Monday, June 30, 2008

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4

முந்தைய பகுதிகள் : பகுதி 1, பகுதி 2, பகுதி 3

// கேள்வி 17 : வைதீக மரபின் மிக உயர்ந்த மந்திரமாகிய காயத்ரி உபதேசித்த பின் தமிழ் ஞானசம்பந்தர் சொன்ன சேதி என்ன... அறிவீர்களா? //

ஆகா! ஒரு வருடம் முன்பு இணையத்தில் வேறு ஒருவரும் இதே கேள்வியைக் கேட்டிருந்தார். அதுகுறித்து அப்போது நான் எழுதியதை அப்படியே கீழே தருகிறேன் - (முழுக்கட்டுரையும் இங்கே)





தமிழன் என்பவர் எழுதுகிறார்:"திருஞானசம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான். தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்."இது எப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய், திரிபுவேலை என்று பார்ப்போம். திருஞானசம்பந்தருக்குப் பூணூல் அணிவித்த சடங்கு முடிந்ததும் அங்கே வந்திருந்த வேத பண்டிதர்களுக்குப் பாடியதாகச் சொல்லப்படும் பஞ்சாக்கரப் பதிகத்தில் வரும் இந்தப்பாடல்:

மந்திரம் நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே

'நமசிவய' என்ற திருவைந்தெழுத்தே மந்திரங்கள் அனைத்திற்கும் மூலம் என்றும், தீ வளர்த்து ஓம்பியிருக்கும் வேதியர் முப்போதும் ஓதும் சந்தியாவந்தன மந்திரத்திலும் மூலமாயிருப்பது அதுவே என்கிறார். ஏனெனில் ஐந்துமுகம் கொண்ட வேதமாதாவான காயத்ரி தேவியே சதாசிவபத்னியான மனோன்மணி. காயத்ரி அஷ்டோத்திரத்திலே மனோன்மண்யை நம: என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி தியான மந்திரத்தில் வரும் 'முக்தா, வித்ரும, ஹேம, நீல, தவளம்' என்ற இந்த ஐந்து வண்ணங்கள் பஞ்சபூதங்களையும் சதாசிவத்தையும் சுட்டுகின்றன. மாணிக்கவாசகர் சிவபுராணத்திலே 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்றதும் அதனால்தான். இதிலே காயத்ரி மந்திரம் வேண்டாம் என்று எங்கே சொல்கிறார்?

மேலும் 'திருஞானசம்பந்தர் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்' என்றொரு அடாத பொய்யைச் சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் மிசினரிமார்தான் இட்டுக்கட்டிச் சொல்வார்கள்.பதிகத்துக்குப் பதிகம் இறைவனை வேத உருவாகக் கண்டவர் 'வேதநெறி தழைத்தோங்க' (சேக்கிழார் வாக்கு) வந்த திருஞானசம்பந்தர். வேதம் என்பதை “மெய்யறிவு” என்பதாக மட்டுமல்ல ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் என்ற பொருளிலேயே ஏராளமான பாடல்களில் பாடியுள்ளார்

“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக.. “
“வேதமொடு ஆறங்கம் ஆயினானை.. “
“சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்)


வேதம் மட்டுமல்ல, சம்ஸ்கிருத மொழிமீதும் சம்பந்தர் வெறுப்பைக் காட்டவில்லை. சம்ஸ்கிருதமும், தமிழும் இணைந்ததே தமது வழி என்றும் உரைக்கிறார். “ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என்று சமணரைச் சாடுகிறார். வாதத்திற்கு முன் இறைவனை வேண்டிப் பாடும் திருவாலவாய்ப் பதிகத்தில்

"ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு..”

என்கிறார். வேத, ஆகமங்களின் மொழியாகிய சங்கதம் (சம்ஸ்கிருதம்) பங்கமுறுமாறு பாகதம் (சமணரது பிராகிருத மொழி) பேசுவோர் என்றும் சமணரைச் சாடுகின்றார்.

// கேள்வி 18 : வேத நெறி தழைத்தோங்க என்று பாடிய சேக்கிழார் மிகு சைவத் துறை விளங்க என்று பாடுவதில் உள்ள மிகு சைவம் என்று சொல்லாட்சியின் நுட்பம் என்ன? //

தாங்கள் அந்த நுட்பத்தை விளக்கினால் தெரிந்து கொள்வேன்.
சேக்கிழார் பெரியபுராணத்தில் ஒவ்வொரு நகரை வர்ணிக்கும் போதும் அங்கு இடையறாது கேட்டுக் கொண்டிருக்கும் வேதஒலியையும், வேள்விப் புகையையும், பிரமசாரிகள் வேதம் கற்கும் “கிடை”களைப் பற்றியும் அற்புதமாக வர்ணித்துச் செல்வார். அவரும் வேதங்களின் பெருமையை ஏராளமான இடங்களில் எடுத்தோதியுள்ளார்.

“மிகு சைவம்” என்பது மற்ற சமயப் பிரிவுகளைக் காட்டிலும் சைவமே உயர்ந்தது என்று சொல்கிறது. ஆனால் அதற்கு அடிப்படையானது “வேதநெறி” என்பதையே முதலில் குறித்தார். இதில் வேதத்திற்கு முரணாகவோ, எதிராகவோ எதுவும் அவர் கூறவில்லை என்றே கொள்கிறேன்.

// கேள்வி 19 : வேதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட வைதீக மரபுக்கும், தென் தமிழ் நாட்டில் பொலிந்த திருமாலியம், சிவனியம் ஆகிய சமயங்களுக்கும் எந்த வேறுபாடுமே கிடையாதா?//

“வைதீக மரபு” என்று குறிப்பது எதை என்று முதலில் சொல்லவேண்டும். வியாசர், சங்கரர் முதல் விவேகானந்தர் வரை வைதிக (வேத வழிவந்த) நெறி என்று சொல்லும்போது அதில் நான்கு வேதங்கள் - கர்ம, ஞான, பக்தி, ராஜ யோகங்கள் - காணாபத்யம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம் முதலிய அறுசமயங்கள் - சாங்க்யம், நியாயம், வைசேஷிகம்,யோகம், மீமாம்சம், வேதாந்தம் முதலிய ஆறு தத்துவ தரிசனங்கள் அனைத்தையும் இணைத்தே கூறுகிறார்கள். இன்று நாம் இந்துமதம் என்று கூறுவதும் இது தான். இதில் ஒவ்வொன்றாகப் பிய்த்து அவற்றுக்கிடையே வேறுபாடுகள் மட்டுமல்ல, மோதலும் இருக்கிறது என்று கூறுவது மேற்கத்திய, கிறிஸ்தவ மிஷநரி ஆராய்ச்சியாளர்களின் ஊழியமும், பொழுதுபோக்கும் ஆகும். (வேறுபாடுகள் என்பது வேறு, முரண்/மோதல் வேறு. ஒரு பூவில் பல வண்ணங்கள் இருப்பதும் வேறுபாடு தான், அவை அனைத்தும் சேர்ந்தே மலர் அழகாகிறது. இந்து கலாசாரம் இத்தகைய இயல்பான பன்முகத்தன்மையை அழிக்க முயல்வதில்லை, மாறாக போற்றி வளர்க்கிறது).





வேதம் விதை, மற்றவை அதன் கனிகள். விதையை நாம் பார்க்க முடியாது, கனிகளை மட்டுமே உண்ண முடியும். அதனால் தான் “வேதத்தை, வேதத்தின் சுவைப் பயனை, விழுமிய முனிவர்கள் விழுங்கும் கோதிலின் கனியை” என்கிறார் திருமங்கையாழ்வார். விதைக்கும், கனிக்கும் இடையே உள்ள தொடர்பு வளர்ச்சியே அன்றி வேறுபாடு அல்ல.

வேதத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னர் ஏற்பட்ட சமய வளர்ச்சி அனைத்தையும் புறக்கணித்து , ஆதி ஆரம்பத்தில் இருந்த யாக, யக்ஞம் மட்டுமே இந்துமதம் என்று கூறியது ஒரே ஒரு இயக்கம் தான் - “ஆரிய சமாஜம்”. இதை உருவாக்கிய சுவாமி தயானந்தர் சிவ,விஷ்ணு, சக்தி வழிபாடுகள், கோயில்கள் அனைத்தையும் கண்டித்தார். அதனால் தான், ஒரு பெரிய சமூக சீர்திருத்த அலையை ஏற்படுத்தி விட்டு, அதன் வரலாற்றுத் தேவை முடிந்தவுடன் அந்த இயக்கம் வளர்ச்சியடையவில்லை. “வைதிகம்” என்பதற்கான இந்தக் குறுகிய வரையறையை சங்கராசாரிய மடங்கள் உட்பட யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

சைவமும், வைதிகமும் ஒன்றே என்ற அளவில் சேக்கிழார் பெருமான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. திருஞானசம்பந்தர் புராணத்தில் வைதிக என்ற சொல் வரும் பல இடங்களில் சிலவற்றைப் பாருங்கள் -

“மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப் பொறை அணி முகிலே புகலியர் புகலே” (1990, பெரியபுராணம்)

இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி ஆனவர் (2088, பெ.பு)

மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் (2238, பெ.பு)

மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் (2498)

மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச்
செந்நெறி விளக்கு கின்றார் (2503, பெ.பு)

இன்னொரு விஷயம். நம் குருமார்களே வழங்கிய சைவம், வைணவம் என்கிற அழகிய சொற்கள் இருக்க, திருமாலியம், சிவனியம் என்ற சொற்கள் அபத்தமாக ஒலிக்கின்றன. ஏதோ வேதிப் பெயர்களின் பெயர்கள் போலவும் (தோரியம், யுரேனியம்) அவ்வப்போது வீசும் புற்றீசல் அரசியல் கொள்கைகள் போலவும் (மார்க்சியம், பெரியாரியம்) தோன்றும் இத்தகைய சொற்கள் உள்நோக்கத்துடன் உருவாக்கப் படுகின்றன. தயவு செய்து அவற்றைத் தவிர்க்கக் கோருகிறேன்.

// கேள்வி 20 : சமண, பௌத்த மதங்கள் போல வேதத்தை முற்றிலும் எதிர்க்காவிடிலும், தங்களுக்கு அசௌகரியமான இடங்களில் சைவ சித்தாந்திகள் விலகி நிற்கிறார்கள் என்பது உங்களுக்கு நிஜமாகவே தெரியாதா?//

நிஜமாகவே தெரியாது. அந்த அசௌகரியமான இடங்கள் என்னென்ன, எப்படி விலகி நிற்கிறார்கள் என்று தாங்கள் தக்க ஆதாரத்துடன் விளக்கினால் தெரிந்து கொள்வேன்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சங்கரர், ராமானுஜர், மத்வர் போல வேதாந்தத்தின் மூன்று அடிப்படை நூல்களூக்கும் (உபநிஷதங்கள், பிரம்மசூத்ரம், கீதை) சைவசித்தாந்த நோக்கில் உரை எதுவும் எழுதப் படவில்லை. அதனால் சீராக இத்தகைய ஆராய்ச்சியை செய்வது மிகவும் கடினம்.

சைவத்தைப் பொறுத்தவரை அனுபூதி நிலையில் அருளப்பட்ட திருமுறைகள் முதல் இடத்திலும், தத்துவம் பேசும் சித்தாந்த சாஸ்திரங்கள் இரண்டாம் இடத்திலும் இருப்பதாகக் கூறுவார்கள். ஸ்ருதி, ஸ்மிருதி போல இதைக் கொள்ளலாம். இந்த மிகப்பெரிய சமய இலக்கியக் கடலில் எந்த இடத்தில் எந்த வேதக் கருத்து விலக்கப் படுகிறது என்று கண்டுபிடிக்க முடியுமா? அப்படி ஒரு லிஸ்ட் கிடைத்து விட்டால் மற்ற எல்லா இடங்களிலும் வேதக் கருத்து ஏற்கப் படுகிறது என்று கொள்ளலாமா?

வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் தேர்ந்த ஞானம் கொண்ட ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் (திருப்பராய்த்துறை) தமது திருவாசக உரையிலும், தாயுமானவர் பாடல் விளக்கங்களிலும் ஏராளமான இடங்களில் கீதை, உபநிஷத கருத்துக்களுடன் சைவசித்தாந்தம் முழுமையாக இயைவதை எடுத்துக் காட்டுகிறார். வேதாந்தம் கூறும் பிரம்மமே, சித்தாந்தத்தில் சிவம் ஆகிறது, சாங்கியம் கூறும் புருஷன்–பிரகிருதி தத்துவமே சிவ-சக்தி என்றெல்லாம் பலவாறாக விளக்கி ஒரு நீண்ட முன்னுரையையும் இந்நூலில் சுவாமி எழுதியிருக்கிறார். கீதை, உபநிஷத உரைகளிலும் இதே போன்று திருமுறைகளை மேற்கோள் காட்டுவார். இன்னொருவர் இதைவிடத் தெளிவாக வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றே என்கிறார், அதை முத்தாய்ப்பாக அடுத்த பதிலில் இடுகிறேன்.

// கேள்வி 21 : தாங்கள் குறிப்பிட்ட தாயுமானவர் பாடலில் ஒரு விளக்கம். சமரசம் என்பது முரண்படுகிற இரு பிரிவினருக்கிடையில் ஏற்படுத்தப்படுவது. அப்படிப் பார்த்தால் வேதாந்த, சித்தாந்த சமரசம் ஏன் தேவைப்பட்டது? என்ன முரண்பாடு? என்ன சமரசம்? என்று யோசித்த பிறகு அந்த மேற்கோளைப் பயன்படுத்த வேண்டாமா?//

சமரசம் என்பதற்கு பொதுவாக உள்ள literal meaning தாங்கள் கூறுவது. யோக மொழியில் அதற்குப் பொருள் “ஒன்றாகக் கருதுவது” என்பது. “ஸமத்வம் யோக உச்யதே” (வேறுபடுவதாகத் தோன்றும் பொருட்களிலும் ஒருமையைக் காண்பதே யோகம்) என்கிறது கீதை. “ஒன்றாகக் காண்பதே காட்சி, புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம்” என்கிறாள் ஔவை. “ஸாமரஸ்ய பராயணா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு திருநாமம் வருகிறது. சமரச சுத்த சன்மார்க்கம் என்று வள்ளல் பெருமான் கூறும்போதும் ஒருமையையே சுட்டுகிறார்.

தாயுமானவர் இங்கே கூறுவது வரலாற்றுக் குறிப்பு அல்ல, அவர் பேசுவது தெளிவான யோக மொழி.





“சிவஞான போதத்தை யான் ஆராய்ச்சி செய்ததில் எனக்குக் கிடைத்த பலன் சித்தாந்தமும் வேதாந்தமும், ஒன்றேயென்ற எனது கொள்கை உறுதியடைந்ததே” என்று சொல்பவர் வேறு யாருமல்ல, மாபெரும் தேசபக்தரும், பெரும் தமிழறிஞரும், சைவ மாமணியுமான வ.உ.சி அவர்கள். (சிவஞானபோதம் உரை, வ.உ.சி, பக்கம் 548).

// இந்தக் கேள்விகளுக்கு விருப்பு, வெறுப்பின்றி விடை கண்டால், நான் சொன்ன பதிலின் நேர்மை புலப்படும். முயற்சி செய்யுங்கள். //

இக்கேள்விகளை எழுப்பவும், விடைகாண முயலவும் நம் இருவரையும் தூண்டிய பரம்பொருளின் பேரருளை வியக்கிறேன்.

ஓம் தத் ஸத்.

அன்புடன்,
ஜடாயு

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 3

முந்தைய பகுதிகள் : பகுதி 1, பகுதி 2

// கேள்வி 9 : தங்கள் விமர்சனத்தில் சித்தம் என்பதும், மனம் என்பதும் ஒன்றே என்ற பொருளில் மனம் போன போக்கில் என்று அர்த்தம் செய்துள்ளீர்கள். இரண்டும் ஒன்றே என்று கருதுகிறீர்களா? வேறு வேறு என்பதை நிஜமாகவே அறிவீர்களா இல்லையா? //

யோக மொழியில் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இந்த நான்கிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி அறிவேன். அந்த சந்தர்ப்பத்தில் “சித்தத்திற்கு இசைந்த படி” என்பதை “மனத்துக்கு இசைந்த படி” என்று சொன்னாலும் பொருள் மாறப் போவதில்லை. “மனம் போன போக்கில்” என்ற எனது பயன்பாடு தவறு தான்.

// கேள்வி 10 : சித்தர்கள் பற்றிய உங்கள் செய்தியும் முழு உண்மையல்ல. வேதத்தை முற்றிலுமே ஏற்காமல் புறக்கணித்த, பழித்த, இழிவுபடச் சொல்லி பாடிய சித்தர்கள் பாடல்கள் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? அந்த சித்தர்கள் வேதாந்திகளா? சித்தாந்திகளா? என்று எப்போதாவது யோசித்ததுண்டா? சித்தி பெற்ற ஒருவருக்கு ஏற்படும் சித்தி வேதப் பிரமாணங்களை அறிந்து சொல்லுவதால் அல்லது ஒப்புக் கொள்வதால் ஏற்பட்டதா? அல்லது சுய அனுபவத்தால் எட்டப்படுகிறதா? சித்தர்களின் சுய அனுபவம் எதனால் எட்டப்படுகிறது?//

வேத பிரமாணம் என்பதன் பொருளை முந்தைய பதில் ஒன்றில் சொன்னபடி புரிந்து கொள்கிறேன். எனவே, இந்த “புறக்கணித்த, பழித்த, இழிவுபடச் சொல்லிய” விஷயங்கள் எல்லாம் தூய வேத *ஞானத்தை* மறுத்து அல்ல, வேதத்தை வெறும் வெளியுரையாகவும், நூலறிவாகவும் மட்டுமே எண்ணி அதிலேயே அமிழ்ந்து விடுவதைக் குறித்து தான் கூறப்பட்டது. ஓங்காரத்தையும், பிராணாயாமத்தையும், தியான முறைகளையும், அஷ்டாங்க யோகத்தையும் சித்தர்கள் கைக்கொள்ளத் தானே செய்தார்கள்? அவை வேத, வேதாந்த மரபில் இல்லாமல் வேறு எங்கிருந்து வந்தன?



நிந்தை போன்று தொனிக்கும் இத்தகைய வாக்குகள் ஒருவிதமான முழு நிராகரிப்பு நிலையில் ஞானிகள் பாடியவை (யோக மொழியில் “நிவ்ருத்தி”). இந்த நிலை பற்றிய தத்துவக் கருத்தின் மூலமும் வேதத்திலிருந்தே தோன்றியது.

முண்டக உபநிஷதம் 1.5 கூறுகிறது -

“ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள், ஸ்வரங்கள், சடங்குகள், இலக்கணம், மொழி, யாப்பு, வானவியல், ஜோதிஷம் இவை அனைத்தும் சாதாரண அறிவே (அபரா வித்யா). அழிவற்ற பரம்பொருளை அடையும் அறிவே உயர் அறிவு (பரா வித்யா”)”.

உபநிஷத்தில் பின்னர் இந்தக் கருத்து மிகவும் விரிவாகப் பேசப் படுகிறது. இதே கருத்து கீதையில் சாங்கிய யோகத்திலும் (அத்யாயம் 2) வருகிறது : “எங்கும் நீர்ப் பெருக்கெடுத்திருக்கையில் கிணற்றுக்கு என்ன அவசியமோ, அதே போன்று தான் பிரம்மத்தை உணர்ந்த ஞானிக்கு வேதங்களும்”.

“நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,
ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணவமும் அல்ல,
எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை,
ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை
சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்"!
(ஆத்ம ஷட்கம், ஆதிசங்கரர்)

வேதநெறி தழைக்க வந்த ஆசாரியார் தான் இப்படியும் பாடியுள்ளார்.

“வேதங்களின் சிறப்பு என்ன” என்று கேட்டபோது சுவாமி விவேகானந்தர் “தங்கள் போதனையையும் கடந்து செல்லவேண்டும்’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே… புனித நூல்கள் குழந்தை உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள்” என்கிறார்.

வேதநெறி உருவாக்கிய இந்தக் கலாசாரம் ஆழப் பதிந்திருந்ததனால் மட்டுமே, சித்தர்கள் இந்த தேசத்தில் வெறுக்கவோ, ஒதுக்கவோ, இழிக்கவோ படவில்லை. அவர்களது நிவ்ருத்தி மார்க்கம் ஏற்றுக்கொள்ளப் பட்டது, அவர்கள் வணங்கப் பட்டார்கள். எந்த எழுத்தறிவும், வேதக் கல்வியும் இல்லாத ஸ்ரீராமகிருஷ்ணர் அவதார புருஷராக வணங்கப் பட்டார். (16-ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக் கால ஐரோப்பாவில், கிறிஸ்தவ பைபிளில் இருப்பதற்கு மாறாக “பூமி சூரியனைச் சுற்றுகிறது” என்கிற அறிவியல் உண்மையைக் கூறியதற்காக விஞ்ஞானி கலிலியோவுக்கு வாடிகன் திருச்சபை பல கடுமையான தண்டனைகள் விதித்து அவரை வீட்டுக் காவலில் வைத்தது ; பல விஞ்ஞானிகள், கலைஞர்கள், அறிஞர்கள் திருச்சபையைக் கண்டு அஞ்சி நடுங்கி, ஒளிந்து வாழ்ந்தனர் என்பதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்).

// கேள்வி 11 : தெந்நாட்டுக் கோயில்கள் ஆகம அடிப்படையில் கட்டப்பட்டது போல், வட நாட்டுக் கோயில்கள் அமையாமைக்கு என்ன காரணம்? //

ஏனென்றால் வடநாட்டுக் கோயில்கள் அவற்றிற்கென்று உரிய முறையில் கட்டப் பட்டிருக்கின்றன. கோயில் அமைப்பு என்பது ஆகமம் (சமயக்கொள்கைகள்), சிற்ப சாஸ்திரம் (கட்டிடக் கலை) இரண்டும் இணைந்து உருவானது. சிற்ப சாஸ்திரம் நான்கு கோயில் அமைப்பு முறைகள் உள்ளதாகக் கூறுகிறது – திராவிடம் (தென்னிந்திய கோபுர,விமான பிராகார அமைப்பு), நாகரம் (வட இந்திய அகன்ற கூம்பு வடிவ சிகரம், விமானம் ) வேசரம் (ஒரிஸ்ஸா, வங்காள கோயில்கள்), கூர்ஜரம் (பென்சில் சீவியது போல கூரிய முனை கோபுரம்). பூரியின் ஜகன்னாதர், புவனேஷ்வர் லிங்கராஜர், கொணார்க் சூர்யபகவான் கோயில்களின் அதி அற்புதமான நுணுக்கங்கள் கொண்டவை. இவை அந்தப் பிரதேசத்தில் புழக்கத்தில் இருந்த சைவ, வைணவ ஆகமங்களையும், சிற்ப சாஸ்திரத்தையும் இணைத்து அமைக்கப் பட்டவை என்று கொள்வதே சரியாக இருக்கும். ஏன், தென்னாட்டிலேயே கூட கேரளக் கோயில்கள் ஒரு தனி அமைப்பு கொண்டுள்ளன. கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் இவை அனைத்திலும் பொதுவாக உள்ள அம்சங்களையும் (விமானம், வாகனம், கருவறை, பிராகாரம்) நாம் கண்டறியலாம்.

இந்த வேறுபாடுகள் இந்து கலை மற்றும் கலாசாரத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன. கட்டிடக் கலை வேறுபட்டிருப்பதாலேயே ஆதாரமான சமய நம்பிக்கையும், தத்துவச் சார்பும் மாறுபட்டு விடுமா? Is it right to say they belong to different religions because Russian Orthodox Church looks different from Scottish Orthodox Church?

அதுவும் தவிர, வேதாந்த தத்துவத்தில் (சொல்லப் போனால் எந்த தத்துவ தரிசனத்திலும்) கோயில்கள் என்பவை மையமான விஷயம் அல்ல. ஆத்ம ஞான சாதனமாகிய பக்தியோகத்தில் “கோயில்” என்பது ஒரு அங்கம், அவ்வளவே.

// கேள்வி 12 : வட நாட்டுக் கோயில்களில் பின்பற்றப்படும் பூசை முறை வைதீகமா? ஆகமநெறியா? //

வடநாடு என்று ஒற்றைப் படையாக கிழக்கு, மேற்கு, வடக்கு பாரதக் கோயில்களின் எல்லா பூஜை முறைகளையும் அடக்கி விட முடியாது. பல சமூகத்து பூசாரிகளும் பங்குபெறும் பூரி ஜகன்னாதர் கோயில் பூஜை முறையை விளக்குவதற்கே ஒரு தனி புஸ்தகம் எழுத வேண்டும் – அவ்வளவு elaborate ஆன சமாசாரம் அது. மேலும், பல வடபாரதக் கோயில்கள் முஸ்லீம் படையெடுப்பில் மண்ணோடு மண்ணாகி விட்டதால், அவற்றின் புராதன, தனிப்பட்ட பூஜை முறைகள் பற்றிய முழுமையான தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவை மீட்கப் பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட முறைகளே இன்று காணக்கிடைப்பவை. இவை பெரும்பாலும் ஆகம, வைதீக முறைகளின் கலவை. பக்தி இயக்கம் பிரவாகம் எடுத்து ஓடியதன் விளைவாக, “முறை”களைத் தாண்டி மூலவிக்கிரத்தைக் கட்டியணைத்து முத்தமிடும் பக்திப் பெருக்கையே பெரும்பாலான கோயில்களில் காணமுடியும்.





ஒவ்வொரு கோயிலின் மரபுகளையும், சம்பிரதாயங்களையும் பொறுத்து பூஜை முறை ஆகமம், வைதீகம், தாந்திரீகம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்கியதாகவே இருக்கும். இவை மூன்றுமே இந்துமதத்தில் அங்கீகரிக்கப் பட்டவை தான். உதாரணமாக, வங்காளம், அஸ்ஸாம், கேரள தேவி கோயில் பூஜை முறைகள், பெரும்பாலான குலதெய்வக் கோயில் வழிபாடுகள் இவையெல்லாம் தாந்திரிக முறையின் கீழ்வரும். இந்த முறைகளைப் பயில்வதற்கு சாஸ்திரங்கள் எந்த குல, வர்ணக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்பதும் கருத்தில் கொள்ளத் தக்கது.

சக்தி என்றே ஒரே தேவதையை அடிப்படையாக வைத்து எத்தனை விதமான ஐதிகங்களையும், பூஜை முறைகளையும், தாந்திரீக சாதனைகளையும் சாக்த வழிபாட்டினர் உருவாக்கியிருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். இவற்றை வைத்து ஒவ்வொரு பூஜை முறைக்கும் அடிப்படையாக தனித்தனி ஆதார தத்துவம் இருக்கிறது வாதிடுவது அர்த்தமற்றது. இவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதன் மூலம் அனைத்தும் வேதங்கள், வேதாந்த தத்துவம், சாக்த மரபின் ஆதார நூலான தேவி மகாத்மியம், லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றிலிருந்தே உதிப்பது புலனாகும்.

மேலும், ஆதார தத்துவங்களை ஆராய்வதற்கு மிகத் தெளிவான, விஞ்ஞான பூர்வமான வழிமுறைகள் உள்ளன. பூஜை முறைகள் என்ற விஷயம் தத்துவம்->சமயம்->சடங்குகள்->பிரதேச வேறுபாடுகள் என்று பல படிகள் தாண்டியே அதனுடன் தொடர்பு கொள்கிறது.

// கேள்வி 13 : ஆதி சைவர்கள் எனப்படும் சிவாச்சாரியர்களும், வைதீக பிராமணர்களும் ஒரே சமூகமா? வேறு வேறா? கொண்டும் கொடுத்தும், சரளமான சம்பவங்கள் நிகழ்கின்றனவா? ஆதி சைவர்கள், மூலஸ்தானத்தில் உள்ளே வந்து வைதீகப் பிராமணர்கள் (சங்கராச்சாரியார் உட்பட) பூஜை செய்வதை காலம் காலமாக எதிர்ப்பதற்கு என்ன காரணம்? //

முதலில், இரு பரம்பரை புரோகித சமூகங்களுக்கிடையேயான சமூகப் பிணக்கு பற்றிய இந்தக் கேள்வி இங்கே எதற்காக என்றே எனக்குப் புரியவில்லை. இந்த இரு சமூகங்கள் தான் வேதாந்தம், சைவசித்தாந்தம் ஆகியவற்றின் பிரதிநிதிகளா?

வேதாந்தம் என்பது ஒரு *தத்துவப்* பிரிவு, அது ஒரு சாதிக் கருத்தாக்கம் அல்ல. மிகப் பெரிய வேதாந்த ஞானிகளான சங்கரர், பிரம்மசூத்திரம் தந்த வியாச மகரிஷி, கீதை அருளிய கிருஷ்ணன், சுவாமி விவேகானந்தர், நாராயண குரு, சுவாமி சித்பவானந்தர், சுவாமி சின்மயானந்தர் ஒவ்வொருவரும் பற்பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள். ஏன், வெளிநாட்டவர் கூட வேதாந்திகளாகி இருக்கிறார்கள்.

சைவசித்தாந்தமும் அப்படியே, அதுவும் எந்த சாதியின் சொத்தும் அல்ல. ஹவாய் தீவில் மிகப் பெரிய ஹிந்து ஆசிரமம் மற்றும் சிவன் கோவிலை நிறுவிய, சில வருடம் முன்பு மகாசமாதி அடைந்த சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி பிறப்பால் ஒரு அமெரிக்கர்.

அதிலும் குறிப்பாக, வேதாந்தம் வைதீக புரோகித பிராமணர்கள் என்கிற குழு தூக்கிப் பிடித்த தத்துவம் அல்லவே அல்ல. இந்து மதத்தின் ஆறு தரிசனங்களில் (தத்துவப் பிரிவுகளில்) பூர்வமீமாம்சம் என்பதே கர்மகாண்டத்தை உயர்த்திப் பிடித்த புரோகித வர்க்கத்தின் தத்துவத்தரப்பு. அதை விவாதத்தில் வென்று வளர்ந்தது உத்தர மீமாம்சம் ஆகிய வேதாந்தம். புரோகிதரான மண்டன மிஸ்ரருக்கும், வேதாந்தியான சங்கரருக்கும் இடையிலான புகழ்பெற்ற விவாதம் பற்றி சங்கரரின் வரலாற்றில் கூறப்படுவது பற்றித் தாங்கள் கட்டாயம் அறிந்திருப்பீர்கள்.

(எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற நூல், இந்து தத்துவப் பிரிவுகளைப் பற்றிய விரிவான அறிமுகத்தைத் தருகிறது).

// கேள்வி 14 : சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கும் தமிழில் மட்டுமே எழுதப்பட்டனவே ஏன்? தமிழில் மட்டுமே எழுதப்பட்ட சித்தாந்த சாஸ்திரத்தை தெற்கின் கொடை என்பதா? வடக்கின் கொடை என்பதா? //

தமிழ்நாட்டில் செழித்து வளர்ந்த மரபு என்ற சிறப்பு சைவசித்தாந்தத்திற்குக் கண்டிப்பாக உண்டு : அதை நான் மறுக்கவே இல்லை. நாயன்மார்களைப் பற்றி பிறமொழி நண்பர்களுக்கு நான் எடுத்துரைக்கையில் “தமிழ் சைவம்” (Tamil Saivism) என்கிற சொல்லாட்சியையே பயன்படுத்துகிறேன். ஆனால் சித்தாந்தம் என்பது வேறு எதனோடும் தொடர்பு இல்லாத (குறிப்பாக வடக்கோடு) ஏதோ ஒரு “தனி”சைவம் என்கிற கருத்து மட்டுமே எனக்கு சிறிதும் ஏற்பில்லாதது. இந்த சாத்திரங்களை உருவாக்கியவர்களே திருக்கயிலாய குருபரம்பரை என்று தான் கூறுகிறார்கள்.
கர்நாடக வீரசைவம், காஷ்மீர சைவம், வடநாட்டு சித்த சைவம், வங்காள சைவம், தமிழ் சைவ சித்தாந்தம் இந்த அனைத்து சமயப் பிரிவுகளும் அடிப்படை தத்துவ அளவில் அனேகமாக ஒன்று போலவே இருக்கின்றன, சில சிறு வித்தியாசங்கள் தவிர்த்து.





மேலும், அனைத்து தமிழ் சித்தாந்த சாத்திரங்களிலும் உள்ள 95% தத்துவச் சொற்கள், சம்ஸ்கிருதச் சொற்கள். முக்தி, கர்மம், மாயை, சம்சாரம் (பிறவி), பசு, பதி, பாசம், ஆன்மா, சீவன் போன்ற ஒவ்வொரு சொல்லும், அந்த சொல்லின் பின் நிற்கும் கருத்தாக்கமும், வேத, உபநிஷத காலம் தொடங்கி, இந்தியா முழுவதும் எல்லா தத்துவ விவாதங்களிலும், எல்லா சமயவாதிகளாலும் எடுத்தாளப் பட்டவை. அவை திடீரென்று எங்கிருந்தோ முளைத்தவை அல்ல. இத்தகைய ஒரு பொதுவான தத்துவ அடித்தளம் இருப்பதால் தான், சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் சுபக்கம் (தன் தரப்பு), பரபக்கம் (பிற தரப்பு) என்று அனைத்து தத்துவங்களையும் ஒரு systematic முறையில் விவாதிக்கின்றன. இந்த விவாத முறையே சம்ஸ்கிருத தர்க்க சாஸ்திர நூல்களின் அடிப்படையில் அமைந்தது தான். ஆகமங்கள் அனைத்தும் இருப்பதும் சம்ஸ்கிருத மொழியில் தான். அதனால் சைவ சித்தாந்தத்தில் “வடக்கின்” பங்களிப்பு இல்லை என்று சொல்வதற்கு சிறிது கூட ஆதாரம் கிடையாது.

// கேள்வி 15 : வேதத்தில் தென்னாட்டைச் சேர்ந்த ரிஷிகள் பாடிய வேத சுலோகங்கள் எவை? எவை? வேத மொழியும், சமஸ்கிருதமும் வடக்கே தோன்றியதா? தெற்கே தோன்றியதா? //

(அ) வேத ரிஷிகள் வாழ்ந்த இடங்கள் பற்றிய எந்த விவரமும் நமக்குக் கிடைக்கவில்லை. மிக மிகப் புராதனமான வரலாறு அது. பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் படும் கருத்து வேதங்கள் சிந்து மற்றும் (பின்னாளில் வறண்டு விட்ட) சரஸ்வதி நதிக் கரைகளிலும், கங்கை , யமுனைப் பகுதிகளிலும் (சில யஜுர்வேத சூக்தங்கள்) உருவாகியிருக்கலாம் என்பது. மிகக்கடினமான வரலாற்று ஆராய்ச்சிப் புதிர்கள் இவை. உதாரணமாக, ரிக்வேத ரிஷி அகஸ்தியர், ராமாயணத்தில் ராமனை ஆசிர்வதிக்கும் அகஸ்தியர், புராணத்தில் விந்திய மலையைத் தாண்டும் அகஸ்தியர், தமிழ் இலக்கணம் எழுதியதாகச் சொல்லப் படும் அகஸ்தியர் இப்படி ஒரே பெயரில் உள்ள ரிஷியைப் பற்றி பல வரலாறுகள், மரபுகள் உள்ளன. வருங்கால ஆராய்ச்சிகளில் தென்னகத்திலும் வேதரிஷி இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கலாம். யாரே அறிவர்?

(ஆ) வேதமொழியாகிய ஆதி சம்ஸ்கிருதம் தோன்றிய இடமும் மேற்சொன்ன நதிக்கரைகளே. ஆனால், மிகப் பழங்காலம் எனப் படும் தொல்காப்பிய காலம், சங்க இலக்கிய, சிலப்பதிகார காலத்திலேயெ சம்ஸ்கிருத மொழியும், அதன் சொற்களும் தமிழில் புழங்கத் தொடங்கி விட்டன. ஆனால், இதற்கும், நாம் பேசும் பொருளுக்கும் என்ன தொடர்பு என்றே புரியவில்லை. தென்னாட்டில் வேதாந்தம் என்கிற தத்துவம் மிக ஆழ வேரூன்றியிருந்ததாலேயே அத்வைதம், விசிஷ்டாட்வைதம், த்வைதம் ஆகிய மூன்று பிரிவுகளை உருவாக்கியவர்களும் தென்னாட்டிலேயே தோன்றினர் என்று நான் குறிப்பிட்டேன், இது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. வரலாற்றுப் படி ஆதி சங்கரரின் காலம் கி.பி.6-7ஆம் நூற்றாண்டு. சித்தாந்த சாஸ்திரங்களின் காலம் கி.பி 10-11 ஆம் நூற்றாண்டுகள்: சைவசித்தாந்தம் முழுமையான தத்துவப் பிரிவாக ஆகியது இந்தக் காலகட்டத்தில் தான். ஸ்ரீராமானுஜரின் காலமும் இதை ஒட்டியே.

அதனால் இந்தத் தத்துவப் பிரிவுகளின் வளர்ச்சி பற்றிப் புரிந்து கொள்வதற்கு நாம் வேதரிஷிகள் வரையெல்லாம் போகவேண்டியதே இல்லை.

// கேள்வி 16 : வைதீக பிராமண குலத்தில் பிறந்த ஞானசம்பந்தர் தன்னை நற்றமிழ் ஞானசம்பந்தர் என்றும், தமிழ் ஞான சம்பந்தன் என்றும் கூறிக் கொண்டதற்குச் சிறப்பான காரணம் ஏதும் உண்டா?//

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? தமிழ்நாட்டில் பிறந்த பிராமணர் தமிழர் இல்லையா, அவர் தெலுங்கர் ஆகி விடுவாரா? சம்பந்தருக்கு எத்தனையோ நூற்றாண்டுகள் முன்பு அந்தணாளர் கபிலர் சங்க இலக்கியம் எழுதவில்லையா?

தமிழும், வைதீகம்/வேதமும், பிராமணர்களும் ஒன்றுக்கொன்று விரோதமானவை என்று கண்டிப்பாக நான் நினைக்கவில்லை. ஒரு மரியாதைக்குரிய ஆன்மிக சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர் ஆகிய தாங்களும், சாதி துவேஷத்தையும், நாஸ்திகத்தையும், வரலாற்று ஆராய்ச்சியில் தூக்கி எறியப் பட்டுவிட்ட பொய்யான ஆரிய திராவிட இனவாதக் கொள்கைகளையும் பரப்பும் அரசியல் கட்சிகளின் பார்வையில் நின்று இதனை அணுகமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதனால் இந்தக் கேள்வி ஏன் என்றே எனக்குப் புரியவில்லை.

“நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்” என்றும் தன்னை சம்பந்தர் சொல்லிக் கொள்கிறார். வேதம் ஓதும் கௌண்டின்ய கோத்திரத்தில் பிறந்தவர் என்று அவரை விளித்து “சீரார் சண்பைக் கவுணியர் தம் தெய்வ மரபிற் திகழ் விளக்கே” என்று வள்ளலார் பாடுகிறார்.
தமிழ், வேதம் இரண்டையுமே தன் இரு கண்களாகவும் போற்றியவர் ஞானசம்பந்தர். மற்ற சைவப் பெருந்தகைகளும் அப்படியே.

தொடரும்...

Friday, June 20, 2008

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 2

பகுதி 1 - இங்கே.

// கேள்வி 4 : வேத காலத்தில் கொண்டாடப்பட்ட பிரதான கடவுளாகிய இந்திரனை, சைவசித்தாந்திகள் எந்த இடத்தில் வைக்கிறார்கள்? அப்படி இந்திரனை அவமதிக்கும் புராணங்கள் வேத வழிபாட்டு முறையிலிருந்து ஏன் மாறிப் போயின? இந்தப் புராணங்களை சைவ சித்தாந்தம் ஒப்புக் கொண்டது ஏன்? //




பதில்: முதலில், இது சைவசித்தாந்தம் என்ற பிரிவு மட்டும் கொண்ட தனி நிலைப்பாடு அல்ல. சைவ,வைஷ்ணவ மதங்கள் வளர்ந்தபோது இந்துமதம் முழுவதிலும் ஏற்பட்ட மாறுதல். புராணங்களுக்கு முந்தைய இதிகாசங்களிலேயே (ராமாயணம், மகாபாரதம்) இந்திரன் பின்னுக்குத் தள்ளப் பட்டு தெய்வ அவதாரங்கள் முன்னிலைப் படுத்தப் படுகின்றனர். அதனால் வேதநெறியை அடியொற்றி எழுந்த மற்ற எல்லா மதங்களையும் செய்ததையே சைவ சித்தாந்திகளும் பின்பற்றியிருக்கின்றனர்.

சொல்லப் போனால் வேத இலக்கியத்திலேயே இந்த விரிவாக்கம் ஆரம்பித்து விடுகிறது. சில சம்ஹிதை மந்திரங்களில் இடி,மின்னல் மழை, இயற்கைக் கடவுளாக இருக்கும் இந்திரன் வேறு சிலவற்றில் “இந்திரன் பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவன், அதனால் தான் அவன் தேவர்கள் அதிபதியானான்” (கேன உபநிஷதம், கடைசிப் பகுதி) என்று கூறப்படுகிறான்.

இது சமயத்தின் அக வளர்ச்சி (internal development). (முதல் பதிலில் குறிப்பிட்டபடி, உண்மையின் ஒரு தளத்திலிருந்து இன்னொன்றுக்குப் போவது). வேதம் vs பிற்கால தேவதைகள் வழிபாடு என்கிற இரட்டை நிலைப்பாடு (dichotomy) தவறான புரிதல் சட்டகம் ; வேதத்தின் அடிப்படையில் எழுந்த அக-விரிவாக்கமே பிற்கால இறைவழிபாட்டின் அடிப்படையாகும்.

இதே லாஜிக்கை தமிழ்மரபுக்கும் பொருத்திப் பாருங்கள் – மருதநிலத் தெய்வமான இந்திரன் சங்ககாலத்திலும் பிரதான தெய்வம், இந்திரவிழா பற்றி சிலப்பதிகாரம் விரிவாகக் கூறும். நெய்தல் நிலத் தெய்வம் வருணனும் இவ்வாறே. பிற்காலத் தமிழகத்தில் இவர்கள் எங்கே போனார்கள்? எனவே, வேத, தமிழ் சமயங்களின் பரிணாம வளர்ச்சி ஒரே திக்கில் தான் இருந்திருக்கிறது, வேறுவேறாக அல்ல.

இந்த அகவளர்ச்சி பற்றி ஸ்ரீஅரவிந்தர் கூறும் ஆழமான கருத்து ஒன்றை இறுதியில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

// கேள்வி 5 : சித்தாந்தம் ஆகமத்திற்கு முன்னுரிமை தருகிறதா? வேதத்திற்கு முன்னுரிமை தருகிறதா? //

பதில்: சந்தேகமே இல்லை, வேதத்திற்குத் தான். இறைவன் வேத உருவானவன் என்று கூறும் நூற்றுக் கணக்கான பாடல்களை திருமுறை முழுவதும் காண்கிறோம் (பார்க்க: திரு. நாகசாமி அவர்களின் கட்டுரை).



மேலும், ஆகமம் என்பது வேதத்தினின்று மாறுபட்டது அல்ல. வேத, வேதாந்த ஞானத்தின் அடிப்படையில் நடைமுறை சமயத்தைக் கட்டமைப்பவையே ஆகமங்கள். அதனால் தான் அவற்றில் தத்துவ விவாதங்கள் பெரிதாக இல்லை. சரியை, கிரியை, யோகம் என்பனவற்றில் அடங்கும் தீட்சை, பூஜைமுறை, ஆசாரம், கோயில் பிரதிஷ்டை, தெய்வ மூர்த்தங்கள், விழாக்கள், விரதங்கள் இவற்றைப் பற்றியே வெகுவாகக் கூறப்படுகிறது. அடிப்படையான கேள்விகளான பிரபஞ்சம், பரம்பொருள், கர்மா, மறுபிறவி, முக்தி ஆகியவற்றைப் பேசும் “ஞான பாதம்” நேரடியாக வேதஞானத்தையே எடுத்துரைக்கிறது.

திருமந்திரத்தில் முதலில் வருவது வேதச் சிறப்பு. அதன்பின் வருவது ஆகமச் சிறப்பு.

“வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.”


சேக்கிழார் பெருமான்,

“மந்திரங்கள் ஆன எல்லாம் அருளிச் செய்து
மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம்

செழு மறையோர்க்கு அருளி” (2164, பெ.பு)

என்கிறார். இறைவனே வேத மந்திரங்களையும் அருளி, அவற்றில் விளையும் ஐயங்களைத் தெளிவிக்கப் பின்னர் ஆகமங்களையும் அருளினான் என்றவாறு. எனவே முன்னுரிமை, பின்னுரிமை போன்ற கேள்விகளுக்கு இடமில்லை.

// கேள்வி 6 : ஆகமமே வேதங்களை அடியொற்றியது என்று ஏற்றுக் கொள்வதானால் வேதாந்தத்தை அத்வைத பரமாக நிறுவி ஸ்தாபித்த ஆதி சங்கரர் ஆகமங்களைத் தமது உரை விளக்கங்களில் ஆதாரங்களாக ஏற்கிறாரா? இல்லையா? //

பதில்: முதலில் ஆகமங்கள் என்று சைவசித்தாந்தத்தில் வழக்கமாகச் சொல்லப் படும் நூற்தொகுதிகள் பற்றிக் கொஞ்சம் சொல்வது அவசியம்.

திருமந்திரம் கூறும் எண்ணிறந்த சைவ ஆகமங்களில் இருபத்தெட்டு பிரசித்தி பெற்றவை. இவை ஒவ்வொன்றிலும் லட்சக் கணக்கான சுலோகங்கள் உள்ளதாக வழக்கு உள்ளது (கரண ஆகமத்தில் ஒரு கோடி!). இவை மிகைக் கூற்றுகள் என்பதில் ஐயமில்லை (அல்லது லட்சம் என்பது வேறு ஒரு சிறிய எண்ணைக் குறிக்கும் குறியீடாகவும் இருக்கலாம்).

சைவாகமங்களின் பட்டியல்

இவற்றில் எந்த ஆகம நூலும் இத்தனை சுலோகங்களுடன் முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றிலும் நூல்வடிவில் கற்கத்தகுமாறு பதிப்பில் உள்ளவை மிகமிகக் குறைவு. பிரசுரிக்கப் பட்ட சில நூல்களும் முழு ஆகமத்தை அல்ல, சில குறிப்பிட்ட பூஜை முறைகளைப் பற்றி மட்டுமே கூறுகின்றன.

ஆகமங்கள் பற்றிய நூல்களின் பட்டியல்

இதில் முக்தாகமம் போன்ற சில நூல்கள் காசியிலிருந்து சம்ஸ்கிருத பண்டிதர்கள் பிரசுரித்து வெளிவந்திருக்கின்றன. எனவே ஆகமங்கள் பற்றிய மரபு, சைவசித்தாந்தத்தில் மட்டுமல்ல, வட இந்திய சைவ சமயப்பிரிவுகளிலும் உள்ளது என்பது புலனாகும்.

வழக்கில் உள்ள ஆகம நூல்களில் உள்ள சுலோகங்களின் அமைப்பு, மொழி இவற்றை வைத்துப் பார்க்கையில் இவற்றில் அனேகமாக எல்லா நூல்களின் காலமும் சங்கரருக்குப் பிற்பட்டது என்பது கண்கூடு.

"ஸர்வ வேதாந்த சித்தாந்த கோசரம் தம் அகோசரம்” (“மனத்திற்கும், வாக்கிற்கும் எட்டாத பொருளை வேதாந்தமும், அவற்றின் அடிப்படையில் வந்த சித்தாந்தங்கள் மூலம் தேடும்..”) என்பது சங்கரர் பிரம்மசூத்திர உரையின் முதல் பாடல்.

ஆகமங்கள் பேசும் விஷயங்கள் பற்றி முன்பே பார்த்தோம். சங்கரரின் தத்துவ விளக்க உரைகளில் இவற்றை மேற்கோள் காட்டுவதற்கான தேவையே எழ வாய்ப்பில்லை. மேலும், வேதாந்தம் என்பது சிந்தனை மற்றும் விவேக ஞானத்தின் அடிப்படையிலான தர்க்க, தத்துவ முறை (speculative and contemplative philosophy). உபநிஷத், பிரம்மசூத்ரம், கீதை ஆகிய மூலநூல்கள் (canon) தவிர்த்து, சங்கரரின் பாஷ்யங்களில் புராணங்கள், ஸ்மிருதிகள், அப்போதிருந்த சமய இலக்கியம் ஆகிய நூல்கள் எந்த விதத்திலும் பிரமாணமாகச் சுட்டப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வேதாந்த தத்துவத்தின் மிகப் பெரிய பலம் இது என்று விவேகானந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.

“சங்கரர் சரி. சைவாகமங்களை பிரமாணமாகச் சுட்டி வேறு ஏதாவது உரைகள் எழுதப் பட்டிருக்கின்றனவா? எந்த நூல்களுக்கு, யாரால் எழுதப் பட்டிருக்கின்றன?

எனக்குத் தெரிந்து சைவ நோக்கில் வேதாந்த நூல்களுக்கு எழுதப்பட்ட ஒரே ஒரு உரை ஸ்ரீகண்டாசாரியார் எழுதிய பிரம்மசூத்திர பாஷ்யம் மட்டுமே. இந்த உரையிலும் ஆகமங்கள் சான்றாகக் கொள்ளப்படவில்லை (ஏனென்றால் ஆகமங்கள் நடைமுறை விளக்கங்கள், பிரமாணங்கள் அல்ல). வேறு ஏதேனும் உரைகள் இருந்து, தாங்கள் அவற்றைப் பற்றிச் சொன்னால், தன்யனாவேன்.

// கேள்வி 7 : வடகலை, தென்கலை என்கிற வைணவ சம்பிரதாய சொல்லாட்சியில் வடக்கு, தெற்கு என்பது என்ன அர்த்தத்தில் கையாளப்படுகிறது? //

பதில்: வேதாந்தத்தின் மூன்று மூலநூல்களுக்கும் ராமானுஜர் எழுதிய உரைகளின் அடிப்படையில் கட்டுக்கோப்பாக உருவாக்கப் பட்ட சித்தாந்தம் ஸ்ரீவைஷ்ணவம்.

தென்கலை சம்பிரதாயம் வேதங்களையோ, வேதாந்தத்தையோ மறுக்கவில்லை, முழுமையாக ஏற்றுக் கொண்டது – அது தான் இங்கு கவனிக்கப் படவேண்டியது. சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் கலந்து அற்புதமான மணிப்பிரவாள நடையை உருவாக்கியதும் தென்கலை சம்பிரதாயம் தான், அதனால் சம்ஸ்கிருத வெறுப்பு அதில் இருக்கிறது என்கிற வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இந்தப் பிரிவினைக்குக் காரணம் சமூக, வரலாற்றுச் சூழல்கள் மட்டுமே. திருமண், சில சடங்குகள் போன்ற புறச்சின்னங்கள் தவிர்த்து, இரு சம்பிரதாயங்களுக்கும் தத்துவ அடிப்படையில் சிறு வித்தியாசம் கூட இல்லை.

// கேள்வி 8 : சிவனை முன்னிறுத்தும் சைவ சித்தாந்தம் தென்னாடுடைய சிவனே போற்றி என்பதில் தென்னாடு என்பது (தெற்கு) எதைக் குறிக்கிறது? //

பதில்: “ தென்னவன் சேரலன் சோழன் சீர்பதங்கள் வரக்கூவாய்” (திருவாசகம், குயிற்பத்து) என்பதில் தெளிவாக தெற்கு என்பது பாண்டி நாட்டைக் குறிக்கிறது. இங்கும் அதையே குறிக்கலாம். அல்லது தென்கலை என்று தமிழ் அழைக்கப் பட்டதால் தமிழ் பேசும் நாடு என்பதாகவும் கொள்ளலாம். தத்துவார்த்தமான பொருளில் தெற்குத் திசை நோக்கி ஞானோபதேசம் செய்யும் தட்சிணாமூர்த்தியையும் குறிப்பதாகக் கொள்ள இடம் இருக்கிறது.

இது “இவன் எங்கூர்க்காரன்யா” (“திருவொற்றியூரா திருவாலவாயா திருவாரூரா” என்று அப்பர் சொல்வது போல) என்பது போன்ற அபிமானத்தில் சொல்லப் பட்டதுவே அன்றி சிவனை ஒரு பிரதேச தெய்வமாக முன்னிறுத்துவதற்காக அல்ல. “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற அடுத்த அடி இதைத் தெளிவாக்குகிறது.

இப்படி ஒரு எண்ணம் வந்துவிடக் கூடாது என்று தான் “பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்றும் அதே திருவாசகத்தில் வருகிறது. இங்கு ஆரியன் என்பதற்கு மேலோன் என்றும் பொருள் கொள்ளலாம், அல்லது ஆரியாவர்த்தம் என்ற வடநாட்டைச் சேர்ந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

பிற்சேர்க்கை:

ஸ்ரீ அரவிந்தர் அருளிய ‘ரிக்வேத அக்நி ஸுக்தங்கள்' (Hymns to the Mystic fire) முன்னுரையில் ஒரு பகுதி. மொழிபெயர்ப்பாளர் கபாலி சாஸ்திரி. SAKSI பதிப்பகம் வெளியீடு -

“ வைதிகத் தேவதைகள் தம் அகக்கருவி காரியங்களை விரிவுறச் செய்தன;வெளிச் சொரூபத்தை மாத்திரம் திரமாய் நிறுத்திக் கொண்டன.; (இங்ஙனம்) உயர்ந்த உத்தேசத்துடன் புதிய தெய்வ கோஷ்டிக்கு இடம் அளித்தன. ஆதலால் அவை பூர்வ சங்கத்தினின்று விருத்தி பெற்றனவும் உலகனைத்தினிலும் பெருந்தொழில் ஏற்றுக்கொண்டனவும் ஆகிய புராணத்தெய்வங்களுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டுயதாயிற்றூ. 'விஷ்ணு' 'ருத்திரன்' 'பிரஹ்மா' வேதத்தில் 'பிருஹஸ்பதி' அல்லது 'பிரஹ்மணஸ்பதி'யினின்று மலர்ந்த 'பிரஹ்மா' 'சிவன்' 'லஷ்மி' 'துர்க்கா' இவ்வாறு இந்தியாவில் தேவதைகளின் மாற்றம் முற்றுப்பெறாமல் குறைப்பட்டது. பண்டைத் தெய்வங்கள் பௌராணிக தேவ கோஷ்டியில் தாழ்ந்த தெய்வங்களாயின.

இதற்குப் பெரும்பான்மை காரணம் யாதெனின், பிற்காலத்திலும் ரிக் வேதம் தப்பி பிழைத்ததே எனல் வேண்டும். ஏனெனில் அதனில் தேவதைகளுக்கு அகத்தொழில்களும் புறத்தொழில்களும் ஏககாலத்தில் இருவகைத் தொழில்களும் அமைந்திருத்தலுடன் வலியுறுத்தப்பட்டுள்ளன. இவ்விதமாக கிரேக்க ரோமானிய தெய்வங்களுடைய ஆதி சாயலைக் காத்து பதித்த பழைய இலக்கிய ஆதாரம் யாதும் இருந்திலது. தெய்வங்களின் இம்மாறுபாடு பண்டைக்காலத்திய இம்மக்களின் பயிற்சிச்சிறப்பான் (பண்பாட்டு மலர்ச்சியான்) ஏற்பட்டதென்பது தெளிவாம்.

அவர்கள் நாகரிகத்தில் விருத்தி அடையுங்கால் மென்மேலும் மனவாழ்வு மிகுந்து உடல்வாழில் அமிழ்தல் குன்றியதால் தம் சமயத்தின் பாலும் தெய்வங்கள் பாலும் மேன்மையான நுண்ணிய உந்நத அம்சங்களைக் காண்டல் அவசியமாயிற்று. அங்ஙனம் நுண்ணிய உந்நத அம்சங்களைக் காண்டல் அவர்தம் மேம்பட்ட மதிநிலைக்கேற்ற கருத்துக்களையும் அக்கறைகளையும் ஆதரித்து அவற்றிற்கு உண்மையான சித்துப் பொருளையோ (அசரீர ஆவிப்பொருளையோ) அல்லது ஒரு திவ்யரூபத்தையோ (விண்ணுலக வடிவத்தையோ) ஆதரவாகவும் ஆதாரமாகவும் கண்டு சாதிப்பது ஆம்.

ஆனால் இவ்வகமுகத் திருப்பத்தைத் தீர்மானித்து ஆழ்த்தும் வேலை பெரும்பான்மையான கூடவாதிகளான மறையோருடையது எனல் வேண்டும். ...வேதரிஷிகள் (மந்த்ர த்ரஷ்டா, கவி) இவகையோர் என்பது பரதகண்டத்தில் பண்டைக்காலம் தொட்டு இதுகாறும் வந்து நிற்கும் ஐதீகம். ...மறை பொருளும் மறையோர் அறிவும் 'வேத ரிக்கு'களில் பொதிந்துளவெனும் ஐதிகம் வேதம் எவளவு பழமையானதோ அவ்வளவு பழமையானதென்பது உண்மை.
மேலே ஒளிந்துள்ள உய்ய்ர் ஞான (சித்து) நிலைகளினின்று 'மந்த்ர'ங்கள் அருளாவேசத்தால் பெறப்பட்டனவென்றும் அவற்றில் இந்தக் 'கூடஞாநம்' அடங்கியுள்ளதென்றும் வேதரிஷிகள் விசுவாசித்தனர். வேதபதங்களின் உண்மைப் பொருளை அறுயக்கூடியவன் தானே தத்துவதரிசி (ரிஷி)யாகவோ கூடவேதியனாகவோ இருத்தல் வேண்டும். ...வேத விளக்கங்கள் குறித்து எழுந்த பல பஷங்களை 'யாஸ்கர்' குறிப்பிடுகிறார். வேள்வி விதிக்கேற்ப வேதஹ்தை விளக்க முற்பட்டோர் வேள்வியர் (யாஜ்ஞிகர்); இதிஹாஸமெனும் புராணக் கதை வரலாறுகளான் வேதவுரை கூறுவர் ஒரு சாரார் (ஐதிஹாஸிகர்) ; இலக்கணிகளும் சொல்லிலக்கணத்து ஈடுபட்டோரும் சொல்லமைப்பைக் கொண்டு வேதவிளக்கம் தேடுவோராவார் (நைருத்தர்); அகமுகமாய் நின்ற யுக்திவாதிகள் ஆத்துமபஷமாய் வெதவிளக்கம் நாடுவர் (அதியாத்துமவாதிகள்)”
தொடரும்....

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 1

போன மாதம், தமிழ்நாட்டில் நன்கறியப் பட்ட ஒரு ஆன்மிகப் பத்திரிகையில் ஒரு கேள்வி- பதில் வந்திருந்தது. அது பற்றிய எனது கீழ்க்காணும் கடிதத்தை பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பினேன்.

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.

தங்கள் இதழில் வழக்கமாக வரும் ஆன்மிக கேள்வி பதில்கள் சிறப்பாக இருக்கின்றன. மே மாத இதழில் வந்த கீழ்க்கண்ட கேள்வி-பதில் பற்றி ஒரு விமர்சனம்.

------------
கேள்வி: சித்தாந்தம் - வேதாந்தம்... விளக்கம் தருக.


பதில்: 'அந்தம்' என்ற சொல்லுக்கு, 'முடிவு' மற்றும் 'குறிக்கோள்' என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு. வேத நூல்களைப் பிரமாணமாகக் கொண்டு, அவை காட்டும் முடிவை ஏற்பது, வேதாந்தம் (வேத அந்தம்- வேதாந்தம்). தன் சித்தத்தின் முடிவுக்கு இசைந்து போகும் பட்சத்தில், வேதப் பிரமாணங்களையும் ஏற்பது அல்லது விடுவது... இந்த தத்துவ நெறிமுறையே சித்தாந்தம். வேதாந்தம் வடக்கின் கொடை; சித்தாந்தம் தெற்கின் கொடை!
--------------


தமிழில் எல்லா உச்சரிப்புகளும் இல்லாத காரணத்தால் Siddha என்பதையும், Chitta என்பதையும் "சித்தம்" என்றே எழுதுகிறோம்.

Siddha = சித்தி (Siddhi) என்கிற இறுதிநிலையை அடைந்தவன்
Chitta = சித்தம், அதாவது எண்ண ஓட்டங்கள் கொண்ட மனம்


சித்தாந்தம் (Siddhanta) என்கிற சம்ஸ்கிருத சொல் Siddhi + anta என்ற சொற்களால் உருவானது. உச்சரிப்புக் குழப்பத்தால் Chitta என்ற சொல்லைக் கொண்டு தவறான பொருள் கூறியிருக்கிறார் விடையளித்தவர். "சித்ததிற்கு இசைந்த வகையில்" என்றால் என்ன - "மனம் போன போக்கில்"?

சித்தாந்தம் என்பதற்கு இறுதியான தர்க்க முடிவுகளை உள்ளடக்கிய சமய தத்துவம் என்று பொருள். பல இடங்களில் சமயம் தவிர்த்த அறிவியலைக் குறிக்கவும் இச்சொல் பயன்டும்: ஜோதிஷ சித்தாந்தம், ரஸாயன சித்தாந்தம், கணித சித்தாந்தம் போல. தமிழ்ச் சூழலில் பொதுவாக "சைவ சித்தாந்தம்" என்கிற சைவ சமயப் பிரிவைக் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

வேதாந்தம் என்பதற்கு வேதத்தின், மெய்அறிவின் எல்லை என்பது பொருள். இந்து தத்துவங்கள் எல்லாவற்றின் உச்சம், அறுதி நிலை, பிரமாணம், வேதாந்தம் தான். வேதாந்தம் என்கிற தத்துவ அமைப்பின் மீது தான் சைவம், வைணம், சாக்தம், கௌமாரம் ஆகிய எல்லா சமயப் பிரிவுகளும் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. அதனால் "வேதப் பிரமாணத்தை விடுவது" என்ற பேச்சிற்கே இந்த சமயப் பிரிவுகள் எவற்றிலும் இடமில்லை. அவை வேதாந்தத்திற்கு முரண்பட்டவை அல்ல.

"வேதாந்த, சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே" என்று இந்த ஒருமையைத் தான் தாயுமானவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், வடக்கு, தெற்கு என்று இந்தத் தத்துவக் கொடைகளைப் பிரிப்பதும் தவறு. வேதாந்த தத்துவத்தை நாடெங்கும் நிலைநாட்டிய ஆதிசங்கரர் தென்னாட்டில் தான் பிறந்தார். பின்னர் விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்கிற வேதாந்தப் பிரிவுகளை உருவாக்கிய ஆசாரியார்களும் தென்னாட்டில் பிறந்தவர்களே.

அதே போன்று சைவசித்தாந்தமும் சரி, சித்தர்கள் மரபும் சரி, பாரதம் முழுவதும் வேர்கள் கொண்டது. இமயமலையில் இருந்து வந்த சிவயோகி ஒருவரே மூலன் என்ற இடையன் உடல்புகுந்து திருமூலர் ஆகி திருமந்திரம் என்ற தத்துவக் களஞ்சியத்தை அளித்தார் என்று பெரியபுராணம் கூறும். கோரக்கர் (கோரக் நாத்) உள்ளிட்ட தமிழ்நாட்டு 18 சித்தர்கள் போன்று வடபாரதம் முழுவதும் நவநாத் (Navnath) என்னும் 9 சித்தர்கள் பற்றிய பழைய மரபு உள்ளது.

பத்திரிகைகளில் சுருக்கமாக பதில் எழுதவேண்டும் என்கிற கட்டுப்பாடு உள்ளதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவை தவறாக இருக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதுவும், இணையம் என்ற தகவல் களஞ்சியம் நம் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கும்போது என்ன கவலை?

பிற்சேர்க்கையாக: Cologne Digital Sanskrit Lexicon சம்ஸ்கிருத அகராதியிலிருந்து Vedanta, Siddhanta ஆகிய சொற்களின் பொருள்.

அன்புடன்,
ஜடாயு


இந்தக் கடிதம் அனுப்பி சில நாட்களில் சம்பந்தப் பட்ட சைவ, தமிழ் அறிஞரிடமிருந்து 21 கேள்விகளுடன் ஒரு கடிதம் வந்தது, அவற்றுக்கு உங்களுக்குள்ளேயே விடை தேடுங்கள் என்ற கோரிக்கையுடன். அவருக்கு நான் எழுதிய பதில்களை, அந்த பதில் கடிதத்தில் கூறியவாறே தமிழ் இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சாய்வுக் கோட்டுக் குறிக்குள் (//) இருப்பவை அவரது வினாக்கள். பின் வருபவை எனது பதில்கள்.

// அன்புடையீர், வணக்கம். தங்கள் சம்ப்ரதயமான பாராட்டுக்கு என் நிஜமான நன்றி. //

அன்புள்ள ஐயா,

வணக்கம். அது சம்பிரதாயமான பாராட்டுதல் அல்ல, இந்து தர்மத்தையும், ஆன்மிகத்தையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் தங்களைப் போன்ற ஆன்மிகவாதி ஒருவரிடமும் மிக்க மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். அந்தப் பாராட்டு ஆத்மார்த்தமானது தான். ஒரு கேள்வி பதிலை வைத்து மட்டும் மதிப்பீடுகளை உருவாக்கும் அளவுக்கு அடியேன் மேம்போக்கானவன் அல்ல என்று சொல்லிக்கொள்ள விழைகிறேன்.
// கடின தத்துவ உண்மைத் தேடல் உலகில் மிகக் குறைவு. அது தங்களிடம் இருப்பதாக அறிகிறேன். அதற்காக நன்றி மலர்கள். தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வேத பிரமாணத்தை விடுவது என்ற பேச்சுக்கே இந்த சமய பிரிவுகள் எவற்றிலும் இடமில்லை என்பது ஓரளவு உண்மை. ஆனால் முழு உண்மையல்ல. எப்படியாவது வேதத்தை மட்டுமே உயர்த்தி பிடிக்க நினைக்கும் வெறி உள்ளவர்கள் அப்படி நினைக்கிறார்கள். விருப்பு வெறுப்பின்றி ஆய்கிறவர்கள் பல நூறு குருமார்களிடம் பழகி பாரதம் முழுவதும் பயணித்து ஓரம் சாராது உள்ளொளியில் உண்மை கண்டவர்கள் இவ்வாறு பேச முடியாது. //

மிக்க நன்றி. என்னிடம் வெறி எதுவும் இல்லை என்று நம்புகிறேன். தாங்கள் கூறுகின்ற உயர் தகுதிகள் எல்லாம் கண்டிப்பாகக் கிடையாது. என் அலுவல் மற்றும் குடும்பப் பணிகளுக்கிடையில் ஏதோ கொஞ்சம் ஆன்மிக, தத்துவ ஈடுபாடும், தமிழார்வமும் இறைவன் அருளால் கிட்டியிருக்கிறது.

// தங்களுக்கு நான் விளக்கமளிப்பதைவிட கீழ்க்கண்ட வினாக்களுக்குத் தாங்கள் விடை தேடினால், என் பதிலின் உண்மைச் சுடர் உங்களுக்கு உரைக்கும்.//

தங்கள் பல்வேறு பணிகளுக்கிடையில் சிரமமும், நேரமும் எடுத்துக் கொண்டு, ஒரு வாசகனைப் பொருட்படுத்தி இத்தனை கேள்விகளைத் தாங்கள் அனுப்பியிருப்பது வியக்க வைக்கிறது. மிக்க நன்றி.

அவற்றில் அனேகமாக எல்லாமே leading questions ஆக இருக்கின்றன என்று நினைக்கிறேன். அதாவது தாங்கள் விரும்பும் விடையை நோக்கி இட்டுச் செல்வது போல. எனக்குத் தோன்றும் விடைகளைக் கீழே எழுதியிருக்கிறேன். தங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

இந்த அருமையான தத்துவ உரையாடல் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால் இந்தக் கேள்விகளையும், பதில்களையும் இண்டர்நெட் வலைப் பக்கங்களிலும் பதிப்பிக்கலாமென்றிருக்கிறேன்.

கேள்விகளே வேள்விகள் ஆகும்போது, அங்கே புதிய உபநிஷதம் பிறக்கிறது.

// கேள்வி 1 : வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வங்கள் எத்தனை? தெய்வம் பற்றி வேதத்தின் கொள்கை என்ன? இதிலிருந்து வேதாந்தத்தின் கொள்கை ஏன் மாறியது? இப்படிப்பட்ட வேதாந்த முடிவை சைவ சித்தாந்தம் ஏற்றுக் கொண்டுவிட்டதா? //

பதில்: வேதம் கூறும் தெய்வம் ஒன்றே. “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி” (சத்தியம் ஒன்றே; முனிவோர் அதைப் பலவாறாகக் கூறுகின்றனர்) என்று விவேகானந்தர் சிகாகோவில் மேற்கோள் காட்டிய அமுதவாசகம் இந்திரனையும், அக்னியையும், யமனையும் துதிக்கும் ஒரு ரிக்வேத சூக்தத்தில் தான் வருகிறது.

பரம்பொருள் என்றால் என்ன என்று பிரம்ம சூத்ரம் முதல் கீதை வரை கூறும் விளக்கங்கள் அனைத்தின் மூலமும் வேதத்தில் உள்ளது. “சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம” “அஸ்தி, ப்ரீதி, பாதி” (அது என்றும் இருப்பது, அன்பு வடிவானது, ஒளிப்பொருள்) ஆகிய வாசகங்கள் கர்மகாண்டம் எனப்படும் சம்ஹிதை மந்திரங்களிலேயே உள்ளன.



“ஹிந்து, பொய்யிலிருந்து உண்மைக்கல்ல, உண்மையின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குச் செல்கிறான்” என்று விவேகானந்தர் கூறுவதை எண்ணிப் பார்க்கிறேன். மழையிலும், காற்றிலும், இடியிலும், இருளிலும், ஒளியிலும் தெய்வ சக்தியைக் கண்டு போற்றிய ரிஷிகள் அதனூடாகவே இவை அனைத்தின் உள்ளும் உறையும் பொருள் என்பதை அனுபூதியில் கண்டு உணர்ந்தனர்.

“வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்” என்ற எனது பழைய கட்டுரையில் இருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்.

“நான்கு வேதங்களிலும் சம்ஹிதா (துதிப் பாடல்கள்), பிராமணம் (யாக செயல்முறைகள்), ஆரண்யகம் (விளக்கங்கள்), உபநிஷத் (தத்துவம்) என்ற எல்லா பகுதிகளும் உள்ளன. மந்திரங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில் உதித்த காலத்தில் இந்த எல்லாப் பகுதிகளிலும் உள்ள பாடல்கள் ஒன்று கலந்தே வந்தன. இத்தகைய பகுப்புகள் பின்னால் வேதவியாசரால் உருவாக்கப் பட்டவை.

உபநிஷதம் ஓரளவு படித்தவர்கள் கூட அது வேத கர்மகாண்டத்தினின்றும் வேறானது அல்ல, மாறாக அதன் தொடர்ச்சி, வளர்ச்சி, முதிர்ச்சி என்ற முடிவுக்குத் தான் வரமுடியும். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் இருவருமே இக்கருத்தைக் கூறியுள்ளனர். சுவாமி விவேகானந்தர் வேத சம்ஹிதைப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதியில் உள்ள வாசகத்தினை சுழுமுனைக்கு குறியீடாக தமது இறுதி நாளில் சீடரிடம் பேசினார். ஸ்ரீ அரவிந்தர் இன்னும் ஒருபடி மேல் சென்று சம்ஹிதை மந்திரங்களில் எல்லாம் கூட அடிநாதமாக இருப்பது உபநிஷதங்களின் வேதாந்தம் தான் என்கிற கருத்தை மிக அழுத்தமாகக் கூறுகிறார். இந்த கருத்து அடங்கிய அவரது “Hymns to the Mystic fire” என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது. உதாரணமாக, உபநிடதத்திலேயே மிகவும் அழகான இரட்டைப் பறவை படிமம்…..”

// கேள்வி 2 : சித்தாந்தமும் வேத மூலத்தையே கொண்டது உண்மை என்றால் வேதாந்தமே போதுமானது. சித்தாந்தம் என்ற ஒரு பிரிவு தோன்ற வேண்டிய அவசியம் என்ன?//

பதில்: நல்ல கேள்வி. சித்தாந்தம் மட்டுமல்ல, ஏன் இத்தனை சமயப் பிரிவுகள் - சைதன்யர், துகாராம், கபீர்தாசர், வள்ளலார், வல்லாபாசாரியார், ராமானந்தர், பசவேஸ்வரர் என்று ஒவ்வொரு அருளாளர்களும் தனி முத்திரை பதிக்கும் வகையில் ஒவ்வொரு பிரதேசத்திலும் வண்ணமயமான, ஒவ்வொரு பக்தி மரபுகள், சமய மரபுகள் பாரதத்தில், இந்து மதத்தில் தோன்ற வேண்டும்? காரணம் மோதல், முரண்பாடு அல்ல; இதைப் புரிந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

செமிட்டிக் (semitic) மதங்கள் போன்று “இதோ வந்துவிட்டார் தேவகுமாரன், கடவுள் அனுப்பிய தேவதூதர், இவர் சொல்வது எல்லாம் உண்மை, ஒரே வழியும், சத்தியமும், ஜீவனும்” என்றோ “உலகத்தின் *இறுதி* இறைத்தூதர், உலகம் முழுதுக்குமான ஒரே புனிதநூல்” என்றோ திடீரென்று ஒரு குழுத் தலைவர் (cult leader) தோன்றி தன் சமயத்தை நிறுவியதோ, அவரை எதிர்த்தவர்களை வன்முறை, யுத்தம், கொலைகள் மூலம் ஒழித்துக் கட்டி, எல்லாரையும் ஒட்டுமொத்தமாக அந்த மதத்தில் வாள்முனையில் சேரவைத்ததோ பாரத தேசத்தில் நடைபெறவில்லை. மதம் என்ற போர்வையில் ஆதிக்கம், அரசாட்சி, அதிகாரப் பரவல், ஆள்சேர்ப்பு இவற்றைத் தான் உலகெங்கும் இந்த மார்க்கங்கள் நிகழ்த்தின, நிகழ்த்தி வருகின்றன. அவ்வப்போது இந்த நிறுவன மத அமைப்புகளில், சில உண்மையான ஆன்மிகவாதிகளும் தோன்றுகிறார்கள், மறுப்பதற்கில்லை.

ஆனால், இந்திய கலாசாரத்தின் நடைமுறைப் படி, சமய மரபுகளை உருவாக்குபவரும், அதைப் பின்பற்றுபவர்களும் தங்கள் சமயத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், ஆள் பலம் அல்ல, அதற்குப் பின் ஆழ்ந்த அனுபூதி, அந்த அனுபூதி பெற்ற ஞானியர் விளக்கும் உறுதியான தத்துவம் இவை இருக்க வேண்டும் என்பது அவசியமாகக் கருதப் பட்டது. ஏனெனில் இந்த சமயங்கள் ஒரு கூட்டத்துடன் பேசவில்லை, ஆன்மிக தாகம் கொண்ட ஒவ்வொரு தனிமனிதனிடமும் அவை பேசின.



தனிமனிதனிடமே இந்த சமயங்கள் பேசியதால், மனிதர்களின் மனப்பாங்கிற்கேற்ப வேறுவேறு விதமான சமய வழிபாட்டு முறைகள் இயல்பாகவே எழுந்தன. இந்த மட்டற்ற சுதந்திரத்தால் பல போலி, ஏமாற்று, துர்மதங்களும் தோன்றின. ஆனால் உண்மையான ஆன்மிகத் தேடல் இல்லாமல் வன்முறைச் சடங்குகள், வக்கிரங்களை முன்வைத்துப் பிழைத்த காபாலிகம், காளாமுகம், பைரவம், வாமமார்க்கம் போன்ற பயங்கர cult மதத்தவர்கள், வேதாந்த தத்துவத்தின் ஒளியால் கனன்ற சைவ, வைஷ்ணவ சமயங்களின் தத்துவ தர்க்கத்திற்கு முன் மண்டியிட்டு தீய ஆசாரங்களை விட்டொழித்தனர். இந்த சன்மார்க்கங்களில் இணைந்தும் விட்டனர்.

உபதேசங்கள் தெளிவாகவும், கட்டுக் கோப்பாகவும் இருக்கவேண்டியிருந்ததால், சமயப் பிரிவுகள் மூலதத்துவத்தை அடித்தளமாகக் கொண்டு தங்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட ஒரு தத்துவ அமைப்பை உருவாக்கிக் கொண்டன. இந்தத் தத்துவங்கள் வெறும் நூலறிவால் மட்டும் அல்ல, அனுபூதியையும் மையமாகக் கொண்டவை என்பதால், அந்த சமயப் பிரிவின் முக்கியமான கருவே (உதாரணமாக, பக்தி, சரணாகதி தத்துவம், அடியார்களைப் போற்றுதல்) மையப் படுத்தப் பட்டது, அதனால் தான் எல்லா சமயப் பிரிவுகளிலும், எல்லாவிதமான தத்துவங்களும் இல்லை.

சைவசித்தாந்த சாத்திரங்களே மிகத் தெளிவாக தாங்கள் சாரும் நெறி அத்வைதம் என்று ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

“பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்-- அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
அத்துவிதம் என்று அறையும் ஆங்கு.”


“அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே
அத்திவிதி அன்பின் தொழு!”


-சிவஞானபோதம்


சைவ, வைணவ நெறிகளை உருவாக்கியவர்கள் எவரும், செமிட்டிக் மதஸ்தாபகர்கள் போன்று “நாங்கள் ஒரு புதிய மதத்தை உருவாக்குகிறோம்” என்று கூவவில்லை. “வாழையடி வாழையென வந்த திருக்கூட்டமதில்” தங்களை இணைத்துக் கொண்டனர். “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என்று திருவாசகம் சொன்னது.

“வேத பிரமாணம்” என்று நாம் கூறுவது உண்மையில் இந்தத் தத்துவ வேர்களுடன் ஒவ்வொரு இந்து சமயப் பிரிவும் தன்னை ஆழப் பிணைத்துக் கொள்ளுவதைத் தான்; வேதம் என்கிற ஒரு பழைய நூலில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் அதன் நேரடியான அர்த்தத்தில் அப்படியே ஏற்றுக் கொள்வதை அல்ல. அதனால் தான் ஒரே விஷயத்தைப் பற்றிய பல interpretations (வியாக்கினங்கள்) இந்து மதத்தில் உள்ளன. ஒரே கீதைக்கு இத்தனை பேர் உரை எழுதுகிறார்கள். மாறாக, செமிட்டிக் மதங்களில் புனித நூல்களின் வாசகங்கள் நேரடிப் பொருள் கொள்ளப் படுகின்றன, அவற்றில் interpretation என்ற இந்த விஷயம் இல்லை. அதனால் தான் அவை பல சமயங்களில் வெறுப்பையும், வன்முறையையும் வளர்க்கின்றன. உதாரணமாக, ஜிஹாத் என்பது மற்ற மதத்தவர்களுடன் சண்டை போட்டு அவர்களைக் கொல்வது அல்ல, அது உள்மனதில் நிகழும் ஆன்மிக, மனப்போராட்டம் என்று இஸ்லாமிய மௌல்விகளிடம் சொல்லிப் பாருங்கள். எந்த இஸ்லாமிய அறிஞரும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் (தீவிரவாதம் தலைவிரித்து ஆடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்). ஆனால் ஒரு இந்து மனத்திற்கு இத்தகைய விளக்கங்கள் இயல்பாகவே தோன்றும்..

எங்கெங்கோ போய்விட்டேன்..

// கேள்வி 3 : வேதத்தில் சிவலிங்க வழிபாடு பேசப்படுகிறதா? சிவலிங்க வழிபாடு வேதத்திற்கு முந்தியதா? பிந்தையதா? வேதப் பிராமணர்கள் ஸ்ரீ ருத்ரத்தில் குறிக்கும் ருத்ரனே சிவன் என்பதை சித்தாந்திகள் ஒப்புக்கொள்கிறார்களா? மறுக்கிறார்களா? //

பதில்:
(அ) சந்தேகமில்லாமல், கண்டிப்பாகப் பேசப் படுகிறது. “லிங்கம்” என்கிற சம்ஸ்கிருதச் சொல் முதன்முதலில் வேத மந்திரங்களில் தான் வருகிறது. இமயம் முதல் குமரி வரை எல்லா சிவபூஜைகளிலும் தவறாமல் இடம்பெறும் “நிதனபதயே நம:” என்று தொடங்கும் வேத அர்ச்சனையில் “ஊர்த்வாய நம:, ஊர்த்வலிங்காய நம:” முதல் “சிவாய நம: சிவலிங்காய நம:” “பரமாய நம: பரமலிங்காய நம:” வரை லிங்கரூபங்கள் துதிக்கப் படுகின்றன. இம்மந்திரமும், “ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி” என்று தொடங்கி ஐந்து முகங்களுக்குமான மூலமந்திரங்கள் மற்றும் சிவபூஜையில் ஓதும் சகல மந்திரங்களும் யஜுர்வேதத்தின் ஒரு பகுதியான “தைத்திரிய சம்ஹிதா”வில் இருந்தே தொகுக்கப் பட்டவை.



சிவலிங்க வழிபாட்டின் மூலம் வேத காலத்தில் வேள்விகளில் வணங்கப் பட்ட யூபஸ்தம்பம் (கம்பம்). சுவாமி விவேகானந்தர் மிகத் தெளிவாக இதைக் கூறியுள்ளார் –

“The Swami said that the worship of the Shiva-Linga originated from the famous hymn in the Atharva-Veda Samhit sung in praise of the Yupa-Stambha, the sacrificial post. In that hymn a description is found of the beginningless and endless Stambha or Skambha, and it is shown that the said Skambha is put in place of the eternal Brahman. As afterwards the Yajna (sacrificial) fire, its smoke, ashes, and flames, the Soma plant, and the ox that used to carry on its back the wood for the Vedic sacrifice gave place to the conceptions of the brightness of Shiva's body, his tawny matted-hair, his blue throat, and the riding on the bull of the Shiva, and so on — just so, the Yupa-Skambha gave place in time to the Shiva-Linga, and was deified to the high Devahood of Shri Shankara. In the Atharva-Veda Samhita, the sacrificial cakes are also extolled along with the attributes of the Brahman.

In the Linga Purna, the same hymn is expanded in the shape of stories, meant to establish the glory of the great Stambha and the superiority of Mahdeva.”

From: Complete-Works / Volume 4 / Translations: Prose / The Paris congress

சிவலிங்கம் பழங்குடி ஆண்குறி வழிபாட்டினின்றும் பிறந்தது என்று மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் பலர் கூறியதையும் இதே உரையில் சுவாமிஜி கடுமையாக மறுக்கிறார். பின்னாளில் வாமாசார தாந்திரீகம் ஓங்கியபோது ஆத்மா, ஜீவன், பிரம்மம் என்று எல்லா சமயக் குறியீடுகளுமே ஆண்-பெண் உறவை மையமாக வைத்து விளக்கப்பட்டபோது சிவலிங்கம் பற்றிய உருவகம் இவ்வாறு மாறியதே தவிர அதன் மூலம் அதுவல்ல என்றும் வேறு ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

(ஆ) வேதத்தில் இல்லாத, ஆனால் அதற்கு முந்தைய வழிபாட்டு முறை என்றால், அதற்கு ஆதாரம் என்ன? இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப் பழைய நூல் ரிக்வேதம் என்று அனைத்து வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். சிவலிங்க வழிபாடு அதற்கும் முந்தையது என்றால் எந்த நூலில் இருக்கிறது?

(இ) “சிவன் வேறு, ருத்ரன் வேறு; சித்தாந்திகள் ஸ்ரீருத்ரத்தை மறுக்கிறார்கள்” – என்பவை சிறிதும் ஆதாரமற்ற கூற்றுகள்.

சைவத்தின் ஆணிவேரான “நம: சிவாய” என்கிற பஞ்சாட்சரத்தையே தன்னுள் அடக்கிய மகா மந்திரம் அல்லவா ஸ்ரீருத்ரம்!

“வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நாமம் நமச்சிவாயவே” என்று சம்பந்தர் பாடியதன் தாத்பர்யம் என்ன? “வேதங்களின் நடுநாயகமான யஜுர்வேதத்தின் நடுவில், நாலாம் காண்டத்தில் உள்ள ஸ்ரீருத்ரம் என்கிற துதியில், மையமாக உள்ள ஏழாவது அனுவாகத்தில் “நம: சிவாய ச, சிவதராய ச” என்கிற இந்த மாமந்திரம் வேதரத்தினம் போன்று வைக்கப் பட்டுள்ளது” என்று முழுதுணர்ந்த சைவர்கள் உணர்வர். காஞ்சி மகாஸ்வாமிகள், வாரியார் ஸ்வாமிகள் இருவருமே இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் உருத்திர பசுபதி நாயனார். ருத்ரம் என்கிற மந்திரத்தை தினம்தோறும் ஓதி அதனாலேயே முக்தியடைந்தார் இவர் என்று பெரியபுராணம் கூறுகிறது.

“தள்ளுவெண்திரைக் கங்கைநீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்”


என்பது சேக்கிழார் வாக்கு.

வேத பிராமணர்கள் மட்டுமே இந்த மகாமந்திரத்தைப் போற்றினர் என்பதும் சரியன்று. கார்காத்த வேளாளர் நற்குடியில் அவதரித்த அப்பர் பெருமான் இந்த உத்தமமான துதியின் சாரத்தையே நின்ற திருத் தாண்டகமாகப் பாடினார். இந்தத் தாண்டகம் ஸ்ரீருத்ரத்தின் நேரடி மொழிபெயர்ப்பு போலவே அமைவது சிறப்பு. இது பற்றி சைவ, தமிழ், வரலாற்று அறிஞரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் இரா. நாகசாமி அவர்கள் எழுதியிருக்கும் இந்த அருமையான கட்டுரையைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.

Vedic Nature of Appar’s Saivism

இந்தக் கட்டுரையின் தொடக்க வரிகள் – “The Saivite saints of Tamil country followed the Vaidika Saiva School, which later on came to be designated as the Saiva Siddhanta Marga. Innumerable references to the Vedas, Vedangas, and the Vedantic concepts in the Tevaram hymns, especially of Appar and Sambandar attest that they chose the Vedic path.."

(தொடரும்)

Monday, June 16, 2008

அஸ்ஸாம் அரக்கனைத் தமிழனாக்கும் கருநாநிதியின் அபத்த உளறல்கள்

கடலூர்: தீபாவளி தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, தமிழை ஏற்றி வைக்கும் நாளான பொங்கலை கொண்டாடுங்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்" -

- தட்ஸ்தமிழ்.காம் செய்தி

தமிழகத்தின் ஒரு பழைய இருண்டகாலத்தில், திராவிட இனவெறிக் கும்பல்கள் உருவாக்கிய ஒரு கேவலமான பொய்ப் பிரசார கட்டுக் கதையை, தேவையில்லாமல் 2008ம் ஆண்டில் தமிழக முதல்வர் கருநாநிதி வாந்தி எடுத்திருக்கிறார்.

நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்ததும், அப்போது அவன் தீமை அழிந்த நாளாக தன் மரணதினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டதுமான தீபாவளிப் பண்டிகை தொடர்பான புராணக் கதை எல்லாருக்கும் தெரியும்.

யார் இந்த நரகாசுரன்?

மகாபாரதத்தின் படி, இன்று அஸ்ஸாம் என்று இன்று அழைக்கப் படும் காமரூப தேசத்தில் ப்ராக்ஜோதிஷபுரம் என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த கொடுங்கோல் மன்னன். புராணங்களின் படி இவன் பூமிதேவியின் மகன் (சிலவற்றில் ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் மகன்). 16,000 பெண்களை இவன் சிறைப்பிடித்து வைத்தது, மக்களைக் கொடுமைப் படுத்தியது, பின்னர் சத்யபாமா தேரோட்ட கண்ணன் போர்செய்து நரகாசுரனைக் கொன்றது, தர்மவானான அவனது மகன் பகதத்தனுக்குப் பட்டம் சூட்டியது எல்லாம் புராணங்களில், மகாபாரதத்தில் வருகிறது. இந்த பகத்தன் பின்னர் பாரதப் போரில் கௌரவர் பக்கம் வீரப் போர் புரிகிறான்.

எந்த ஒரு புராணத்திலும், இதிகாசத்திலும் தமிழகத்திற்கும் நரகாசுரனுக்கும் எந்தத் தொடர்பும் சொல்லப் படவில்லை. பழந்தமிழ் நூல்களில் எதிலாவது நரகாசுரனைப் பற்றி ஏதாவது கூறப் பட்டுள்ளதா? அப்பேர்ப்பட்ட மறத்தமிழன் நரகாசுரனைப் பற்றி ஏதாவது கல்வெட்டு, கில்வெட்டு இருக்கிறதா? ம்ஹூம்.

பத்தாம் நூற்றாண்டில் திருவஞ்சைக் களத்தில் வாழ்ந்த, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப் பெருமாள், தனது "முகுந்த மாலை" என்ற சம்ஸ்கிருத நூலில் "நரகே வா நரகாந்தக ப்ரகாமம்" (நரகனை அழித்தவனே, நான் நரகத்தில் இருந்தாலும், உன்னை மறவாமலிருக்க வேண்டும்) என்று பாடும் ஒரு வரி இருக்கிறது. தீபாவளி தோறும் வரும் எண்ணெய்க் குளி தவிர்த்து, பழந்தமிழகத்திற்கும், நரகாசுரனுக்கும் உள்ள ஸ்நானப்ராப்தி இவ்வளவு தான்.

பின் எந்த ஆதாரத்தில், ஒரு மாநில முதல்வர் இப்படி ஒரு வெறுப்பைத் தூண்டும், துவேஷத்தை வளர்க்கும் பச்சைப் பொய்யைக் கூறுகிறார்?

மக்களே கேட்டுக் கொள்ளுங்கள் - தமிழனின் கொலையைக் கொண்டாடும் மன்மோகன் சிங் என்ற ஒருவர் தான் உங்களுக்கு பிரதமராக இருக்கிறார்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், தமிழர்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான இந்தியர்கள் தமிழன் கொலை செய்யப் பட்ட ஒரு நாளைக் கொண்டாடி வருகின்றனர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லா நாடுகளிலும் தமிழன் கொலையுண்டதைக் கொண்டாடி வருகின்றனர் ! ஐயகோ, ஆனாலும் தமிழனுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கக் கூடாது.

மேலும், நரகாசுர வதம் என்பது தீபாவளி என்கிற மாபெரும் பண்டிகை பற்றிய மரபுகளில் ஒன்று தான்.

இறைவனை ஒளிதரும் ஜோதியாக வழிபடுதல், கோவர்த்தன பூஜை, கார்கால அமாவாசையில் காளி பூஜை (வங்கத்தில்), பாற்கடலில் இருந்து மகாலக்ஷ்மி உதயம், ராமர் அயோத்தி திரும்பிய நாள் என்று ஏராளமான சிறப்புக்கள் இப்பண்டிகைக்கு உண்டு. ஜைனர்களுக்கும், சீக்கியர்களுக்கும் கூட முக்கியமான பண்டிகை.



இதே உரையில் "அப்படி என்றால் அது பொங்கல் அல்ல, தமிழனுடைய விழா அல்ல. ஆரியனுடைய மகர சங்கராந்தி. எப்படி வந்தது மகர சங்கராந்தி?"
என்று கேட்டு மகர சங்கிராந்தி என்ற பெயரிலும் அழைக்கப் படும் பொங்கல் என்ற உன்னதமான இந்துப் பண்டிகையையும் இழிவு செய்திருக்கிறார்



மேலும், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல, "தமிழா உனக்கு ஆண்டுக் கணக்கே இல்லை என்றால் இதை விட கேவலம் இருக்க முடியுமா?. எப்படி பிறந்து நமக்கு ஆண்டு?. மகா விஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 பிள்ளைகள் அல்லவா நமக்கு ஆண்டாக கூறப்பட்டுள்ளது" என்றும் பிதற்றியிருக்கிறார் கருநா.

"மாயை- காலத்தின் தன்மை ஆகியவற்றைக் காட்டும் -இன்றைய நவீன அறிவியல் புனைவின் அனைத்து தன்மைகளையும் கொண்Î Time-consciousness-illusion ஆகியவற்றைக் காட்டும் தொன்மம் இது." என்று அரவிந்தன் நீலகண்டன் அற்புதமாக விளக்கும் இந்தப் புராணக் கதையின் கவித்துவம் கலைஞர், கவிஞர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஒருவருக்குப் புரியாமலிருக்குமா? பின் ஏன் இப்படி உளறுகிறார்?

பாரத நாட்டின் தேசிய பண்டிகைகளான தீபாவளி, மகர சங்கிராந்தி என்கிற பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு ஆகியவற்றைப் பற்றி பொய்யைப் பரப்பி, மக்களிடையே துவேஷத்தையும், வெறுப்பையும் வளர்க்கும் முதல்வர் கருநாநிதி மீது தேசவிராத சட்டத்தின் கீழ் வழக்குப் போடவேண்டும்.

Saturday, June 14, 2008

பரதநாட்டியமும், இஸ்லாமிய குருட்டு வெறியும்

செய்தி:

http://www.malaysia-today.net/2008/content/view/8420/1/

Nataraja Statue Banned from Malaysian Bharatanatyam Dance Performance

IPOH, MALAYSIA, June 8, 2008: At the beginning of every Bharatanatyam performance, artistes of this famous South Indian classical dance pay obeisance on stage to a statue of Lord Nataraja. However, on Monday night, a group of Bharatanatyam dancers performed before a full gallery at the Taman Budaya public auditorium without the customary on-stage prayer to Lord Nataraja.

This was because the owner of the venue, the state Unity, Culture, Arts and Heritage Department, permitted the dance on condition they did not install a statue or portrait of the deity and offer their prayers on stage. This is not the first time that dancers from the three Bharatanatyam schools of Nrityakalanjali, Natyakalamandir and Anandanarthana Choodamani in the state had performed at the venue. The department said the organizers were informed beforehand of the conditions and chose to go ahead with the performance.

The department's public relations officer, Shaliza Azlin, said the organizers had agreed that the prayers would be performed backstage to respect the sensitivities of the audience, who also comprised Chinese and Malays. "We did not stop them from doing the puja. We did not want them to do it in public."
Shaliza said the same conditions had been imposed on other cultural groups.

Perak state assembly speaker V. Sivakumar, who was at the performance, said: "The prayer is very much part of the cultural performance and should have been allowed on the stage." He said he would bring the matter up with the state government as well as his party so that such "intolerant behavior" could be nipped in the bud before it became widespread.

இது இந்த மலேசிய இஸ்லாமியர்களின் முழு அறியாமையையும், குருட்டு வெறித்தனத்தையையுமே காட்டுகிறது.

பரத நாட்டியம் என்பதே ஒரு இந்து வழிபாடு, இந்து ஆன்மிக, கலை வெளிப்பாடு தான். பிரபஞ்சத்தில் எங்கும் உறையும் பரம்பொருளை, அதன் உருவான தெய்வாம்சங்களை மனத்தில் இருத்தி, அந்த மனத்தில் பொங்கும் பாவங்களை அபிநயத்திலும், முத்திரைகளிலும் வெளிப்படுத்துவது தான் பரதநாட்டியம்.

பரத ரிஷியின் நாட்டிய சாஸ்திரம் கூறுகிறது -
யதோ ஹஸ்த: ததோ த்ருஷ்டி: யதோ த்ருஷ்டி: ததோ மன:
யதோ மன: ததோ பாவ: (BhaavaH), யதோ பாவ: ததோ ரஸ:

கரங்கள் செல்லும் வழி பார்வை, பார்வை செல்லும் வழி மனம் மனம் செல்லும் வழி பாவம் (Bhaavam), பாவம் செல்லும் வழி ரசம்.

இந்த ரசம் என்பது ஒரு தூய, ஆத்மானுபவ உணர்ச்சி. "ரஸோ வை ஸ:" (அந்தப் பரம்பொருள் உணர்வின் சாரமே ரசம்) என்று உபநிஷத் கூறுகிறது. சிற்பம், இசை, நடனம் ஆகிய இந்து செவ்வியல் கலைகள் அனைத்திலும் அடிப்படையாக உள்ள கோட்பாடு இது.

எனவே பரதத்தில் வரும் பாடல்கள், அபிநயங்கள் அனைத்தும் இறைவனுக்கு அர்ப்பணமாகத் தான் செய்யப் படுகின்றன, சொல்லப் போனால் உன்னத நாட்டிய அனுபவம் என்பது அந்த இறைத் தன்மையுடன் ஒன்றிவிடுவது, லயம் கொள்வது.

"தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி, சங்கரா ஜெய போற்றி போற்றி என்னும்" என்கிறார் அப்பர். "விஷ்ணோர் கானம் ச ந்ருத்தம் ச நடனம் ச விசேஷத: " என்கிறது ஸ்ரீமத்பாகவதம்.

எல்லா பூஜைகளிலும் இறுதியில் செய்யப் படும் ராஜோபசாரம், தேவோபசாரம் என்ற வகையில் நிருத்யம், கீதம், வாத்யம் மூன்றுமே வரும். எனவே அந்த மேடையில் ஆடும் பரதநாட்டியம் என்பது முதலில் தொடங்கிய பூஜையின் அங்கம் தான். அதனால் பூஜையை மறுத்து, நடனத்தை மட்டும் எப்படி அனுமதிக்கலாம்? ஷரியத் சட்டப்படி அந்த நடனமும் ஒரு காஃபிர் மதச் சடங்கு தான்!

"பார்வையாளர்களின் உணர்ச்சிகளைக் கணக்கில் கொண்டு" பூஜை தடை செய்யப் பட்டது என்று செய்தி சொல்கிறது. நடராஜரின் சிலை வடிவம் உணர்ச்சிகளைப் புண்படுத்துமாம, ஆனால் அதே உருவை ஒவ்வொரு அசைவிலும், கதியிலும், சொல்லிலும், இசையிலும் கூட்டி ஆடுவதை இவர்கள் பார்த்து ரசிப்பார்களாம்.. அது என்ன கலை உணர்ச்சியோ? இந்த ஜென்மங்களுக்காக, இப்படியும் நிகழ்ச்சி வழங்க வேண்டுமா அந்த நாட்டியக் குழுவினர்? அவர்கள் மறுத்திருக்கலாம்.

எந்த அளவுக்கு இந்த "மென் இஸ்லாமிய" நாட்டின் எண்ணப் போக்கு ஒற்றைப் படையாகவும், வெறுப்பில் அமிழ்ந்தும் போய்க் கொண்டிருக்கிறது பாருங்கள்.

இந்த இஸ்லாமிய அகராதியில், முழங்காலில் உட்கார்ந்து தலையைத் தரையில் இடித்து சில அராபிய மந்திர வார்த்தைகளை உதிர்க்கும் நமாஸ் என்கிற மெக்கானிகல் சமாசாரம் மட்டுமே "வணங்குவது". இது தவிர, ஒரு உயர் பொருளையோ, உயர் தத்துவத்தையோ, உயர்ந்த மனிதரையோ பற்றிய சிலிர்ப்பூட்டும் எண்ணங்கள், அனுபவங்கள், இசை, கலை வெளிப்பாடு எதுவுமே "வணக்கத்தில்" சேராது என்பார்கள். அதனால் தான் அவர்கள் அல்லாவை மட்டுமே "வணங்குகிறார்கள்", முகமதுவை "வணங்குவதில்லை" என்று "தெளிவாக" ஜல்லியடிப்பார்கள். இதே கருத்தை முன்வைத்து கடந்த வாரங்களில் 3-4 முஸ்லீம் எழுத்தார்கள் திண்ணை இதழில் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். புரோகிராம் செய்யப்பட்ட ரோபோட்கள் போன்று அனைவரும் ஒரே மாதிரி எண்ணி, ஒரே மாதிரி எழுதுவதாகவும் தோன்றியது - மெமெட்டிக் க்ளோன்கள் என்று சில வருடங்கள் முன்பு இஸ்லாமிஸ்டுகளை வர்ணித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதியது எவ்வளவு உண்மை என்று நினைத்துக் கொண்டேன்.

இப்படி ஒரு மூடிய மனத்தையும், இறுகிய எண்ணங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் உள்ளத்தால், பரதம் மட்டுமல்ல எந்த ஒரு நுண்கலையையும், ஆழ்ந்தகன்ற விஷயங்களையும் அணுகவோ, ரசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாது.
மனம் கொஞ்சம் திறந்து கொள்ளத் தொடங்கினால், இந்த இறுகிய கொள்கைகளை அது வெறுக்கவும், ஒதுக்கவுமே செய்யும்.

அதனால் தான் மனிதர்கள், விலங்குகளை சிற்பமாகவும், ஓவியமாகவும் வடிப்பதற்கும், செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கும், இசைக்கும், பாடலுக்கும், மென்கலைகளுக்கும், மனதை மலரவைத்து அதன் இறுக்கத்தைத் தளர்த்தும் எல்லாவிதமான விஷயங்களுக்கும், குர் ஆன் தடை விதித்தது; இன்றைய முல்லாக்கள், தாலிபான் வரை அந்தத் தடையை செயல்படுத்தியும் வருகின்றனர்.

Wednesday, June 11, 2008

பெங்களூர் தீமிதி விழா - தமிழ் போஸ்டர்

நேற்று அல்சூர் ஏரிக்கரை வழியாக போகும்போது கண்ணில் பட்ட போஸ்டர்:



(பெரிதாக்க படத்தில் க்ளிக் செய்யவும்)


கோயில் மற்றும் சுற்றிலும் உள்ள சாலைகளில் எல்லாம் காவிக் கொடி பறந்து கொண்டு இருந்தது. தீமிதி விழாவை சமூக விழாவாக, இந்து எழுச்சி விழாவாகக் கொண்டாடும் அல்சூர் மக்களுக்கு வாழ்த்துக்கள்.

"நில்லும்" என்று கண்ணை உறுத்தும் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதியிருக்கலாம். அதற்குப் பதிலாக, "வெல்லும்" சரியாக இருந்திருக்கும்.

"திருப்பதம் வரவேற்று" ?? "ஸ்ரீபாதகள ஸ்வாகதா" என்று கன்னடத்தில் சிந்தித்து தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..

Thursday, June 05, 2008

பிறந்தநாள் பிச்சை கேட்கும் தமிழினத் தலைவர்

இந்த தினமணி செய்தியைப் பாருங்கள் -

சென்னை, ஜூன் 2: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள் என்று எதிர்ப்பாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற "உளியின் ஓசை' திரைப்படத்தின் பாடலை வெளியிட்டு அவர் பேசியதாவது: சுற்றியுள்ள மாநிலங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் மாநிலங்களாக இல்லை. கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை தனித் தீவாக மாற்றிவிட்டன.

இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தின் "ஒரே கதி' சேது சமுத்திரத் திட்டம் மட்டுமே. சேது சமுத்திரத் திட்டத்தால் மட்டுமே தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறும். வாணிபத் தொடர்புகள் அதிகரிக்கும். சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றித்
தாருங்கள் என்று அந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனது பிறந்த நாள் யாசகமாக இதனைக் கேட்டுக் கொள்கிறேன். என் பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்கவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்துக்காகக் கேட்கிறேன்...."

சேது திட்டம் தான் "ஒரே கதியாம்". தமிழகம் "தனித்தீவாக" ஆகி விட்டதாம். எப்படிக் கூசாமல் அண்டப் புளுகு புளுகுகிறார் ஒரு மாநில முதல்வர்? மாநிலத்தின் வளர்ச்சிக்காக உருப்படியாக ஒன்றும் செய்யாமல், செய்யத் தெரியாமல், அண்டை மாநிலங்களை அநாவசியமாக வம்புக்கு இழுத்திருக்கிறார், துவேஷ மனப்பான்மையை வளர்க்கிறார். மிகவும் பொறுப்பற்ற பேச்சு.

திருவள்ளுவர், திருவள்ளுவர் என்று ஒருவர் இருந்தார். உலகின் உன்னதமான அறநூலான திருக்குறளை எழுதியவர். அதில் "இரவச்சம்" என்று ஒரு அதிகாரம் உண்டு. (ராத்திரி பயம் அல்ல; இப்போது இருப்பது போல திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாக இல்லை). அதாவது உயிர்போவது பற்றிக் கூட பயம் கொள்ளாத மானமுள்ள மனிதர்கள் இரப்பதற்கு, பிச்சை கேட்பதற்கு அதை விடமிகுந்த நாணமும், அச்சமும் படுவார்கள் என்பதை வலியுறுத்திக் கூறும் அதிகாரம். அதில் ஒரு குறள்:

"ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்தது இல்"

"(சாகக் கிடக்கும் ஒரு பசுவைக் காப்பாற்றுவதற்காக) பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை."

அதனால் என்ன? திருக்குறளை ஒரு அலங்காரத்துக்காக மட்டுமே "குறளோவியமாக" சட்டம் போட்டு மாட்டிவைத்து புளகாங்கிதப் படும் தன்மானத் தமிழினத் தலைவர் அவர்கள் இப்படித் தயங்காமல் பிச்சை கேட்பது ஆச்சரியம் இல்லை தானே?

அதுவும் யாரிடம்? இந்தத் திட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள், முட்டுக்கட்டை போடுபவர்களிடமாம். அது யார் யார்?

நீதிமன்றம். அது தான் இந்தத் திட்டத்திற்குத் தடை விதித்து, தொல்பொருள் ஆய்வுத் துறை சேது பகுதியில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கலாம். பிச்சை..?

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். கூட்டணிக் கட்சிகளிடம் மன்றாடுவதில் கின்னஸ் சாதனை படைத்த பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். வாக்காளர்களிடம் மன்றாடியார்கள் இருக்கிறார்கள். ஆனால் முதன்முறையாக, தள்ளாத வயதில் எதிர்க்கட்சிகளிடம் மன்றாடுவதாக வெட்கமில்லாமல் அறிவித்த அரசியல்வாதி என்கிற சாதனை பட்டத்தை இதன்மூலம் தானைத் தலைவர் தட்டிச் செல்கிறார்.

இந்து இயக்கங்கள், ராம பக்தர்கள், துறவிகள். இவர்களைப் பார்த்து கலிஞ்சர் செய்யாத கேலியா? கிண்டலா? ஏளனமா? அவதூறா? கடைசியாக, இந்த "மூட, மௌடீக, மதவாத" சக்திகளிடமெல்லாம் பிச்சை கேட்கும்படி அவர் நிலைமை ஆகிவிட்டதே. தெரியாமல் முதுகில் பட்டுவிட்ட வேலுக்கெல்லாம் கூட நாணிக் கோணி, வீறாப்பு தன்மான டயலாக் பேசி, ஓவராக ஃபிலிம் காட்டிய, பொழைக்கத் தெரியாத புறம்போக்கு புறநானூற்றுத் தமிழனுங்க பேரையெல்லாம் ஏந்தான் சொன்னோமோ என்று தன்மானத் தலைவர் தன்னைத் தானே நொந்துகொண்டு நோகும்படி ஆகிவிட்டதே. ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

தலைவர் பேச்சில் எப்பவுமே ஒரு பொடி இருக்கும். தென்னாட்டு பெர்னாட்ஷாவிடம் அவர் கற்ற பாடம் அது. அதாவது உடன்பாட்டாகச் சொல்ல வேண்டியதை எதிர்மறையாகச் சொல்வார்...and vice versa. முந்தைய காலங்களில், அப்போதைய அரசுகள் சட்டவிரோத அல்லது அரசியல் காரணங்களுக்காக அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்கும்போதெல்லாம் உடன்பிறப்புகளுக்கு பஸ்களை எரிக்கக் கூடாது, கலவரம் எதுவும் செய்யக் கூடாது, வன்முறையில் ஈடுபடுவது கூடவே கூடாது என்று அறிக்கை விடுவார். உடனடியாக என்ன செய்யவேண்டும் என்று தொண்டனுக்குத் தெரியும்.

இன்னொரு சமீபத்திய உதாரணம். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு நினைவு மண்டபம் அமைக்கிறோம் என்ற பெயரில் உத்தமதானபுரம் ஊரில் அவர் வாழ்ந்த அழகிய பாரம்பரிய வீட்டை இடித்து எந்தக் கலை உணர்வும் இல்லாத ஒரு கான்கிரீட் கட்டிடத்தைக் கட்டி, தனது தொடரும் கலை, கலாசார ஒழிப்புப் பட்டியலில் இன்னும் ஒரு எண்ணைச் சேர்த்தது தமிழக அரசு. படிக்கும்போதே ரத்தக் கண்ணீர் வருகிறது. இது பற்றி மனம் நொந்து விமர்சன பிதாமகர் வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறுகிறார் -

"... அச்செய்திகளில், முதல்வர் கலைஞரின் வாழ்த்துச் செய்தியும் காணப்பட்டது. அவருடைய பாராட்டுச் செய்தியும், தமிழுக்குத் தொண்டாற்றிய உ.வே.சா எந்த இனத்தைச் சேர்ந்தவர் எந்த ஜாதிய்னர், குடியினர் என்பதையெல்லாம் புறமொதுக்கித் தான், அவரது தமிழ்த் தொண்டை போற்றத் தான் நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற பொருளில் தான் இருந்தது. எந்த ஜாதி, எந்த இனம் என்ற சிந்தனை இல்லையென்றால் அதைச் சொல்லவேண்டும் என்ற எண்ணமும் தோன்றி யிராது தானே. யாரும் ஏதும் கேட்காமலேயே 'எங்களுக்கு அந்த சிந்தனையெல்லாம் கிடையாது" என்று சொல்லித் தன் தாராள மனதுக்கும் சிந்தனைகளுக்கும் பாராட்டுக்களைத் தனக்கு வழங்கிக் கொள்ளும் அவசியம் இருந்ததென்றால், அந்த சிந்தனை தான் மேலோங்கியிருக்கிறது என்று தானே பொருள் படும். இது தான் இன்றைய தமிழ் நாடு."

ஆமாம். அந்தத் தமிழ்நாட்டின் தலைவர் பேச்சில் அந்தப் பொடி இன்னும் இருக்கிறது. "என் பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்கவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்துக்காகக் கேட்கிறேன்" என்று அவர் கூறும்போது, அதில் மேலோங்கியிருக்கும் சிந்தனை என்ன என்பது இந்த முதுபெரும் தலைவரின் கரகர பேச்சைக் காலம் காலமாய்க் கேட்டு வரும் மாங்கா மடையர்களாகிய நமக்குப் புரியாதா என்ன? மிக மிக நன்றாகவே புரியும்.