Showing posts with label கிறித்தவம். Show all posts
Showing posts with label கிறித்தவம். Show all posts

Thursday, October 11, 2007

மனிதர்கள், சம்பவங்கள், மதங்கள் - 2

திரு. அருணகிரி அவர்களின் இந்தக் கட்டுரையின் முதல் பாகம் இங்கே.

அதன் தொடர்ச்சி...

வன்முறைக்கும் உயிர்க்கொலைக்கும் அரசு மற்றும் சமூக நிறுவனங்கள் தரும் அங்கீகாரத்தை விட மத நிறுவனங்கள் தரும் அங்கீகாரங்கள் அதிகத் தீமையைத் தர வல்லவை. அரசின் சட்டங்கள் சமூகத்தால் சமூகத்தின் சட்டங்கள் அரசால் திருத்தப்படலாம், மாற்றப்படலாம். காலப்போக்கில் தூக்கியெறியப்படலாம். உடன்கட்டை ஏறுதலுக்கும், சாதிக் கொடுமைகளுக்கும் எதிராகச் சட்டம் இயற்ற முடிந்தது. நிறப்பிரிவு (seggregation) நடைமுறைகளையும், பெண்களுக்கு ஓட்டுரிமையின்மையும் கடந்த நூற்றாண்டில் சட்டம் மூலம் மாற்ற முடிந்தது. ஆனால் மத சட்டங்கள், அதுவும் இஸ்லாம் போன்ற அரசியல் மதத்தின் சட்டங்கள் மாற்றப்படுவதையோ காலத்திற்கேற்றவாறு திருத்தப்படுவதையோ அடிப்படைவாத இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

ஐரோப்பாவின் விழிப்புணர்வு காலம் தொட்டு கிறித்துவம் பல கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இது ஓரளவுக்காவது அதன் மத அதிகார வெறியைக் கட்டுக்குள் வைக்கிறது. முக்கியமாக, கிறித்துவப் பெரும்பான்மை நாடுகள் பைபிளை அரசியல் அமைப்புக்கு அடிப்படையாக்கவில்லை. அரசு நடத்தவோ சட்டம் இயற்றவோ ஏசுவின் வாழ்க்கையையோ பேச்சுகளையோ நாடுவதில்லை. அடிப்படைவாத இஸ்லாமோ இதற்கு நேர்மாறாக 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரின் அன்றைய வாழ்க்கை முறையையும் பேச்சுகளையும் என்றும் மாறா உண்மைகளாகக் கொண்டு இன்றும் அரசியல் செய்யவும் அரசு நடத்தவும் முற்படுகின்றன. அரசியலில் மட்டுமல்ல, தனிமனித வாழ்வியலிலும் அவற்றைக் கொண்டு வருகின்றன. விளைவு, குண்டு வெடித்தல்களையும், படுகொலைகளையும், இஸ்லாத்திற்காக செய்கிறோம் என்று கொலைகாரர்களால் எளிதாகச் சொல்லி மத அங்கீகாரம் பெற்று விட முடிகிறது. இவற்றை ஓரளவு விமர்சிக்கும் தஸ்லிமா நஸ்ரின், ரசூல் போன்ற ஒரு சிலர்களை மதவிரோதிகளாகக் காட்டி விட முடிகிறது.



தனிமனித சுதந்திர மறுப்பை நிறுவனப்படுத்திய ஸ்டான்ஃபோர்டு பரிசோதனை சாதாரண மனிதர்களை குரூரர்களாக்கியது. பலரை சிந்தனை இழந்த யந்திர வேதாளங்களாக (zombies) ஆக்கியது. சிலரை மிகுந்த மன அழுத்தத்திற்கு உட்படுத்தி சிறையிலிருந்து வெளியேற வைத்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற மத அதிகார நிறுவனமும் இப்பரிசோதனையின் பல கூறுகளைப் பிரதிபலிக்கின்றது: தன் பிடிக்குள் வருபவர்களை, சக மனிதர்களைக் கொன்றுபோடத் தயங்காத மூர்க்கர்களாக நிலை மாற்றுகின்றது. சிலரை சுய சிந்தனை இழந்து கேள்விகளற்றுப் பணியும் யந்திரங்களாக்குகிறது.

ஆனாலும் ஒரு விஷயத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஸ்டான்ஃபோர்டு சோதனையிலிருந்து வேறுபடுகின்றதுதான். அதாவது, ஸ்டான்ஃபோர்டு பரிசோதனையைப் போலன்றி, இந்த அடிப்படைவாத நிறுவனத்தை எதிர்ப்பவர்களுக்கு அதனை உதறி வெளியேறும் வாய்ப்பினை அது வழங்குவதில்லை. மாறாக அப்படிப்பட்ட எதிர்ப்பாளர்கள் கடவுளை அவமதித்தவர்களாகக் கருத்தப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள் (மரண தண்டனை உள்பட). ஒரு மாஃபியாத் தன்மையுடன் நிறுவப்படும் இப்படிப்பட்ட தீவிரவாத மத நிறுவனங்களுக்கு உள்ளே மாட்டிக்கொள்பவர்களின் மன உளைச்சலும் அழுத்தங்களும் எங்காவது வெடிக்கத்தானே வேண்டும். அதற்கும் வழி செய்து தருகிறது இந்த நிறுவனம். இவர்களது ஊமைக்கோபத்தையும் உள்ளுறை இயலாமையையும் அடிப்படைவாத நிறுவனத்தின்மேலேயே காட்டி விடாமல் இருக்கும் பொருட்டு, எதிரிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்- இந்துக்களாகவோ, கிறித்துவர்களாகவோ, யூதர்களாகவோ, கம்யூனிஸ்டுகளாகவோ, ஓரினச்சேர்க்கையாளர்களாகவோ, பெண்விடுதலை பேசுபவர்களாகவோ, இஸ்லாத்தை விமர்சிக்கும் இஸ்லாமியர்களாகவோ- இப்படி எவ்விதத்திலாவது எல்லா நேரத்திலும் வசதியாக இவர்களுக்கு எதிரிகள் காட்டித்தரப்படுகிறார்கள். இந்த 'எதிரிகளைக்' கொன்று அழிப்பவர்கள் இறைவனுக்கு உகந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு, ஜிஹாதி வன்முறையாளர்களாய் நிலை மாற்றப்படுகிறார்கள். உருவாக்கப்பட்ட துப்பாக்கி அதற்கு ஏற்ற கரத்தைக் கட்டாயம் கண்டு பிடித்து விடுவது போல, உற்பத்தி செய்யப்பட்ட வன்முறை ஜிஹாதிகளும் ஏதாவது ஒரு எதிரியைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்தான். அப்படிக் கண்டுபிடிப்பதில்தான் அவர்களது இருப்பு அவர்களுக்கே அர்த்தம் உடையதாக ஆகின்றது. அடிப்படைவாத இஸ்லாம் என்பது ஜிஹாதி உற்பத்திக்கூடமாவது இவ்வாறுதான். இதனால்தான், முழுவதும் இஸ்லாமிய நாடுகளாக இருக்கும் நாடுகளிலேயே கூட ஒரு பிரிவு மற்றொரு பிரிவை மதக்கடமையாக, ஜிஹாதிப்போரில் அழித்துக்கொல்வதை அதன் தொடக்க காலம் முதலே காண முடிகிறது.

கொலையும், கொள்ளையும், பாலியல் கொடுமைகளும், பெண்ணடிமைத்தனமும், படிப்பறிவின்மையும், மதவெறியும், சுவனக்கனவுகளும் இஸ்லாத்தின் பெயரால் புகட்டப்பட்டு இஸ்லாத்தின் தலைவர்களாலேயே அதன் இளைய சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் அநீதியும் வாய்ப்பு மறுத்தலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. "முஸ்லீம்கள் ஒரு விரும்பத்தகாத கூட்டம்" என்ற கருத்து பல நாடுகளிலும் பரவி வருகிறது. என்னுடைய மிக நல்ல முஸ்லீம் நண்பர்களை நினைத்து, என் வீட்டிற்கு விளையாட வரும் முஸ்லீம் குழந்தைகளைக் கண்டு மனம் பதைத்து இதைச் சொல்கிறேன். இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒரு விபரீதக் கோட்பாடாக ஆகிவருகிறது என்பதை இஸ்லாத்தில் உள்ள முற்போக்காளர்கள் உடனடியாக வெளிச்சம் போட வேண்டும். உள்ளிருந்து அவ்வாறு வெளிச்சம் போட முனைவது எத்தகைய ஆபத்தான விஷயம் என்பது சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், சமீபத்தில் ஹெச். ஜி. ரசூல் ஆகியோர் மேல் விதிக்கப்பட்ட ஃபாத்வாக்களைப் பார்க்கையில் தெளிவாகின்றது.



தன் தந்தை ஷாஜஹானுக்கு வளர்ப்புப் பறவை ஒன்றைப் பரிசளிக்கும் இளவரசர் தாரோ ஷுகோ


"உலகம் முல்லாக்களின் சத்தங்களிலிருந்து விடுதலை பெறட்டும்; எவரும் அவர்களது ஃபட்வாக்களுக்கு செவி மடுக்க வேண்டாம்" என்று எழுதிய தாரா ஷிக்கோவின் எழுத்துக்கள் ஒரு ஆரோக்கியமான புதுப்பித்தலை நோக்கி இஸ்லாத்தை திசை மாற்றி நகர்த்திச்செல்ல வேண்டும். இப்படிப்பட்ட திசைமாற்றத்தை அடிப்படைவாத இஸ்லாம் அனுமதிக்காத இன்றைய நிலையில், இஸ்லாத்துக்கு வெளியே உள்ள சிந்தனையாளர்கள் அதனை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும். சிறுபான்மையைத் திருப்திப்படுத்தவும் , 'பிற மத சக்திகளுக்கு ஆதரவாகப் பேசுவதாக ஆகிவிடக்கூடாது' என்ற போலித்தனமான நியாய உணர்விலும், ஓட்டுப்பொறுக்கும் முனைப்பிலும் இந்த விஷயத்தில் பலர் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் வாயிருந்தும் ஊமைகளாய் இருந்து வருகின்றனர். இதனை அனைத்து தரப்பும் பேசத்தொடங்குவதுதான் இஸ்லாத்தின் அடிப்படைவாதத்தையும் அதன் சமூக பயங்கரவாதத்தையும் முனை மழுங்க வைப்பதன் முதற்படியாய் இருக்க முடியும். ஏனெனில் தனது மத அடிப்படைவாதத்தையும் ஜிஹாதி வன்முறையையும் விட்டொழிக்காத ஒரு மதக் கருதுகோள், உலகத்தில் பெரும்பாலான நாடுகளுடன் பிணக்கத்தில் ஈடுபட்டிருப்பது, அந்த மதத்தின் ஆரோக்கியமான இருப்புக்கோ, எதிர்கால தலைமுறைக்கோ நன்மை தருவதாக அமையாது.

ஸ்டான்ஃபோர்டு சிறைப்பரிசோதனையை மத நிறுவனம் கொண்டு சமுதாய நடைமுறையாக்க இஸ்லாமியத் தீவிரவாதிகளும் அடிப்படைவாத முல்லாக்களும் முயல்வது தடுக்கப்பட வேண்டும்- எல்லோருடைய நன்மைக்காகவும்- முக்கியமாக, இஸ்லாமியர்களின் நன்மைக்காகவும்.

Monday, August 13, 2007

கிறித்தவப் பள்ளிகள் பற்றி பாரதியார்

எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் பாரதி எழுதியிருக்கிறார் பாருங்கள்.

மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.

சென்ற வாரம் சுதேசீய மஹான் களையும் புராதன வீரர்களையும், கவிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் பற்றி நமது இளைஞர்கள் நன்றா யறிந்திருக்கும்படியான சுதேசீய கல்வி இக்காலத்தில் கொடுக்கப்படவேண்டுமென்று வற்புறுத்திப் பேசினோம். மிஷனரிகளின் சம்பந்தமில்லாத சுத்த ஹிந்துப்பாடசாலைகளில் கூட மேற்கண்டவிதமான கல்வி அளிக்கப்படாமலிருத்தல் மிகவும் விசனகரமான விஷயமே. ஆனால் மேற்படி ஹிந்துப் பாடசாலைகளிலே நமது மஹான் களைப் பற்றி வேண்டுமென்று தூஷணை புரிந்து வாலிபர்களின் மனதை மாசு படுத்துவதில்லை என்ற ஒரு நலம் இருக்கிறது.

வியாஸர், வசிஷ்டர், யாக்ஞவல்கியர், சங்கரர் என்ற பெயர்களைப் பற்றி ஹிந்துப் பாடசாலை மாணாக்கர்கள் ஏதுமறியாமலிருக்கிறார்களென்பது மெய்யேயாயினும் மேற்படிப் பெரியோர்களைத் திட்டும்படிக்கு ஹிந்துப்பாடசாலை உபாத்தியாயர்கள் கற்பித்துக் கொடுப்பது கிடையாது. இது சாதாரணத் தீமை என்பதாக லேசாய் எவரும் நினைத்துவிடக் கூடாது.
புராதன சரித்திரமற்ற தேசத்துக்கு மென்மேலும் அபிவிருத்தி ஏற்படுதல் கஷ்டம். புகழ்பெற்ற புராதன சரித்திரமிருந்தும், அதனை மறந்திருக்கும் ஜாதியார் அழிந்தே போய்விடுவார்கள். புகழ் பெற்ற பூர்வகாலச் சரித்திரமிருக்க, அதனை இகழ்ந்து அதன் பொருட்டு லஜ்ஜையுறத் தலைப்படும் தேசத்தாரின் கதியை எழுதவும் வேண்டுமா ?


எனவே கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பிச் சிவாஜியைக் கொலையாளி யென்றும், வியாசரை அறிவிலி யென்றும், ஸ்ரீகிருஷ்ண பகவானைத் தூர்த்தனென்றும் அவ் விளைஞர்கள் கற்கும்படி செய்கிற ஒவ்வொரு தந்தையும் புத்திரத் துரோகியாகிறான். இளைஞர்கள் அவ்வாறே நினைப்புக் கொண்டவர்களாகி, தமது ஒழுக்கத்திற்கும், அபிவிருத்திக்கும், ஊக்கத்திற்கும் முன்னோர்களிலிருந்து யாரையும் திருஷ்டாந்தமாகச் சொல்ல வன்மையற்றவர்களாகி, அது காரணமாக ஒழுக்க முதலியவற்றிலே தாழ்வடைந்து போய் விடுவார்களாதலால் மேற்கண்டவாறு தமது புத்திரர்களை மிஷன் பாடசாலைகளுக்கு அனுப்பும் தந்தையர் தேசத் துரோகிகளுமாகிறார்கள்.

கிறிஸ்து மார்க்கத்திலே நாம் அனாவசியமாக விரோதம் கொண்டிருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். உலகத்திற் பிறந்த மஹோபகாரிகளிலும், மஹா ஞானிகளிலும் கிறிஸ்து ஒருவரென்று நாம் நம்புகிறோம். 'நானும் எனது தந்தையும் ஒன்றே ' என்று கிறிஸ்துநாதர் கூறியதற்குக் கிறிஸ்தவர்கள் என்ன பொருள் கூறிய போதிலும் 'சிவோஹம் ' என்னும் அத்வைதக் கோட்பாட்டையே கிறிஸ்து மேற்கண்டவாறு சொன்னாரென்று விவேகாநந்தர் போன்று பெரிய ஹிந்து தேசிகர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால், நாம் கிறிஸ்து மார்க்கத்தை விரோதிக்கவில்லை. கிறிஸ்தவப் பாடசாலைகளிலே கல்வி கற்பிக்கப்படும் மாதிரியையே விரோதிக்கிறோம். இதற்குப் பாதிரிமார்களைக் குறை கூறுவதால் சிறிதேனும் பயனில்லை. அவர்கள் நம்மையும் நமது பூர்வகால மஹான்களையும் அறியாமையாலும், தாம் வாங்கும் சம்பளத்தின் பொருட்டாகவும் தூஷணை புரிகிறார்கள்.

ஆரியத் தன்மையைப் பெரும்பாலும் இழந்து அஞ்ஞானம், மூடநம்பிக்கை என்னும் சேறுகளிலே அழுந்திக் கிடக்கும் நம்மவர், கிறிஸ்தவப் பாதிரிகள் நமது முன்னோரைப் பற்றிக் கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று கிரகித்துக் கொள்கிறார்கள்.



ஸ்ரீமத் ரானடே, ஸ்ரீ தத்தர் முதலியோர் எழுதியிருக்கும் பூர்வகாலச் சரித்திரப் பகுதிகளை நமது இளைஞர்களுக்குப் பயிற்ற வேண்டும். அறியாமை மிகுந்த அன்னியர்கள் அழுதி வைத்திருக்கும் பொய்ச் சரித்திரங்களைச் சுழற்றி யெறிந்து விட்டு நமது நாட்டின் தேசபக்தியும் நவீன அறிவும் கலந்த மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் புரிந்து உண்மையான சரித்திரங்கள் எழுதத் தலைப்படவேண்டும். அதற்கிடையே இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களின் பாடசாலைகளை விலக்கி வைக்க முயல வேண்டும். போதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சையப்பன் காலேஜ் போன்ற சுதேசீய காலேஜ்களையும் ஸ்கூல்களையும் பலப்படுத்தி, பாதிரிகளின் பள்ளிக்கூடங்களுக்கு நிகராக வேண்டும்.

நமது பாடசாலைகளில் உபாத்தியாயர்கள் ரஸமில்லாமலும், சம்பளம் அதிகமாகவும் இருக்குமானால் இவற்றை மாணாக்கர்கள் எட்டிப் பார்க்கவே மாட்டார்கள். இதையெல்லாம் செல்வர்கள் கவனிக்க வேண்டும். தேசத்தை நாளுக்குநாள் கீழே அழிய விட்டு விடுவோமானால், பிறகு எந்த உபாயத்தாலும் உயர்த்த முடியாமல் போய்விடக்கூடிய ஒருநாள் வந்து விடும். தெய்வக் கிருபையால் அந்த ஒருநாள் இன்னும் வந்து விடாமலே யிருக்கின்றது. அது வருமுன்பாக நானாவிதத்தாலும் முயற்சி புரிந்து நமது நிலைமையைச் சீர்திருத்திக் கொள்ளவேண்டும்.

'விழிப்பீர்! எழுவீர்! இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே!

* * *

பாரதியின் இந்தக் கனவுக்கு வடிவம் கொடுப்பதில் முன் நின்றவை, முன் நிற்பவை இந்து இயக்கங்கள் தாம். பா.ஜ.க தலைமையில் ஆன தேசிய முன்னணி ஆட்சியின்போது தான் அப்போதைய கல்வி அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் பொய்களை சரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். இவை தேசதுரோக இடதுசாரிகளாலும், போலி மதச்சார்பின்மை வாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டன.

பாரதி சொன்னதை செய்ததற்காக பாரதீய ஜனதா கண்டிப்பாக பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.