Tuesday, August 08, 2006

சஞ்சய் சுப்பிரமணியன் சங்கீத மழை

சில விஷயங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம் செய்திருந்தால்தான் கிடைக்கும் என்பார்கள். நேற்று கேட்ட சஞ்சய் கச்சேரி அப்படிப் பட்டது (பெங்களூர் அல்சூர் ஒடுக்கத்தூர் மடம் அரங்கில் நடந்து வரும் கோகுலாஷ்டமி கச்சேரித் தொடர்). நான் உள்ளே நுழையும்போது சந்திரஜோதி ராக ஆலாபனை பண்ணிக்கொண்டுருந்தார். அதில் "சசி வதனா" தியாகராஜர் கிருதி. பிறகு, ஒரு அழகான குட்டி தர்பார் ஆலாபனை "முந்து வெதகு" தியாகராஜர் கிருதி.
அப்புறம், ஒரு கார்வையான கல்யாணி ஆலாபனை. "உன்னையல்லால் வேறே கதி இல்லையம்மா" பாபநாசம் சிவன் கிருதி. வழக்கமாக துக்கடா போலப் பாடப் படும் இந்த அற்புதமான கிருதியை, அதன் ரான, தாள, அர்த்த பாவங்கள் நன்கு வெளிப்படும்படி சஞ்சய் பாடக் கேட்டது காது கொள்ளா ஆனந்தம்! அதிலும் "உன்னையல்லால்" வரி நிரவல், கல்பனா ஸ்வரங்களும் சஞ்சயின் இசைத் திறமையின் ஆழத்தை வெளிப்படுத்தின. முக்கிய கிருதியாக "காரு வாரு சேரு வாரு" என்ற தியாகராஜரின் கருணை ரசம் ததும்பி வழியும் முகாரி ராக கிருதி. ஆற அமர அறுசுவை உணவு பரிமாறுவது போல இந்த ராகத்தின் சகல அம்சங்களுக்கும் அழகு சேர்க்குமாறு பாடினார். தனி ஆவர்த்தனத்தில் தஞ்சை ராமதாஸ் (மிருங்கம்), டிவி வாசன் (கடம்) கூட்டணி அசத்தியது. நாகை முரளீதரன் வயலின் குழைவும், சஞ்சய் பாட்டோடு அவர் ஒத்திசைந்த விதமும் மிக நன்று.
"ஓ காலமே, உன் போல் எவர்க்குண்டு இந்திர ஜாலமே" என்று காலத்தை விளித்து ஸஹானாவில் பாடிய தத்துவார்த்தமான பாடலும் மிக நன்றாக இருந்தது.
இவ்வளவும் பாடு முடிக்கும் போது மணி எட்டேகால் தான்! ராகம் தானம் பல்லவி பாட வேண்டுமென்றே திட்டமிட்டு கன கச்சிதமாக மனிதர் கச்சேரியை நடத்திச் சென்றிருக்கிறார் என்பது புரிந்தது! அடுத்து வந்த சாருகேசி ராகமும், தானமும் அற்புதம்! ராக லட்சணங்கள் ஓரளவு தெரியுமென்றாலும், சங்கீத நுணுக்கங்கள் எதுவும் அறியாத பாமரன் நான். இருப்பினும், அந்த ராகம், தானம் ரொம்ப ஆழம். "உன் தரிசனம் கிடைக்குமோ நடராஜா, தயாநிதே - உன்.." என்று பல்லவி. கி.. டை..க்... கு.... மோ.... ந... ட... ரா.. ஜா... என்று ஸ்வரக் கோர்வைகளை ஒவ்வொரு முறையும் கோர்த்த விதம் சாருகேசியின் அழகிய கேசத்திற்கு தேவலோக மலர்களைக் கொண்டு மாலை தொடுத்த்து போன்றிருந்தது என்றாலும் மிகையாகாது. கல்பனா ஸ்வரத்திற்குப் பின் இரண்டு மூன்று ராகங்களில் சஞ்சாரம் செய்வார் என்று எதிர்பார்த்தேன்... சாருகேசி ஸ்வரத்துடனேயே பல்லவியை முடித்து விட்டார். நேரமாகிவிட்டது காரணமாக இருக்கலாம். பல்லவி முடிந்த உடனேயே கோபால கிருஷ்ண பாரதியின் "ஆடும் சிதம்பரமோ" (பிஹாக்) பாடலை அழகிய பிருக்காகளுடன் பாடினார். நடராஜர் மேல் பிரதானமாகப் பாடியது பிரதோஷம் அதுவும் திங்கட்கிழமையன்று சோமப் பிரதோஷமாகி விட்டது என்பதாலோ?

கடைசியில் பாடிய துக்கடாக்களும் நெஞ்சில் நின்றன- கண்டேனா கோவிந்தனா (புரந்தர தாசர்), ராமனை பஜித்தால் நோய்வினை தீரும், நிஜகாத ஸா (24வது அஷ்டபதி, சிந்து பைரவியில்).
மொத்ததில் தேவாம்ருதமான கச்சேரி. இதை ஏற்பாடு செய்தவர்களுக்கும், sponsor பண்ணியவர்களுக்கும் கோடி நன்றிகள்.

No comments: