Friday, May 09, 2008

திராவிட திருக்குறள் பார்வைகள் இன்னொரு எதிர்வினை

சென்ற திண்ணை இதழில் மு.இளங்கோவன் இப்படி ஒரு எதிர்வினையை எழுதியிருக்கிறார்.

முதலில் ஒரு சில்லறை விஷயம். என் பெயரை நான் எழுதுவது போலன்றி “சடாயு” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பெயரைப் பல வகைகளில் எல்லா மொழிகளிலும் எழுதமுடியும் தான். ஆனால் ஒருவரைப் பெயர் சொல்லி அழைக்கையில் அப்பெயருடையவர் எழுதுவது போலவே எழுதுவது என்பது அடிப்படை நாகரீகம், பண்பு, இணைய ஒழுக்கம் (netiquette). இதிலும் கொள்கை, புண்ணாக்கு எல்லாம் கலப்பது, எனது பெயரை இப்படித் திரிப்பது என்பது அநாகரீகம்.

(“தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை” என்று தானே கம்பன் சொல்லியிருக்கிறான்? ஆமாம். ஆனால் கம்பன் சொன்னது போலவே எல்லாப் பெயர்களையும், எல்லாக் காலத்திலும், எல்லாரும் எழுதிக் கொண்டிருக்கிறோமா? தொல்காப்பியர் சொன்ன பெயர்ச்சொல் விதிகளின் படி தான் இப்போது எல்லாரும் பெயர் வைத்துக் கொள்கிறார்களா?)

மேலும் சொல்கிறார்:
// “அவரின் இணையப்பக்கத்தில் உள்ளஅவர்தம் கொள்கை முழக்கங்களையும் காணும்போது அவர் யார் என்பதையும், அவர் உள்ளத்துள் உறைந்துள்ள எண்ணங்கள் என்ன என்பதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது”//

அடேயப்பா! ஒருவரது ஒரே ஒரு வலைப்பதிவைப் பார்த்தே இவ்வளவு தூரம் உளவறியக் கூடிய ஜித்தர்கள் எல்லாம் இருக்கிறார்களா? ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

// “கட்டுரையைப்பற்றி எழுதியுள்ளதைவிட கிறித்தவ மதம்,திராவிட இயக்கம் பற்றித் தாக்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும்” //

இது அபாண்டம். என்னுடைய கட்டுரையில் நான் தொட்டுக் காட்டிய மூன்று விஷயங்கள் சுருக்கமாக -

1. தமிழ்ப் பழம்பெருமை, நவீனத்துவம், கடவுள்மறுப்பு ஆகிய முரண்களை சமாளிக்கத் தெரியாத திராவிட இயக்கம் கால்டுவெல்லின் “ஆரிய திராவிட இனவாதத்தை” வைத்து ஒரு சட்டகம் உருவாக்கியது.
2. இந்தச் சட்டகத்தைக் கொண்டு திருக்குறளுக்கு கண்மூடித்தனமாக உரைகண்டது, அடிப்படை தர்க்க ஓட்டைகள், சொல் பயன்பாடு போன்றவற்றைக் கூட கண்டுகொள்ளாதது
3. இத்தகைய செயல்கள் மத்திய கால நிறுவன கிறிஸ்தவத்தின் DeHellenization முயற்சிகளின் மோசமான காப்பி போன்று இருந்தது
இதை இப்படிப் புளியைப் போட்டு விளக்கிய பின்னும், முத்திரை குத்துதல் மூலமே ஒரு வாதத்தை எதிர்கொள்ள நினைப்பவர்கள் பற்றி ஒன்றும் பேசுவதற்கில்லை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, திராவிட இயக்கத்தின் பொதுவான “சட்டக” அணுகுமுறை குறித்து நான் கூறியிருந்தவற்றை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் இந்த எதிர்வினையும் எழுதப் பட்டுள்ளது.

இப்படி எழுதிச் செல்கிறார்.
// “தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்தி ஏமாற்றி வாழ்ந்தவர்கள் ஆரியர்கள்” //
// தமிழ் இலக்கியங்களையும்,தமிழர்தம் கலைகளையும் சமற்கிருதமயமாக்கிக் கொண்டு தமிழ்மூலத்தை அழித்தவர்கள் //
// பின்னர் வளவன், வழுதி,பாண்டியன், சேரன் என்ற பெயர்கள் மாறிஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்,விஜயாலயன் வந்தன. தமிழ் நீச பாஷையானது.மக்கள் அடிமையாக்கப்பட்டனர். //

அடடா, என்ன அரிய கண்டுபிடிப்பு! அந்த “அடிமையாக்கப் பட்ட” தமிழினத்தில் தான் உலகெங்கும் தமிழ்ப் பெருமையை நிலைநாட்டிய ராஜராஜனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும் தோன்றினரா? இன்றும் தமிழனின் சிற்பக் கலையைப் பறைசாற்றும் மாமல்லபுரமும், தஞ்சைப் பெருங்கோயிலும், திருவரங்கமும் தோன்றினவா?





இந்த “நீசபாஷையாக்கப் பட்ட” தமிழில் தான், தமிழின் அதிஉன்னத காவியங்களான கம்பராமாயணமும், பெரியபுராணமும், சிந்தாமணியும் படைக்கப் பட்டனவா? தமிழர் சமயத்தின் ஆணிவேர்களான சைவத் திருமுறைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் எழுந்தனவா? வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனும், சங்கத் தமிழ்மாலை முப்பதும் செப்பிய ஆண்டாளும், தமிழ்விரகன், தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட சைவப் பெருந்தகையும் உருவானார்களா?

இந்த அடிப்படையான, எளிமையான கேள்விகளைக் கூட சிந்தித்துப் பார்க்காமல், அது எப்படி தன்னை ஒரு சட்டகத்தில் அறைந்து கொண்டு ஒரு “முனைவர்” எழுதுகிறார்? சொல்லப் போனால் இந்தக் கேள்விகளை என் முதல் பதிவிலேயே எழுப்பியாகி விட்டது.

// முகத்தை மறைத்துக்கொண்டு எழுதும் சடாயுவுக்கும் அவர் போன்றவர்களுக்கும், ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் //

தொடக்கத்தில் ஜடாயுவின் ஜாதகமே தெரியும் என்ற ரீதியில் எழுதினார். இப்போது “முகத்தை மறைத்துக் கொண்டு”. என்னதான் சொல்லவரீங்க? “அவர் போன்றவர்கள்” என்பது யார்? திண்ணை என்பது சுயபுத்தியுள்ளவர்கள் படிக்கும் இணைய இதழ், திராவிய இயக்கப் பொதுக்கூட்ட மேடையல்ல என்று நினைவுபடுத்த விரும்புகிறேன்.

என்னை சில புத்தகங்கள் படிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். திண்ணை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான வரலாற்று அறிஞர் எஸ்.இராமச்சந்திரனின் “தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்” என்ற இந்த ஒரு கட்டுரையைப் படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு

பின்குறிப்பு:

இதே கடிதத்தில் சம்பந்தமே இல்லாமல் வேத திருமணச் சடங்கில் வரும் ஒரு மந்திரத்தைப் பற்றிய “சட்டக” அபத்தக் கருத்து ஒன்றை அப்படியே போகிற போக்கில் உமிழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.

// இவர்கள் திருமணம் செய்யும் பெண்ணை தூய்மை(புனிதம்)பெறும்பொருட்டு முதலில் சோமனும்,அடுத்த நாள் கந்தருவனும்அதற்கடுத்த நாள் உத்திரனும்,நான்காம் நாள் அக்கினியும் நுகர்ச்சிசெய்தபிறகு இவளை மணம்செய்தவன் புணரவேண்டும் என்ற மந்தரங்கள் அருவருப்பு ஊட்டும் தந்திர வித்தைதானே //

இதில் “இவர்கள்” என்பது யார்? பாரத நாடு முழுதும் ஏராளமான சமூகங்கள் வேதத் திருமணச் சடங்கில் நம்பிக்கை வைத்து அதன்படி மணம் புரிகின்றனர். அவர்கள் அத்தனை பேரையும் அவதூறு செய்திருக்கிறார். இதற்கும் எடுத்துக் கொண்ட பொருளுக்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தமில்லையென்றாலும், தெரிந்துகொள்ள விழைபவர்களுக்காக இது பற்றிய எனது பழைய பதிவு ஒன்றை பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

பிற்சேர்க்கை: ஒரு மணப்பெண்ணும், தேவதைகளும், திராவிட பகுத்தறிவும்

4 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

மிகவும் பொறுமையுடன் மிகவும் அறிவுபூர்வமாக எதிர்வினை ஆற்றியுள்ளீர்கள். இந்த காரணத்தினாலேயே இதற்கான எதிர்வினை திராவிட இனவாதிகளிடமிருந்து கண்ணியமின்றியும் ஆபாசமாகவும் அமையப்போகிறது பாருங்கள்.

அரவிந்தன் நீலகண்டன் said...

மிகவும் பொறுமையுடன் மிகவும் அறிவுபூர்வமாக எதிர்வினை ஆற்றியுள்ளீர்கள். இந்த காரணத்தினாலேயே இதற்கான எதிர்வினை திராவிட இனவாதிகளிடமிருந்து கண்ணியமின்றியும் ஆபாசமாகவும் அமையப்போகிறது பாருங்கள்.

solarwind said...

அருமையான பதில். இதை விடக் கடுமையாகச் சொல்லி இருக்க முடியும், ஆனால் பொறுமை காட்டி இருக்கிறீர்கள். முனைவர் பட்டம் என்பது சிந்திக்கத் தெரிந்தவர் என்று உறுதிப் படுத்துவது அல்லவே? அதை அரசியல் விருதாக்கி சில பத்தாண்டுகள் ஆகி விட்டன அல்லவா? எனவே அவரூக்குப் 'பெருமை', மக்களுக்கு அது வெறுமை.

திருமணச் சடங்கு பற்றிய இழிவுப் பிரச்சாரத்துக்கு நல்ல பதிலைத் தந்து அவர் நாண நன்னயம் செய்தீர்கள்.
இதுவெல்லாம் அவர் மனதில் ஊறியுள்ள இனவெறியைச் சிறிதும் கலைக்காது. இனவெறி என்பது மூளையில் உள்ள பாரிச வியாதி. மொத்த திராவிட இயக்கத்திற்குமே உள்ள பாரிசம் அது.

சுழியம் said...

வீரவேல் ! வெற்றி வேல் !

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜடாயு,

சுருக்கமும் தெளிவும் நிறைந்த மிக அழகான பதில். போற்றி பாதுகாக்கவேண்டிய ஒன்று. ஹிந்து மதம் தொடர்பான கேள்வி-பதில் பகுதியில் இடம் பெறவேண்டியது.

ஈவேராவிற்கும் அவரது தண்டுதாங்கிகளுக்கும் நுண்கலைகளான கவிதை, இலக்கியம், இசை, நடனம், சிற்ப ஸாஸ்திரம் போன்றவை புரியவில்லை. அதே போல நுண் உணர்வுகளான காதல், தாய்மை, குடும்பம் சார்ந்த உணர்வுகள், அழகுணர்வு, கடமை, தேசப்பற்று, ஆன்மீகம், கற்பு, மனித உறவு போன்றவையும் புரியவில்லை.

இவர்களுக்கு இந்த அழகிய கவிதையும், அந்த கவிதையினால் மேன்மையுறும் மனித உறவுகளும் எப்படி புரியும்?

பெண்ணுக்கும், ஆணுக்கும் நடுவில் இருக்கக்கூடிய ஒரே தொடர்பு காமம் மட்டுமே என்று நினைக்கும் இவர்கள் மனிதனை மனிதனாக வைத்திருக்கும் நுண் உணர்வுகளை கேவலைப்படுத்தவே செய்வார்கள்.

ஒரு வேண்டுகோள்:

திராவிடம் என்பது நிலப்பகுதியை குறிக்கும் சொல். அந்த திராவிட நிலப்பகுதியில் இருக்கிற பகுத்தறிவுவாதிகளாக, ஹிந்து தத்துவங்களில் சிறந்த ஹிந்துமதப் பெரியவர்களை மட்டுமே சொல்ல முடியும். இந்த இனவெறியர்களை திராவிட பகுத்தறிவுவாதிகள் என்பது அந்த ஹிந்துப் பெரியவர்களை அவமதிப்பதுபோல் இருக்கிறது.

தேவையில்லாத, தவறான அங்கீகாரமும்கூட வந்துவிடுகிறது. வேண்டுமானால், இவர்களை "திராவிட குத்தறிவு"வாதிகள் என்று அழைக்கலாம். "தமிழக இனவெறியாளர்கள்" என்பதும் பொருந்துகிறது.

இந்த நுண்ணுணர்வற்ற இழிபிறவிகளுக்கு அங்கீகாரம் தரும் பெயர்களை நாம் உபயோகப்படுத்தவேண்டுமா?

வந்தேமாதரம் !