள் மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்என்று கூறும். இதில் “மறப்பினும்என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகையில், வேதம் ஓதும் அந்தணர் அவர் கற்ற வித்தையை ஒருபோதும் மறப்பதில்லை. அவர் வாயை விட்டு வேதம் அகல்வதே இல்லை என்ற கருத்து தொனிக்கிறது. ஆனால், இனியவை நாற்பது என்ற பிற்கால நூல் அதற்கே உரிய அங்கதத் தொனியில் அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே”, அதாவது வேதம் ஓதத் தெரிந்த அந்தணர் கிடைப்பது எவ்வளவு இனிது!என்கிறது. வேதம் ஓதுதல் அவ்வளவு அரியதாகி விட்ட்து என்ற வரலாற்றுச் செய்தியையே இது கூறுகிறது. திருஞானசம்பந்தர் புராணத்திலும், அவரது தந்தையார் யாகம் செய்வதற்குப் பொருள் இல்லாமல் தவிக்க, இறைவனை வேண்டி சம்பந்தர் பொற்கிழி பெறுவதாக வருகிறது. வேதநெறி புழக்கத்திலிருந்த சோழநாட்டிலேயே யாகத்திற்குப் பொருள் கொடுப்பவர்கள் மிகுதியும் இல்லாமல் போய்விட்டனர் என்பதையே அந்த அற்புதச் செயல் உணர்த்துகிறது.

தண்டி நாயனார் புராணத்தில், அவர் கோயில் குளத்தைத் தூரெடுக்கும் பணியில் ஈடுபடுகையில், அதில் உள்ள உயிரினங்கள் அழியும் என்று விதண்டாவாதம் செய்து சமணர் ஆட்சேபிக்கின்றனர். நமிநந்தி நாயனார் புராணத்தில், அவர் விளக்கேற்ற எண்ணெய் வேண்டும் என்று சமணர் வீடுகளில் கேட்க, அவரது சமய நம்பிக்கையை சமணர்கள் கேலி செய்கின்றனர்.

சம்பந்தருக்கு நூறாண்டுகள் முன்பு வாழ்ந்தவர் காரைக்கால் அம்மையார். அம்மையார் தெய்வப் பெண் என்று அவர் கணவர் உணர்ந்து கொண்ட பின், அவர் மதுரைக்கு வருகிறார். ஆனால் அங்கே இருக்கமுடியாமல், பேய் உருக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்றார் என்பது புராணம். சிவபக்தியுள்ள ஒரு சைவப்பெண், பாண்டி நாட்டில் அந்தக் காலகட்டத்தில் வாழவே முடியாத நிலை இருந்தது என்ற வரலாற்றுச் செய்தியைத் தான் அது கூறுகிறது.

சைவ, வைணவ சமயங்களின் முதல் குருமார்களில் பாண்டிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. நாயன்மார்களில் 8 பேர் தொண்டை நாட்டினர். 30-40 பேர் சோழ நாட்டினர். நடுநாடு, மலைநாடு, சேரநாட்டிலும் நாயன்மார் தோன்றியிருக்கின்றனர். ஆனால் தொன்மையான பண்பாட்டுப் பாரம்பரியம் உடைய, சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த தென்பாண்டி நாட்டில் தோன்றியவர் நால்வரே. இதில் மூவர் - மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறனாக மாறிய கூன்பாண்டியன் ஆகியோர் சம்பந்தருடைய தொடர்பாலேயே நாயன்மார்களானவர்கள். மூர்த்தி நாயனார் மிகக் குறுகிய காலம் அரசாண்ட ஒரு சைவக் குறுநிலமன்னர். வைணவத்திலும் முதலாழ்வார் மூவர் தொண்டை நாட்டினர், பிறர் சோழநாட்டினர்.

சம்பந்தரது காலத்திற்குப் பின்பு தான் வேத நெறியும், சைவ வைணவ சமயங்களும் பாண்டி நாட்டில் புத்தெழுச்சி பெறுகின்றன. மாணிக்கவாசகர், நம்மாழ்வார், பெரியாழ்வார் ஆகிய அருளாளர்கள் அங்கு தோன்றுகின்றனர்.

மதக் காழ்ப்பா?

சம்பந்தரது தேவாரப் பாடல்களில் மதக் காழ்ப்பு அதிகம் இருக்கிறது என்று தற்போதைய இலக்கியவாதிகள் கூறுகிறார்கள். சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் “திருக்கடைக்காப்புஎன்று சொல்லப்படும் கடைசிப் பாடலுக்கு முந்தைய பாடலில் புத்த,சமண மதங்களாகிய பொய்நெறிகள் அகலவேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் பகுதி வருகிறது. “தோடுடைய செவியன்என்ற தனது முதல் திருப்பதிகத்திலேயே “புத்தரோடு சமணும் பொறியில் புறம்கூற நெறிநில்லாஎன்று ஆரம்பித்து விடுகிறார். பாண்டி நாட்டுக்குக் கிளம்பும்போது பாடிய கோளறு பதிகத்தில் “புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்என்கிறார். இப்படி ஒவ்வொரு பதிகத்திலும் அவர் கூறவேண்டியதற்கான சமூக, வரலாற்றுப் பின்னணி என்ன என்பதை நாம் மேற்சொன்ன செய்திகளால் ஒருவாறு ஊகிக்கலாம். சமணத் துறவிகள் அரசு ஆதரவு பெற்று, பொதுமக்களில் ஏராளமானோர் தங்கள் சைவ நெறியைத் துறந்து வந்தபோது, அதனை மீண்டும் மீண்டும் நினைவுறுத்தவே அவ்வாறு கூறுகிறார் என்பது தெளிவு.

சீக்கிய புனித நூலான “குரு கிரந்த சாகிப்என்ற நூலில், குரு அங்கதர், குரு தேக் பகதூர், குரு அர்ஜுன், குரு கோவிந்த் சிங் ஆகியோர் இயற்றிய பாடல்களில் அப்போதைய முகலாய ஆட்சியாளர்களின் கொடூரங்கள் பற்றிய செய்திகளும், அந்த ஆட்சியாளர்களின் மதத்தைக் கண்டனம் செய்யும் பகுதிகளும் உள்ளன. இவை முக்கியமான வரலாற்றுச் செய்திகளைச் சொல்கின்றனவே அன்றி குருட்டுத்தனமான மதக் காழ்ப்புடன் எழுதப் பட்டவை அல்ல. சம்பந்தரது பதிகங்களையும் அவ்வாறே நாம் மதிப்பிடவேண்டும்.

குறிப்பாக, சமண சமயத்தைப் பொறுத்த வரையில், துறவிகளே முழுமையாக அந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக அறியப் பட்டார்கள். அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்த குடும்பத்தார்கள், மன்னர்கள் உட்பட அந்த சமயத்தின் புரவலர்களே அன்றி, சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. ஒருவிதத்தில் பார்த்தால், இந்த்த் துறவிகள் கருத்து ரீதியாக தங்களை ஆதரித்துவந்த பொதுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர் என்றே சொல்லவேண்டும். மேலும் சம்பந்தரது கண்டன்ங்கள் அனைத்தும், சமண தெய்வங்களை அல்ல, சமணத் துறவிகளின் நடவடிக்கைகளைக் குறிப்பதாகவே உள்ளதையும் நோக்கவேண்டும்.

வேதாந்தத்தை மூலமாகக் கொண்ட சைவ சமயத்தில், தத்துவ அளவில் முற்றாகிய தீமை என்ற கருத்தும் அதனின்று பெருகும் துவேஷ உணர்வும் கிடையவே கிடையாது. அனைத்தும் பரம்பொருளின் விளையாட்டே, அந்த பிரபஞ்ச லீலையின் ஒரு அங்கமே எனும்போது, நன்மையும், தீமையும், இந்தச் சமயங்களும், அவற்றைப் பின்பற்றுபவர்களும் கூட அதன் ஒரு பகுதியே தான் அல்லவா?

அதனால் தான், வேதங்களை ஆக்கியவனும் அவனே, உலகை மயக்குவதற்காக சமண, சாக்கிய மதங்களையும் அவனே ஆக்கினான் என்ற கருத்தையும் மிகத் தெளிவாகவே சம்பந்தர் கூறுகிறார் -

இணையில் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்

அணையில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே”.

வாக்கினால் மறை ஓதினாய், அமண்

தேரர் சொல்லிய சொற்களான பொய்

ஆக்கி நின்றவனே, அடைந்தார்க்கருளாயே”.

எனவே சம்பந்தரின் கண்டனங்கள் அனைத்தும், உள்ளார்ந்த வெறுப்புணர்வால் அல்ல, சமணர் நிகழ்த்திய சமூகச் சீரழிவினைக் கண்டு மனம் நொந்து கூறியது என்றே கொள்ள இடமிருக்கிறது. இது காந்தியடிகளும், பாரதியாரும் கடும் சொற்களால் பிரிட்டிஷ் அரசின் அராஜகத்தை விமர்சித்ததற்கு இணையான செயலே ஆகும்.

கழுவேற்றம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய வரலாற்றை எழுத ஆரம்பித்த சில பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள், மதப்பூசலும், ரத்தம் பெருக்கெடுத்து ஓடி, சிலுவைப் போர்களால் நிரம்பிய மத்திய கால ஐரோப்பா பற்றிய அதே கருத்துச் சட்டகத்துடன், இந்தியாவிலும் இது போன்ற மதப்போர்கள் நடந்திருக்கும் என்று கற்பனை செய்தார்கள். இது அவர்களது பிரித்தாளும் கொள்கைக்கு வலு சேர்ப்பதாகவும் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, சுதந்திரத்திற்குப் பின் இந்திய வரலாற்றை எழுதிய இடதுசாரி வரலாற்றாசிரியர்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சில தகவல்களைச் சேர்த்து ஆதாரமற்ற மதப்போர்களை உற்பத்தி செய்ய முற்படுகிறார்கள்.

இன்றைக்கு தமிழில் நவீன இலக்கிய ஏடுகள், சிற்றிதழ்கள், அறிவுஜீவித்தனமான சஞ்சிகைகள் இவற்றில் திரும்பத்திரும்ப திருஞானசம்பந்தர் வரலாற்றில் வரும் சமணர் கழுவேற்றம் பற்றி ஏராளமான ஜோடனைகளுடன் யாராவது ஒருவர் எழுதிக் கொண்டே இருக்கிறார். மதுரைக் கருகில் ஒரு ஊரில் எண்ணாயிரம் சமணர்களின் எலும்புகள் குவிந்துள்ளன, அவர்களை எரித்த சாம்பல் கூட இருக்கிறது என்றெல்லாம் சிறிது கூட அறிவியலுக்கும், பொதுப் புத்திக்கும் ஒவ்வாத வகையில் எழுதுகிறார்கள். எண்ணாயிரம் சமணர்களைக் கொன்று குவித்து, அந்த வன்முறை மூலம் வேத நெறியும், சைவ சமயம் பரவியதாக திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமே அதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இதற்கு இன்னொரு உள்நோக்கமும் இருக்கலாம். ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் இவற்றின் வரலாறு முற்றாக வன்முறையும், போர்களும் நிறைந்தது. ஆரம்பகாலத்தில் அதற்கு முன்பிருந்த புராதன மதங்களையும், இயற்கை வழிபாட்டாளர்களையும் கிறிஸ்தவம் வன்முறை மூலமே அழித்தொழித்தது. அதன் பின் ஐரோப்பிய காலனியாதியாக்கமும், கிறிஸ்தவ மிஷன்களும் இணைந்து ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளில் பழங்குடிகளை ஈவிரக்கமின்றிக் கொன்றார்கள். அரேபியப் பாலைவனத்தில் இஸ்லாமிய மதம் தோன்றியவுடன், ரத்தவெறி கொண்ட போர்கள், கொள்ளைகள், கட்டாய மதமாற்றங்கள் ஆகிய வன்முறைச் செயல்கள் மூலமே பெரும்பாலும் பல பகுதிகளில் பரவியது. இந்த மனிதப் படுகொலைகள் தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ள. வரலாறு இந்த மதங்கள் மீது ஏற்றிவைத்துள்ள சுமை இது. எனவே, “மதச்சார்பற்றவரலாற்றில், இதனை ஈடுசெய்வதற்காக, இந்திய மண்ணிலும் பெரிய மதப்போர்கள் நடந்திருப்பதாக, வேண்டுமென்றே பொய்களையும், தங்கள் காழ்ப்புணர்வுகளையுமே வரலாறு என்ற பெயரில் திரித்துக் கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

பாரத நாட்டில் சமய விவாதங்கள் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தன. வேத, உபநிஷதங்களிலும் சரி, புராண, இதிகாச இலக்கியங்களிலும் சரி, சமண, பௌத்த சமய நூல்களிலும் சரி, ஏராளமான உரையாடல்களையும், வாத விவாதங்களையும் நாம் பார்க்கிறோம். இன்றைக்கு இந்து மதத்தின் முக்கியமான தத்துவ நூலான விளங்கும் பகவத்கீதை இத்தகைய ஒரு உரையாடல் வடிவிலேயே உள்ளது. இந்திய கலாசாரம் இன்று வரை பல கட்சிகள் ஜன்நாயக முறையில் உரையாடும், ஓயாது தர்க்கம் செய்யும் இயல்பை இத்தகைய சமய விவாதங்கள் மூலமே பெற்றது என்பது தெளிவு. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையான பேராசிரியர் அமர்த்யா சென் Argumentative Indians என்ற தமது நூலில் இதனை மிக விரிவாகவே குறிப்பிடுகிறார். எனவே பண்டைய இந்திய வரலாற்றில் மத மோதல்கள், பூசல்கள் பற்றிய எல்லா சித்திரங்களும், கருத்துத் தளத்தில் நிகழ்ந்தவற்றையே குறிக்கின்றன. இந்த வாதங்கள் முற்றி, சிறிய அளவில் நேரடி வன்முறையாக சிற்சில இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால் மதப் போர்களும் பெரும் வன்முறையும் நடந்த்தற்கான ஆதாரங்கள் இல்லவே இல்லை.

தமிழக சமணத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் சம்பந்தர் காலத்தில் அது தனது வலுவிழந்த, சீரழிந்த நிலையில் இருந்தது எனலாம். அதனால் தான் சம்பந்தர் அதனை வாதத்தில் எளிதாகவே வென்று விட முடிந்தது. சமணத் துறவிகள் சமூகத்தில் இருந்து மேலும் மேலும் விலகிச் சென்று தனிமையை (seclusion) நாடினர். காலப் போக்கில், இந்தத் தனிமைச் சூழல் பல மாந்திரீக, தாந்திரீக முறைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வழிவகுத்தது. பிற்காலச் சமணத்தில் தீர்த்தங்கரர் வழிபாட்டை விட அதிகமாக பரிவார தேவதைகள் மற்றும் யட்சிகள் வழிபாடு வலியுறுத்தப் பட்டது. இந்த தேவதைகள் மோட்சத்திற்காக அல்ல, லௌகீக வாழ்க்கைப் பலன்களுக்காகவே வணங்கப் பட்டனர். தமிழகத்தின் பல சமணக் கோயில்களில் பத்மாவதி, லலிதாட்சி ஆகிய யட்சிகளின் அழகு கொஞ்சும் சிலைகளை இன்றும் காணலாம். தமிழகத்தில் சமணம் வாழும் இன்றைய வடிவத்திலும், தீபங்குடி (தஞ்சை மாவட்டம்) போன்ற ஊர்களில் வாழும் சமணக் குடும்பங்கள் பெண்தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

சமணர்களின் செயல்களாகப் பெரியபுராணம் கூறும் செய்திகள் மூலம் இது மேலும் உறுதியாகிறது. சம்பந்தர் பாண்டிநாட்டிற்கு வந்து சைவமடத்தில் தங்கியிருக்கையில், மந்திரத்தால் தீவைக்க முயன்றனர். பின்னர் அது பலிக்காமல் போகவே, உண்மையிலேயே தீமூட்டினர். மன்னனுக்கு வெப்பு நோய் பீடிக்க, பின்னர் மன்னன் நோய்தீர்ப்பவர் வெல்வார் என்ற போட்டிக்கும், பிறகு அனல் வாதம், புனல் வாதம் இவற்றிற்கும் சமணர் அறைகூவுகின்றனர். இதன் மூலம் ஆழ்ந்த சமய, தத்துவ விவாதத் தளத்திலிருந்து சமணம் வெகுவாக நகர்ந்து விட்டது புலனாகிறது. அதனால் தான், சைவம் மிக எளிதாகவே அதனை வென்று விட முடிந்தது.

பெரியபுராணத்தின் படி, வாதத்தில் தோற்றால் தங்களை வேந்தன் கழுவேற்றட்டும் என்று சமணர் தாமாகவே கூறுகின்றனர்.

அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில்
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே என்று சொன்னார்.

அவர்கள் வாதத்தில் தோற்றவுடன், மன்னன் மந்திரியாகிய குலச்சிறையாரைப் பார்த்து, இவர்கள் மடத்திற்குத் தீவைத்த குற்றமும் புரிந்தவராதலின், தண்டிக்கப் படவேண்டியவர்கள், அதனால் இவர்களைக் கழுவில் ஏற்றுக என்று ஆணையிடுகிறான். அரச நீதியில் தலையிடுவது முறையாகாது என்று கருதி சம்பந்தர் திருவருளைச் சிந்தித்து, வாளாவிருந்தார், அதாவது அமைதியாக இருந்தார். குலச்சிறையார் அரசன் இட்ட ஆணையை நிறைவேற்றினார். புராணம் சொல்வது இது தான்.

இதில் “எண்ணாயிரவர்என்பது எண்ணிக்கையை அல்ல, ஒரு குழுவினரைக் குறிக்கிறது என்றே கொள்வதற்கு ஆய்வு நோக்கில் இடமிருக்கிறது. எண்ணாயிரவர், நாலாயிரவர், மூவாயிரவர் என்று வணிகர் கூட்டஙக்ளுக்குப் பெயர்கள் இன்றளவும் உள்ளன. கேரளத்தில் மூவாயிரவர் என்ற குடும்ப்ப் பெயரில் இன்று நான்கைந்து குடும்பங்களே உள்ள சமூகக் குழுக்கள் இருக்கின்றன. இத்தகைய ஒரு குழுவைச் சேர்ந்த சமண குருமார்கள் வாதில் தோற்றுப் போயிருக்கலாம்.

மேலும் “கழுவேற்றம்என்பது ஒரு குறியீட்டுச் செயலாகவே இருக்கலாம். வாதம் நடக்கும் ஞான சபையில் ஒரு கழுமரம் இருக்கும். வாத்த்தில் தோற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் முகமாக, தங்கள் தோளில் இருக்கும் உத்தரீயத்தைக் கழற்றி அந்தக் கழுமரத்தில் வீசுவார்கள். அதாவது அவர்களது ஞானமும், பாண்டித்யமும் அங்கே வீழ்ந்து விட்டதாக இதற்குப் பொருள். அந்தக் காலகட்டத்துச் சூழலில், கற்றறிந்த ஒரு பண்டிதனுக்கு உயிர்போவதை விட அவமானகரமான ஒரு செயலாக இது கருதப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கேரளத்தில் ஒரு இருநூறு ஆண்டுகள் முன்பு கூட வாத சபைகளில் உத்தரீயத்தைக் கழற்றி வீசும் இந்த மரபு இருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது.





இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்திற்குரியவை.

ஒன்று, சம்பந்தர் காலத்திற்குப் பின்னும், தமிழகத்தின் பல பகுதிகளில், சமணக் கோயில்களும், மடங்களும் எந்த இடையூறும் இல்லாமல் இன்றுவரை செயல்பட்டு வருகின்றன.

இரண்டு, கழுவேற்றம் பற்றிய இந்தக் குறிப்பு சமணர்களது எந்த நூல்களிலும் இல்லை.

இது பற்றி, தலைசிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளருமான ஜெயமோகன் கூறுகிறார் -

.... தமிழகமெங்கும் அதன்பின் பலநூறு வருடம் சமணரும் சமணக்கோயில்களும் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் இருந்திருக்கின்றன. மதுரையைச் சுற்றியுள்ள சமண வழிபாட்டுதலங்கள் தொடர்ந்து இயல்பாகவே இயங்கியிருக்கின்றன. உளுந்தூர்பேட்டையில் அப்பாண்டநாதர் கோயில் இன்றும் நல்ல நிலையில் இருக்கத்தான் செய்கிறது. சமணர்களின் எண்ணிக்கை குறையக் குறைய கோயில்கள் கைவிடப்பட்டு பல நூறு வருடங்களில் பராமரிப்பில்லாமல் மெல்ல மெல்லத்தான் அழிந்திருக்கின்றன. திருநெல்வேலி ஸ்டேட் மானுவல் எழுதிய எச்.ஆர்.பேட்ஸ் வள்ளியூரைச் சுற்றி அப்படி கைவிடப்பட்டு கிடந்த பல சமண ஆலயங்களைப் பற்றிச் சொல்கிறார். பல ஆலயங்கள் பின்னர் இந்து ஆலயங்களாக ஆகியிருமிருக்கலாம். பல ஆலயங்களில் இரு மதவழிபாடும் ஒரேசமயம் நிகழ்ந்திருக்கிறது.

திண்டிவனம் அருகே மேல்சித்தமூரில் இப்போதும் சமணர்களின் தென்னக தலைமை மடம் உள்ளது. பல்லவர் முதல் நாயக்கர் வரை ஆண்டகாலத்தில் அவர்கள் ஜைனக்காஞ்சியில்தான் இருந்தார்கள். நவாப் ஆட்சிக்காலத்தில்தான் மேல்சித்தமூருக்கு மடம் மாற்றப்பட்டது. பிரம்மாண்டமான அழகிய கோயில் இங்கு உள்ளது. எந்தச் சிதைவும் இன்றி. எல்லா மன்னர்களும் நிவந்தம் அளித்திருக்கிறார்கள். திருவிழாக்கள் நடந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சமணர்கள் நிறைந்து வாழ்ந்தது இந்த ஊர். இப்போது சமணர் எண்ணிக்கை மிக்க குறைவு. வீடுகள் கைவிடபப்ட்ட வெறும் தெருக்கள்.

நான் அங்கே மடத்துக்குச் சென்று மடாதிபதியிடம் உரையாடியிருக்கிறேன். சமணர் எண்ணிக்கை குறைவது அவர்கள் இந்துக்களாக மாறுவதனாலும் திருமணம் முதலிய சடங்குகளுக்காக அவர்கள் ஊர் விட்டு போவதனாலும்தான் என்றார். தொண்டைமண்டல முதலியார்கள் அனைவருமே சமணர்களாக இருந்து சில நூற்றாண்டுகளுக்குள் மாறிச் சென்றவர்கள் என்று சொன்ன அவர் கழுவேற்ற ஐதீகத்தை கடுமையாக மறுத்தார். அது சைவர்கள் தங்கள் வெற்றிக்காக உருவாக்கிய கதைமட்டுமே என்றார்.

காரணம் அச்சம்பவம் குறித்து தோற்றவர்கள் தரப்பில் ஒரு ஆவணம் கூட இல்லை. இத்தனைக்கும் கல்வியை அடிப்படையாக்க கொண்ட சமணம் விரிவான ஆவணப்பதிவை வழக்கமாக்க கொண்டது. சமணத்தின் வரலாறு அதன் தென்னகத் தலைநகர்களான சிரவணபெலகொளா, மற்றும் முடுபத்ரே மடங்களில் தெளிவாகவே பேணப்படுகிறது என்றார். சமணரைக் கொன்றழித்த கதைகளை எழுதும் எவருக்குமே அதற்காகச் சமணரைப்பற்றி ஒரு ஆய்வுசெய்துபார்க்கலாம் என்ற எண்ணம் இல்லை.

[நன்றி: ஜெயமோகன் இணையதளம்]

தத்துவமும் அது உருவாக்கும் வாழ்வியலும்:

அக்காலகட்டத்தில் பாரத நாடெங்கும் நடைபெற்ற சமய, தத்துவ விவாதங்களில் பிரபஞ்சம், சிருஷ்டி, ஜீவன், ஆன்மா, முக்தி ஆகிய கருத்தாங்கள் குறித்த விரிவான அலசல்கள் நிகழ்ந்தன. இதில் பிரபஞ்சம் தன்னாலேயே ஒரு வெடிப்பு (explosion) மூலம் உருவாயிற்று என்ற சாங்கியக் கோட்பாட்டை முதல் தளத்தில் வேதாந்த, சமண, பௌத்த தரப்புக்கள் அனைத்துமே ஏற்றுக் கொண்டன. அடுத்த தளத்தில், இந்தப் பருப்பொருள் மயமான, ஜடமான இயற்கையில் உயிர்ச்சக்தி (சைதன்யம்) புகுந்தது எவ்வாறு என்ற கேள்வியும் முன்வைக்கப் பட்ட்து. நம்மாழ்வாரின் வரலாற்றில் செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?என்று எழுந்த கேள்வி இந்தத் தத்துவச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டது தான். அங்கு சமண, பௌத்த தரப்புகள் திணறி நின்றன. ஆனால் வேதாந்தம் பிரம்மம், பரம்பொருள் என்கிற அனைத்துமான ஒரு முழுமைத் தத்துவம் (Absolute) மூலம் இதற்கு விடைகாண முற்பட்டது. “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்என்பதே பதிலாக வைக்கப் பட்டது. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்ஆன மெய்ப்பொருள் தர்க்க அறிவினால் அல்ல, உள்ளுணர்வும், அனுபூதியும் கூடிய நிலையில் உணரப் படுகிறது என்றும் வேதாந்தத் தரப்பு சொன்னது. சைவ சமயம், இதனையே சிவனது பிரபஞ்ச லீலையாக, அருள் விளையாட்டாகக் கண்டது.

சமண, பௌத்த தத்துவங்களின் சூனியம் என்ற வெறுமைக் கோட்பாடு மறுப்பும், விரக்தியும் சார்ந்த வாழ்க்கை நெறிகளை நோக்கி இட்டுச் சென்றது. அதற்கு மாற்றாக வேதாந்தமும், சைவ சமயமும் முன்வைத்த “பூரணம்என்ற கோட்பாடு உயர்தத்துவ அளவில் நிறைவானதாகவும், அதே சமயம் வாழ்க்கையின் வர்ணஜாலங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதாகவும் இருந்து. உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்” ”அலகில் சோதியன்ஆன பரம்பொருளை “நிலவுலாவிய நீர்மலி வேணியன்ஆகவும் “அம்பலத்து ஆடுவான்ஆகவும் காணும் சமய நெறியில், உயர்தத்துவமும், உணர்ச்சிமயமான பக்தியும், கவித்துவமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன.

“குன்றெலாம் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு

தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருவையாறே

என்பது சம்பந்தர் தேவாரம். இப்படி ஒவ்வொரு திருத்தலத்திலும் நதிகளையும், மலைகளையும், வயல்களையும், சோலைகளையும் உவகை பொங்க அவர் வர்ணித்துச் செல்வதன் காரணம் இவை அனைத்தும் அந்த பூரணத்தின் வெளிப்படுகளாகவே அவருக்குத் தோன்றுகின்றன.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் செல்கதிக்கு யாதுமோர் குறைவிலை

என்று வாழ்க்கையை இம்மை, மறுமை இரண்டிலும் சாரமுள்ளதாக சம்பந்தரின் பாடல் காண்கிறது. இசை, நடனம், சிற்பம் ஆகிய கலைகள், கோயில்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் ஆகியவற்றால் நிரம்பிய சைவ சமயம் சமூகத்தில் மிகப் பெரிய சக்தியாக ஆனதில் வியப்பே இல்லை. காலப் போக்கில் இதுவே சமணம் தமிழகத்தில் தேய்ந்து மறையவும் காரணமாயிற்று.

எனவே, சமணத்தின் மீதான சைவத்தின் வெற்றி தத்துவச் செழுமையாலும், அது உருவாக்கிய வாழ்வியல் நெறிகளின் முழுமையாலும் தான் நிகழ்ந்ததே அன்றி வன்முறையாலோ, ஆக்கிரமிப்பாலோ நிகழ்ந்தது அல்ல என்று உறுதியாகக் கூறலாம்.

இன்றைக்கு சமண சமயத்தவர்களுக்கிடையிலும், சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்த இந்துக்களுடையிலும் எந்தவிதமான மதப் பூசலோ, மோதலோ இல்லை. இந்தியா முழுவதும் சமணர்கள் விநாயகர், லட்சுமி, திருமால் முதலிய தெய்வ வடிவங்களை தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களோடு இணைத்து வைத்துப் பூசிப்பதையும், இந்துக்கள் சமணக்கோயில்களுக்குச் செல்வதையும் சகஜமாகப் பார்க்கிறோம். அகிம்சை, தர்மம், நீதிநெறிகள் ஆகிய துறைகளிலும் இரு மதங்கள் கொண்டும், கொடுத்தும், ஊடியும் வளர்ந்து செழித்திருக்கின்றன. எனவே, இந்தக் கட்டுரையின் நோக்கம் பழைய சமய, வரலாற்றுப் பூசல்களை மீட்சி செய்வதல்ல. மாறாக அவற்றைக் குறுக்கல்வாத நோக்குடனும், அரைகுறை தகவல்களுடனும் சித்தரித்து, அவற்றிலுருந்து ஒரு தீய வெறுப்பியல் களத்தை உருவாக்கும் போக்கினைச் சுட்டிக் காட்டி, அதனை விமர்சிப்பதே ஆகும்.

துணைபுரிந்த நூல்கள்:

[1] பெரியபுராணம் – திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்

[2] The Kalabhras in the Pandiya Country, M Arunachalam. University of Madras, 1979

[3] களப்பிரர், நடன. காசிநாதன், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, 1981.

11 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

சுவாரசியமான சிந்தனை இழை. இதிலே கூட நிறைய முரண்பாடுகள்.

//சம்பந்தர் காலத்தில் அது தனது வலுவிழந்த,சீரழிந்த நிலையில் இருந்தது எனலாம். அதனால் தான் சம்பந்தர் அதனை வாதத்தில் எளிதாகவே வென்று விட முடிந்தது.//

அப்படியிருப்பின், சேக்கிழார்,

//பெரியபுராணத்தின் படி, வாதத்தில் தோற்றால் தங்களை வேந்தன் கழுவேற்றட்டும் என்று சமணர் தாமாகவே கூறுகின்றனர்.
அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில்
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே என்று சொன்னார். அவர்கள் வாதத்தில் தோற்றவுடன், மன்னன் மந்திரியாகிய குலச்சிறையாரைப் பார்த்து, இவர்கள் மடத்திற்குத் தீவைத்த குற்றமும் புரிந்தவராதலின், தண்டிக்கப் படவேண்டியவர்கள், அதனால் இவர்களைக் கழுவில் ஏற்றுக என்று ஆணையிடுகிறான். அரச நீதியில் தலையிடுவது முறையாகாது என்று கருதி சம்பந்தர் திருவருளைச் சிந்தித்து, வாளாவிருந்தார்//

என்றது மிகப் பெரிய பொய் என்றாகிறதே! இறையருள், அன்பே சிவம் என்பதையும் மீறி அரச நீதியில் தலையிடுவது முறையாகாது என்று வாளாவிருந்தது எதனால்?

சேக்கிழார் சொன்னது உண்மை என்று வைத்துக் கொண்டால், சமணர்களைக் கழுவேற்றியது நடந்த உண்மை என்றாகிறது.

//தொண்டைமண்டல முதலியார்கள் அனைவருமே சமணர்களாக இருந்து சில நூற்றாண்டுகளுக்குள் மாறிச் சென்றவர்கள் என்று சொன்ன அவர் கழுவேற்ற ஐதீகத்தை கடுமையாக மறுத்தார். அது சைவர்கள் தங்கள் வெற்றிக்காக உருவாக்கிய கதைமட்டுமே என்றார்//

இப்படியும் ஒரு வரி உங்கள் பதிவிலேயே இருக்கிறது.

தமிழக வரலாற்றை, இலக்கியங்களின் வழியாகத் தேடும் போது, நிறைய மிகைப்படுத்தப் பட்ட பகுதிகளை ஒதுக்கிவிட்டுத் தான் தேடவேண்டியிருக்கிறது என்பது உண்மை தான். புலவர்கள், மனம்போன போக்கில் பொய்களைக் கற்பனை, உயர்வு நவிற்சியணி என்ற சந்தடி சாக்கில் நிறையவே திணித்து விட்டுப் போயிருப்பதனால் தானே வந்தவர்கள் எல்லாம் இந்திய வரலாற்றைத் திரித்து எழுத முடிந்திருக்கிறது?

அப்படி இருக்கையில், மறுபடி வெறும் வாதங்கள், ஊகங்களின் அடிப்படையில் இந்த நிகழ்வுகளுக்கு சப்பைக் கட்டு கட்ட முயற்சித்திருக்க வேண்டாமே!

ஜடாயு said...

// பிளாகர் கிருஷ்ணமூர்த்தி கூறியது

புலவர்கள், மனம்போன போக்கில் பொய்களைக் கற்பனை, உயர்வு நவிற்சியணி என்ற சந்தடி சாக்கில் நிறையவே திணித்து விட்டுப் போயிருப்பதனால் தானே //

உலகின் தொன்மை இலக்கியங்கள் எல்லாவற்றிலும் இது உண்டு. தமிழில் மட்டுமல்ல.

ஒவ்வொரு காலகட்டத்தில் அப்போது இயல்பாகப் புழங்கும் நடையும், மொழியும், சித்தரிப்புகளும் தான் அந்த இலக்கியத்தில் வரும். அதை “திணிப்பு” என்று சொலவது மேம்போக்கான, இலக்கிய-அறியாமை நிரம்பிய கூற்று.

பின்னால் வருபவர்களுக்கு வரலாறு தெரியவேண்டும் என்பதை மட்டும் கணக்கில் கொண்டிருந்தால் நமக்கு டயரிகள் மட்டுமே கிடைத்திருக்கும், இலக்கியம் கிடைத்திருக்காது. (அவையும் பயனுள்ளவை தான், ஆனால் வாழ்வியல் தரிசனம் என்பது டயரியோடு மட்டும் முடிவதல்ல)

இன்றைக்கு எடுக்கப் படும் திரைப்படங்களைக் கொண்டு ஒரு 300 வருடம் கழித்து ஒரு ஆய்வாளர் நம் சமூகத்தின் சித்திரத்தைப் பெற முயற்சிப்பது பற்றி யோசித்துப் பாருங்கள் - அது முழுக்க, முழுக்க உண்மையாகவா இருக்கும்? அதில் அதீத சித்தரிப்பே இருக்காதா?

ஜடாயு said...

// கிருஷ்ணமூர்த்தி கூறியது

மறுபடி வெறும் வாதங்கள், ஊகங்களின் அடிப்படையில் இந்த நிகழ்வுகளுக்கு சப்பைக் கட்டு கட்ட முயற்சித்திருக்க வேண்டாமே! //

இந்தக் கட்டுரை முழுவதும், ஐதிகமாக வரும் மரபுகள், புராணக் குறிப்புக்கள் எதைக் குறிக்கின்றன என்பதையே அலச முயன்றிருக்கிறேன்.

சேக்கிழார் காலத்தில் (சம்பந்தருக்கு 5-6 நூற்றாண்டுகள் பின்பு) இந்தக் கழுவேற்றம் பற்றீய கதை சைவ சமய ஐதிகமாகவே ஆகி விட்டிருந்தது. அதனால் சேக்கிழார் ஒரு நாடகத் தன்மையுடன் அதைச் சித்தரித்திருக்கின்றார். அவ்வளவே. அதில் அந்தக் கட்டத்தில் சம்பந்தர் ஏன் தடுக்கவில்லை என்று கேட்பது அந்த நாடகீயச் சித்தரிப்பை உண்மை வரலாறு என்று கருதி மயங்குவதால் விளைவது.

“புராணம் பொய்யாகாது” என்பது பழமொழி. நானும் சேக்கிழார் சொன்னது “பொய்” என்று சொல்லவில்லை, அது சொல்லவரும் “உண்மை” என்ன என்று கண்டறியவே இங்கு முயன்றிருக்கிறேன். இல்லையா?

நாயன்மார்கள் பற்றிய மற்ற சாதாரண புராணச் செய்திகளைக் கூட வரலாற்று நோக்கில் நாம் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லையே? சமகால கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சி, தொடர்புடைய மற்ற இலக்கியங்கள், மரபுவழிச் செய்திகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து தான் நாயன்மார்களது காலம் உட்பட அனைத்து விஷயங்களையும் வரையறை செய்கிறோம்.

அப்படி இருக்கையில், எண்ணாயிரம் பேர் மாண்டனர் என்று ஐதிகக் கதையாக சொல்லப் படும் இத்தகைய ஒரு நிகழ்வின் வரலாற்றுத் தன்மை பற்றி ஆராயாமல் போகிற போக்கில் அதை அப்படியே ஏற்க வேண்டும் என்று சொல்ல வருவது தான் அராஜகம்.

இங்கு நான் குறிப்பிட்டது எதுவும் *வெறும்* ஊகமல்ல. ஆதாரபூர்வமான, சான்றுகளுடன் கூடிய தகவல்களே. சப்பைக் கட்டு எங்கே இருக்கிறது?

Unknown said...

அருமையான கட்டுரை ஜடாயு. நல்ல முறையில் அலசியிருக்கிறீர்கள். அருள் பொழியும் சைவத்தை நிலை நிறுத்திய சம்பந்தப் பெருமானின் அருளுரைகளைக் கேட்ட மன்னன் சமணர்களைக் கழுவிலேற்றியிருப்பான் என்பது நமபத் தகுந்ததாக இல்லை. அப்படியே நடந்திருந்தாலும் எண்ணாயிரம் பேர்களை அவ்வாறு தண்டித்திருப்பான் என்பதும் நம்பத்தகுந்ததாக இல்லை. நீங்கள் கூறியுள்ள படி சமணர்களின் நூல்களில் அதற்க்கான ஆதாரங்கள் இல்லையெனும்போது அது ஒரு பொய்ப் பிரசாரமாகவே இருக்க வேண்டும்.

படிப்பதற்கு மிகவும் திருப்தியாக இருந்தது. மனமார்ந்த நன்றி.

அன்புடன்

ப. இரா. ஹரன்.

ஜடாயு said...

// படிப்பதற்கு மிகவும் திருப்தியாக இருந்தது. மனமார்ந்த நன்றி.

அன்புடன்

ப. இரா. ஹரன். //

மிக்க நன்றி, ஹரன்.

கபீரன்பன் said...

நன்கு ஆராய்ந்து தரப்பட்டுள்ள பயனுள்ள தகவல்கள். நன்றி

///இதில் “எண்ணாயிரவர்” என்பது எண்ணிக்கையை அல்ல, ஒரு குழுவினரைக் குறிக்கிறது.... எண்ணாயிரவர், நாலாயிரவர், மூவாயிரவர் என்று வணிகர் கூட்டஙக்ளுக்குப் பெயர்கள் இன்றளவும் உள்ளன. .... இத்தகைய ஒரு குழுவைச் சேர்ந்த சமண குருமார்கள் வாதில் தோற்றுப் போயிருக்கலாம் ///

பல வருடங்களாக மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கம் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி.

ஜடாயு said...

மிக்க நன்றி, கபீரன்பன் ஐயா.

Unknown said...

தமிழ் ஹிந்து மறுபடியும் வர ஆரம்பித்துவிட்டது என்று தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் கட்டுறைகளை அங்கே எதிர்பார்க்கிறேன்

thiruchitrampalam said...

மிக மிக சரியான கரூத்து. இப்படி உண்மையை உரைக்க யாரும் இல்லையே என்ற மனதின் மிக பெரும் வருத்தம் இன்று இக்கட்டுரையை படித்த உடன் நீங்கியது. எரிகின்ற தீயை வென்ற பச்சை பதிகம், ஓடுகின்ற ஆற்று புனலை வென்ற திரு ஏடகம் பதிகம், நவ கோள்களையும் அன்பினில் சிறந்த சிவபெருமானது சிவனடியார்களுக்கு நன்மையே (நன்மையை மட்டுமே) செய்ய வைத்த கோளறு பதிகம், ஆண் பனைகளை பெண் பனைகள் ஆக்கிய சைவ தழைக்க வந்த பிள்ளையின் வேத வாக்கினை, சிவ வாக்கினை, நாளேடு தமிழ் மட்டுமே படித்த அறிவு ஜீவிகள், பகலவனின் பயன் அறியா புழுக்கள் பேசும் குருட்டு சாக்குக்கு இன்று சாட்டை அடி கொடுத்த அய்யா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். வயலிலே பயிரிடையே வளரும் களையை நன்றாக அழகாக இருக்கிறது என்று அழகா பார்க்கிறோம்? தாய் சொல்லித்தான் தந்தையை அறிகிறோம். இவன் என் தந்தை என்பதை நிருபி என்றா கேட்கிறோம்? தாயை நம்பாமல் கேட்பது போல், பகுத்தறிவு என மார்தட்டி இந்து கடவுளை மட்டும் பேசும் பகுத்தறிவு வீரர்களே சைவத்தின் உண்மையான பெருமையை அறிந்து பேசு.. இப்படிக்கு திருச்சிற்றம்பலம்...

s.n.ganapathi said...

அய்யா வணக்கம்
திருசம்பந்தர் அரிய தமிழா பாடல்களை இறைவன் மேல் பாடி இறை உணர்வும் தமிழ் உணர்வும் வளர்துள்ளார் எத்துணை பேர் இதை அறிவார்கள் ..ஆனாலும் இவ்வளவு தெளிவாக எடுத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணி என்ற ஊரில் சமணர்கள் வாழ்ந்த
குகை போல உளது .. சங்கரன்கோவிலுக்கு கிழக்கே ...கழுகுமலை 19 km தூரத்தில்உள்ளது அங்கே
சமணர்களின் குகை கோவில் உள்ளது ஆனால் சமணர்கள் வழி ஆட்கள் இல்லை நாம் என்னை செய .....
நீங்கள் கூறியது போல் எண்ணைரம் என்பது அவர்களின் குடும்ப பெயராக இருக்கலாம்...... .போக மொகலாயர்கள் ஆட்சியல் செய்த மாதிரி மதம் மறு அல்லது வெட்டுவேன் உன் கண் முன் உன்
தாய் கற்பளிக்கபடுவாள் என்றுநாம் செயவில்லையே ????? ..என்றும் மிரட்டி மதம் மாறவில்லை .. மாறு என்றும் சொல்லவில்லை ..அன்று முதல் இன்று வரை சைவ சமயம் எனது சமயத்து க்கு வா உனக்கு நிறைய தரேன் என்று யாரும் எமர்றவில்லை புரிந்தால் சரி ..நன்றி அன்பரே hamaragana/blogspot.com
u
--

Shanthy Mahalingasivam said...

சிறப்பு 👌